Skip to main content

நான் கூறுவது அத்தனையும் உண்மையே...பல உண்மைகளை சொல்லத்தான் போகிறேன்...அதிரடி கிளப்பும் மதுமிதா!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

-அரவிந்த்

75-ஆவது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ்-3. இப்பொழுதெல்லாம் சினிமா எடுக்கும் வரை சிவனே என இருந்துவிட்டு, ரிலீஸ் நேரத்தில், "இந்தப் படத்தின் கதை என்னுடையது' என புகார் கிளப்பி கோர்ட்டுக்குப் போவார் ஒரு பார்ட்டி. "அந்தக் கதைக்குச் சொந்தக்காரர் அவர் தான்' என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் தீர்ப்பளிக்கும். அப்படி கதை திருட்டு சமாச்சாரத்தில் மாட்டிக் கொண்ட படம் விஜய்யின் "கத்தி'யும் சமீபத்தில் ரிலீசான ஜெயம் ரவியின் "கோமாளி'யும். உண்மையான கதாசிரியருக்கு திரைமறைவில் வெயிட்டாக செட்டில் பண்ணிவிடுவார்கள். இப்படியும் படங்களுக்கு பப்ளி சிட்டி கிடைக்கும்.

 

kamal



ஏன்? இதே பிக்பாஸ்-3-யை நடத்தும் கமலின் "விஸ்வரூபம்' படம், "நாட்டைவிட்டே கிளம்பப் போறேன்' என்ற சூப்பர் பப்ளிசிட்டியால் 200 கோடி ரூபாயை அள்ளியது. கமல் நடத்துவதால் தானோ என்னவோ, இப்போதைய பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள், சட்டை கிழியும் அளவு சண்டைகள், வார்த்தைப் போர்கள் இவற்றால் பிக் பாஸ்-3க்கு எக்குத்தப்பாகவும் பப்ளிசிட்டி கிடைக்கிறது. நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டுவதால், 1 கோடி ரூபாய் பரிசை தட்டிச் செல்வது யாராக இருக்கும் என பொதுமக்களும் ரொம்பவே ஆர்வமுடன் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். அதனால்தான் "இன்னும் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து'' என்ற ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டனர் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.

 

big boss



பிக்பாஸ்-3 ஆரம்பித்த போது மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்தனர். இரண்டாவது வாரத்திலிருந்து வெளியேற்றுதல், வெளியேற்றப்படுதல் அடிப்படையில் 9 பேர் கழித்துக் கட்டப்பட்டு, இப்போது டைரக்டர் சேரன், நடிகை ஷெரின், முகிலன், தர்ஷன், கவின், லாஸ்லியா, சாண்டி என ஏழு போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டு முறை போலீஸ் புகுந்து பரபரப்பாக்கினார்கள் என்றால், காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும் விருந்தாளியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதாவிற்குமிடையே வாக்குவாதம் முற்றி, மதுமிதா கத்தியால் கையைக் கிழிக்கும் அளவுக்குப் போனது. மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

 

big boss



மூன்று வாரங்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரியை பிக்பாஸின் ரகசிய அறைக்குள் ஒரு நாள் இருக்கச் சொன்னார்கள். இதை ஏற்க மறுத்ததால் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். கஸ்தூரிக்கு முன்பே வெளியேறிய அபிராமி, சாக்ஷி அகர்வால், மோகன் வைத்யா ஆகியோர், கடந்த வாரம் மீண்டும் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியானார்கள். இதற்கு முன்பு நடந்த இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி களிலும், பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறினால், வேறொரு பிரபலத்தைத்தான் போட்டியாளராக உள்ளே அனுப்பினார்கள். ஆனால் இந்த முறை ஏடாகூட சம்பவங்கள் ஏராளமாக நடப்பதால், புதிய போட்டியாளர்கள் யாரும் உள்ளே வரவில்லை. 

 

big boss



அதனால்தான் வனிதாவிற்கு ஏற்கனவே பேசிய சம்பளத்தைவிட கூடுதலாக சில ஆயிரங்களை சம்பளமாகப் பேசி விருந்தினராக உள்ளே வரவைத்து, போட்டியாளராக்கி விட்டார்கள். வாங்கும் சம்பளத்திற்கு அதிகமாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் ரவுசு பண்ணி ரவுண்டு கட்டுகிறார் வனிதா. இதையெல்லாம் கேள்விப்பட்டு கடுப்பாகித்தான், பிக் பாஸ் வீடிருக்கும் போலீஸ் லிமிட்டில் வரும் நசரத்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இரு நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றைக் கொடுத்தார் "ஜாங்கிரி' மதுமிதா.


பிக்பாஸ் போட்டியில் 100 நாட்கள் கலந்து கொண்டு வெற்றிப் பரிசை பெற வேண்டும் என நினைத்தேன். ஆனால் 56-ஆவது நாளில், தமிழ்ப்பற்று குறித்த எனது கருத்தை தெரிவித்ததற்காகவும் சக போட்டியாளர்களின் ஹராஸ்மெண்ட் குறித்தும் பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளரிடமும் நிகழ்ச்சியை நடத்தும் கமலிடமும் சொன்னேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனமும் டி.வி.யும் எனக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து, என்னைப் பற்றி தவறான விமர்சனங்களை பரப்புகிறது. எனவே அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இதுதான் மதுமிதா அளித்துள்ள புகார்.


நாம் மதுமிதாவைத் தொடர்பு கொண்ட போது, "புகாரில் இருப்பது அத்தனையும் உண்மை. இப்போது எனது உடல்நிலை சரியில்லாததால், இரண்டு நாட்களில் இன்னும் பல உண்மைகளை சொல்லத்தான் போகிறேன்''’என்றார். மதுமிதாவின் புகாருக்கு விளக்கம் பெற விஜய் டி.வி.யின் பி.ஆர்.ஓ. லட்சுமியை தொடர்பு கொண்ட போது பதிலளிக்க மறுத்துவிட்டார்.
 

 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.