Skip to main content

திருக்குறளை தப்பும் தவறுமாகச் சொன்னால் உங்களை நம்ப வேண்டுமா..? - கமல் கேள்வி!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

n



சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடப்பு அரசியல் குறித்து அதிரடியாகப் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே வந்திருக்கு அனைவரின் பெயரையும் சொல்லி அழைக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அதற்கான கால சூழல் விரைவில் வரும். அதனை மெய்ப்படுத்த வேண்டியது உங்களின் கடமை. என்ன இவர், வாக்களியுங்கள் என்று கெஞ்ச மாட்டேன் என்கிறாரே, அதட்டி வாக்களியுங்கள் என்று கேட்கிறாரே என்று கூட நீங்கள் நினைக்கலாம். நாம் நம்மையே அதட்டிக் கொள்ளும் நேரம் இது. நாம் செய்த தவற்றை திருத்திக்கொள்ளும் நேரம் இது. அதையும் தாண்டி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு பேச இருக்கிறேன். ஏனென்றால், இங்கே கூட நாம் கடமை தவறாதவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேர்தல் வந்துவிட்டது, இலவசங்களை அறிவிப்பார்கள், மதத்தின் பெயரால் நெருங்குவார்கள், சாதியின் பெயரால் வளைக்கப் பார்ப்பார்கள். எந்தெந்த முறையில் உங்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பதை தொடர்ந்து யோசித்து வருபவர்கள், உங்களை எப்போதும் சுற்றிச் சுற்றி வருவார்கள். விலைக்கு வாங்கி விடலாம் என்று சில வியாபாரிகள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் வியாபாரி அல்ல, அரசியல் எனக்குத் தொழிலும் அல்ல. 


இங்கே நான் சிறுவனாகப் பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அந்தப் பேச்சையெல்லாம் கண்டு மயங்கியிருக்கிறேன். அப்போது இந்த இடத்திற்கெல்லாம் நாம் வர வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களே அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூட நான் நினைத்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் தற்போது இல்லை. அந்த இடத்தில் தற்போது தகுதியில்லாதவர்கள் பலர் வந்துள்ளார்கள். அதை, நாம்தான் மாற்ற வேண்டும். தமிழர்கள் எல்லாம் சற்று மந்த புத்திக்காரர்கள் என்று நினைத்துக்கொண்டு எங்கிருந்தோ வந்து என்னால் தமிழ் பேச முடியவில்லையே என்று நடிக்கிறார்கள். அவர்களின் நடிப்பு சில சமயம் நம்மையே விஞ்சுகிறது. தமிழ் மொழி சிறந்தது என்று எங்களுக்குத் தெரியாதா? இத்தனை ஆண்டு காலம் கழித்து நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியுமா? தமிழ் மொழி சிறந்தது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் தெரியாதவர்களே அதனை உணர்ந்து கூறியிருக்கிறார்கள். அவர்கள் தமிழ் பேசி விடுவார்களோ என்பதே நம்முடைய வருத்தம். தமிழ்க் கலாச்சாரம் உயர்ந்தது என்று இந்த தேர்தல் நேரத்தில் தான் உங்களுக்குத் தெரியவந்துள்ளதா? இவ்வளவு நாள் அந்த கலாச்சாரம் உயர்ந்தது என்று உங்களுக்கு எப்படித் தெரியாமல் போனது. தேர்தல் வந்தால் தமிழ்க் கலாச்சாரம் தெரிந்து விடும் போலும். 
 

காஷ்மீர் போய் குல்லா வைத்துக்கொண்டால் காஷ்மீர் மக்கள் எல்லாம் நம்மை நம்பி விடுவார்கள் என்ற காலம் எல்லாம் முடிந்து போய்விட்டது. அந்த மாதிரி எண்ணம் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் வாக்குகளாக மாறியிருக்கும். தற்போது உங்கள் வித்தைகள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும். எனவே வித்தை காட்டும் வேலைகளை நிறுத்திக் கொள்ளுங்கள். அது ஒரு போதும் வாக்குகளாக மாறாது. எங்கள் மொழியைப் பற்றி பேசிவிட்டால் நாங்கள் வாக்களித்து விடமாட்டோம். திருக்குறளை தப்பு தப்பாகப் பேசி விட்டால் நாங்கள் நம்பி விடுவோமா? திருக்குறளை தப்பு தப்பாகச் சொன்னால் மார்க் போடுவோம். அது மட்டும் தான் உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. வேறு எதுவும் உங்களுக்குக் கிடைக்காது. நீங்கள் இப்படி எல்லாம் பேசி எங்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது. நாங்கள் விவரம் தெரியாதவர்கள் இல்லை. எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல. திருவள்ளுவருக்குக் குடுமி எல்லாம் வைத்து எங்களிடம் நீங்கள் விளையாடுகிறீர்கள். இந்த விளையாட்டு எங்களிடம் ஒருபோதும் செல்லுபடியாகாது" என்றார்.  


 

 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.