Skip to main content

மீனவர்களைப் பற்றி கவலைப்படாதவர்தான் மீன்வளத்துறை அமைச்சர்... மக்கள் நீதி மய்யம் கடும் தாக்கு

Published on 18/04/2020 | Edited on 18/04/2020

மீன்பிடி தடைக் காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 
 

 

 

kkk


''ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று  பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?'' என தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். 

 

 nakkheeran app



இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் பேசுகையில், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் மீனவர்களும் கடலுக்கு செல்லக்கூடாது என்று தடை செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் விற்பனை செய்ததையும் தடை விதித்தனர். இதனால் அவர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனைக்காக கோயம்பேட்டில் எப்படி ஏற்பாடு செய்தார்களோ அப்படி இவர்களுக்கும் செய்திருக்கலாம் அதனை அரசு செய்யவில்லை. 
 

mmm


 

மேலும் மீன்களின் இனவிருத்திக்காக வருடம் தோறும் வரும் மீன்பிடி தடைக்காலமும் தற்போது வந்துள்ளது. இதனால் அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் நாட்டுப்படகில் கடலுக்கு சென்றபோது, கடலில் பன்னாட்டு நிறுவன கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். எந்த நோக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் போடப்பட்டதோ, அதன் நோக்கமே சிதைந்துவிடுமே என்று அவர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

 

jjj



இந்தியாவின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை நமது கடற்கரை. பெரும்பான்மையான சமுதாயமான மீனவர்கள் பிரிந்து பிரிந்து வசிக்கிறார்கள் கடற்கரையோரங்களில். மற்றவர்களைப் போல ஒரே இடத்தில் வசித்தால் ஓட்டுக்காக இவர்களை கொண்டாடிப்பார்கள் அரசியல் கட்சியினர். பிரிந்து வாழ்வதால் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. யாராவது அதிமுகவைப் பற்றியோ, அதிமுக அரசைப் பற்றியோ எதிர்த்து பேசினால் அவர்களுக்கு பொறுப்பாக பதில் சொல்லாமல், நக்கலாக பதில் சொல்வதையே சாதனையாக வைத்திருக்கிறாரேயொழிய, ராயபுரத்தில் இருந்து கொண்டு மீனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை.  

கரோனா வைரஸ் தாக்காமல் மக்களை பாதுகாக்க அரசு எப்படி நடவடிக்கை எடுக்கிறதோ, அதைப்போலவே மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

 

Next Story

உற்சாகத்தில் ராயபுரம் மனோ.. என்ன நடக்கிறது களத்தில்! வட சென்னை யார் வசம்?

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
What is happening in the Royapuram Who owns North Chennai

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வடசென்னை தொகுதியில் அ.தி.மு.க. வாக்குகளைச் சேகரிப்பதோடு, குறைவான வாக்குகளைப் பெறக்கூடிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்களாம். இத்தொகுதியில், ராயபுரம், திரு.வி.க. நகருக்கு ஜெயக்குமாரும், ஆர்.கே. நகர், பெரம்பூருக்கு ராஜேஷும், திருவொற்றியூருக்கு மாதவரம் மூர்த்தியும், கொளத்தூருக்கு வெங்கடேஷ் பாபுவும் தேர்தல் பொறுப்பாளர்களாகப் பணிகளைப் பார்க்கிறார்கள். திரு.வி.க. நகர் பகுதிக்கு கூடுதல் தேர்தல் பொறுப்பாளராக சீனிவாசனை நியமித்துள்ளார்களாம்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க.வுக்கென இருக்கும் நிரந்தர வாக்குகளோடு, சிறுபான்மையினரின் வாக்குகளையும், இளைஞர்களின் வாக்குகளையும் பெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளனராம். கடந்த முறை பா.ஜ.க. கூட்டணி காரணமாகக் கிடைக்காத சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக, அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்குமிடையே எந்தவிதத் தொடர்பும் இல்லையென்பதை எடுத்துரைத்து வாக்குகளைத் திரட்டுகிறாராம் ராஜேஷ். அதேபோல் திருவொற்றியூர் மணலி ஆயில் பிரச்சனைக்கு இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படாததைக் கூறியும் மக்களைத் திரட்டுகிறாராம்.

கொளத்தூரில் மட்டும் தி.மு.க. பலம்வாய்ந்ததாக இருப்பதால் ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளில் அ,தி.மு.க.வுக்கான வாக்கு சதவீதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது அ.தி.மு.க. தலைமை. ஆனால், திரு.வி.க. நகர் பகுதிக்கான பொறுப்பாளரான ஜெயகுமாரோ, தென் சென்னையில் போட்டியிடும் வாரிசுக்கு நிலவரம் கலவரமாக இருப்பதால், வடசென்னையில் ஈடுபாடில்லாமல் செயல்படுகிறாராம். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் வசிக்கும் திரு.வி.க. நகர் பகுதியில், அவர்களின் வாக்குகளைக் கவர்வது குறித்து ஆர்வமின்றி இருக்கிறாராம். ஏற்கெனவே பூத் கமிட்டிக்காக 5 கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதியில், தற்போதுதான் முதற்கட்ட நிதியையே ரிலீஸ் செய்துள்ளாராம். இதுபோன்ற உள்ளடிகளைப் புரிந்துகொண்டு தான் தலைமையே திரு.வி.க.நகருக்கு சீனிவாசனை கூடுதலாக பொறுப்பாளராக்கியது. சீனிவாசனையும் முதலில் செயல்படவிடாமல்,  ‘நீ பேப்பர் ஒர்க்கை மட்டும் பார்த்துக்கொள்’ எனக்கூறி அவரைத் தடுத்திருக்கிறார் ஜெயக்குமார். இதுகுறித்தும் தலைமைக்கு செய்தி போக, தற்போது சீனிவாசனும் தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளார்.

What is happening in the Royapuram Who owns North Chennai

இப்படி சின்னச்சின்ன பிரச்சனைகளைச் சரிசெய்த பின்னர், வடசென்னையில் வெற்றிபெறும் இலக்கோடு உற்சாகத்தோடு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ராயபுரம் மனோ. தொகுதியிலிருக்கும் எளிய உழைப்பாளிகளான இளநீர் விற்பவர்கள், துணி தைப்பவர்கள், ஹோட்டலில் தோசை சுடும் மாஸ்டர் என ஒவ்வொருவரின் பணிகளிலும் தானும் ஈடுபட்டு, அவர்களின் மனதைக் கவர்வதோடு வாக்குகளையும் கவர்ந்தபடி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.