Skip to main content

நான் கூறுவது அத்தனையும் உண்மையே...பல உண்மைகளை சொல்லத்தான் போகிறேன்...அதிரடி கிளப்பும் மதுமிதா!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

-அரவிந்த்

75-ஆவது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ்-3. இப்பொழுதெல்லாம் சினிமா எடுக்கும் வரை சிவனே என இருந்துவிட்டு, ரிலீஸ் நேரத்தில், "இந்தப் படத்தின் கதை என்னுடையது' என புகார் கிளப்பி கோர்ட்டுக்குப் போவார் ஒரு பார்ட்டி. "அந்தக் கதைக்குச் சொந்தக்காரர் அவர் தான்' என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் தீர்ப்பளிக்கும். அப்படி கதை திருட்டு சமாச்சாரத்தில் மாட்டிக் கொண்ட படம் விஜய்யின் "கத்தி'யும் சமீபத்தில் ரிலீசான ஜெயம் ரவியின் "கோமாளி'யும். உண்மையான கதாசிரியருக்கு திரைமறைவில் வெயிட்டாக செட்டில் பண்ணிவிடுவார்கள். இப்படியும் படங்களுக்கு பப்ளி சிட்டி கிடைக்கும்.

 

kamal



ஏன்? இதே பிக்பாஸ்-3-யை நடத்தும் கமலின் "விஸ்வரூபம்' படம், "நாட்டைவிட்டே கிளம்பப் போறேன்' என்ற சூப்பர் பப்ளிசிட்டியால் 200 கோடி ரூபாயை அள்ளியது. கமல் நடத்துவதால் தானோ என்னவோ, இப்போதைய பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள், சட்டை கிழியும் அளவு சண்டைகள், வார்த்தைப் போர்கள் இவற்றால் பிக் பாஸ்-3க்கு எக்குத்தப்பாகவும் பப்ளிசிட்டி கிடைக்கிறது. நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டுவதால், 1 கோடி ரூபாய் பரிசை தட்டிச் செல்வது யாராக இருக்கும் என பொதுமக்களும் ரொம்பவே ஆர்வமுடன் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். அதனால்தான் "இன்னும் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து'' என்ற ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டனர் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.

 

big boss



பிக்பாஸ்-3 ஆரம்பித்த போது மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்தனர். இரண்டாவது வாரத்திலிருந்து வெளியேற்றுதல், வெளியேற்றப்படுதல் அடிப்படையில் 9 பேர் கழித்துக் கட்டப்பட்டு, இப்போது டைரக்டர் சேரன், நடிகை ஷெரின், முகிலன், தர்ஷன், கவின், லாஸ்லியா, சாண்டி என ஏழு போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டு முறை போலீஸ் புகுந்து பரபரப்பாக்கினார்கள் என்றால், காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும் விருந்தாளியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதாவிற்குமிடையே வாக்குவாதம் முற்றி, மதுமிதா கத்தியால் கையைக் கிழிக்கும் அளவுக்குப் போனது. மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

 

big boss



மூன்று வாரங்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரியை பிக்பாஸின் ரகசிய அறைக்குள் ஒரு நாள் இருக்கச் சொன்னார்கள். இதை ஏற்க மறுத்ததால் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். கஸ்தூரிக்கு முன்பே வெளியேறிய அபிராமி, சாக்ஷி அகர்வால், மோகன் வைத்யா ஆகியோர், கடந்த வாரம் மீண்டும் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியானார்கள். இதற்கு முன்பு நடந்த இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி களிலும், பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறினால், வேறொரு பிரபலத்தைத்தான் போட்டியாளராக உள்ளே அனுப்பினார்கள். ஆனால் இந்த முறை ஏடாகூட சம்பவங்கள் ஏராளமாக நடப்பதால், புதிய போட்டியாளர்கள் யாரும் உள்ளே வரவில்லை. 

 

big boss



அதனால்தான் வனிதாவிற்கு ஏற்கனவே பேசிய சம்பளத்தைவிட கூடுதலாக சில ஆயிரங்களை சம்பளமாகப் பேசி விருந்தினராக உள்ளே வரவைத்து, போட்டியாளராக்கி விட்டார்கள். வாங்கும் சம்பளத்திற்கு அதிகமாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் ரவுசு பண்ணி ரவுண்டு கட்டுகிறார் வனிதா. இதையெல்லாம் கேள்விப்பட்டு கடுப்பாகித்தான், பிக் பாஸ் வீடிருக்கும் போலீஸ் லிமிட்டில் வரும் நசரத்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இரு நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றைக் கொடுத்தார் "ஜாங்கிரி' மதுமிதா.


பிக்பாஸ் போட்டியில் 100 நாட்கள் கலந்து கொண்டு வெற்றிப் பரிசை பெற வேண்டும் என நினைத்தேன். ஆனால் 56-ஆவது நாளில், தமிழ்ப்பற்று குறித்த எனது கருத்தை தெரிவித்ததற்காகவும் சக போட்டியாளர்களின் ஹராஸ்மெண்ட் குறித்தும் பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளரிடமும் நிகழ்ச்சியை நடத்தும் கமலிடமும் சொன்னேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனமும் டி.வி.யும் எனக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து, என்னைப் பற்றி தவறான விமர்சனங்களை பரப்புகிறது. எனவே அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இதுதான் மதுமிதா அளித்துள்ள புகார்.


நாம் மதுமிதாவைத் தொடர்பு கொண்ட போது, "புகாரில் இருப்பது அத்தனையும் உண்மை. இப்போது எனது உடல்நிலை சரியில்லாததால், இரண்டு நாட்களில் இன்னும் பல உண்மைகளை சொல்லத்தான் போகிறேன்''’என்றார். மதுமிதாவின் புகாருக்கு விளக்கம் பெற விஜய் டி.வி.யின் பி.ஆர்.ஓ. லட்சுமியை தொடர்பு கொண்ட போது பதிலளிக்க மறுத்துவிட்டார்.
 

 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.