Skip to main content

"கமல் கடந்ததும் கடக்க போவதும்..." வாழ்த்துக்கள் உலகநாயகன்!

Published on 07/11/2019 | Edited on 05/03/2020

1959 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் கருப்பு வெள்ளை திரைப்படம் ஒன்று பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. அந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டிய சிறுவன் ஒருவன், உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் படபிடிப்பு தளத்திற்கு வர முடியாமல் போனது. இது படத்தின் இயக்குநர் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு அந்த சிறுவனுடைய காட்சி எடுக்கும் சமயத்தில்தான் தெரிவிக்கப்படுகிறது. இவ்வளவு கால தாமதமாக கூறுகிறீர்களே? என்று அவர் மற்றவர்களை கடிந்து கொண்டாலும்,  முக்கியமான காட்சியை எடுக்க முடியவில்லையே என்ற வருத்த ரேகை அவர் முகத்தில் உடனடியாக பரவியது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் ஐந்து வயது கூட முழுதாய் நிறைவடையாத ஒரு சிறுவன். அவருக்கு நம்பிக்கை வரவில்லை. பல முறை ரிகர்சல் கொடுத்து தயார் நிலையில் வைத்திருந்த அந்த சிறுவனே பல முறை ரீடேக் வாங்கும் போது இந்த சிறுவன் என்ன செய்யபோகின்றானோ? என்ற அச்ச உணர்விற்கு இடையே டேக் சொல்கிறார் இயக்குநர். அடுத்த ஐந்து நிமிடம் கழித்து கட் சொல்கிறார்.

ஒரு நிமிடம் சிறுவனை ஏற இறங்க பார்க்கிறார் இயக்குநர். முன்னணி நடிகர்களே சோகமான காட்சியில் ஒரு முறையாவது தவறு செய்யும் போது இவன் எப்படி சிறு பிழையும் இல்லாமல் நடித்தான் என்று தனக்குதானே மனதில் கேட்டுக்கொள்கிறார். வந்த உடனேயே தவறாக கணித்தோமே, அதனால் எப்படி அவனிடம் இதை கேட்பது என்ற சஞ்சலம் வேறு அவரிடம். என்ன செய்வது என்று கையை பிசைந்தார். சரி என்று பெயரையாவது கேட்போமே என்று நினைத்து தம்பி! உன் பெயர் என்ன என்று கேட்டார், திரைப்பட காட்சியில் வெளுத்துவாங்கிய அவன், சற்று வெக்கத்தோடு தனது வீட்டில் அழைக்கும் பெயரை சொல்கிறான். நல்லா நடிச்சப்பா என்று அவர் சொல்லி முடித்த நொடியில் இருந்து, ஐந்தாவது மாதத்தில் அந்த சிறுவனுக்கு அந்த படத்தில் நடித்ததற்காக மத்திய அரசு ஜனாதிபதி விருதை அறிவிக்கிறது. அந்த சிறுவன் நடித்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா... சிறுவனின் பெயரை இதற்கும் மேலும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. இன்று பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் தான் அவர்!

 

kamal



தேசிய விருதோடு பயணத்தை ஆரம்பித்த அவருக்கு ஹீரோ என்ற ஸ்தானம் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. அவர் ஏறாத படிகள் இல்லை. போகாத தயாரிப்பாளர் அலுவலகம் இல்லை. காலம் அவரை அங்குல அங்குலமாக சோதித்தது. அதைவிட வறுமை விடாமல் வாட்டியது. பரமகுடியில் அம்மா பாத்துக்கொள்வார்கள். ஆனால் தலைநகரில்... வாலிப வயதில் மீண்டும் கையேந்த அந்த மீசை கூட சரியாத அரும்பாத அந்த இளைஞனுக்கு என்னமோ அதிகப்படியான கூச்சம். பள்ளிப்படிப்பை பாதியில் விட்டாலும் படித்தவர்களிடம் பேசுவது என்பது அவருக்கு தேனாக இனித்தது. தன்னுடைய திரை அரங்கேற்றம் எப்போது என்று காத்துக்கொண்டிருந்த அவரை, தன்னுடைய அரங்கேற்றம் படத்தின் மூலம் அரங்கேற்றம் செய்தார் இயக்குநர் சிகரம் பாலசந்தர். ஆம், அன்று அரங்கேற்றப்பட்ட அவர்தான் இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய குரலை அனாயாசமாக கொடுக்கிறார், எல்லாவிதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்!

சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமா என்ன ஆகுமோ? என்று உதறல் எடுத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு "இதோ தலைவன் இருக்கிறேன்" என்று தன்னுடைய படங்களில் வாயிலாகவே பதில் சொன்னான் இந்த மகாநடிகன். "இவன் என்னைவிட சிறந்த நடிகன்" என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னதே அதற்கு அக்னிசாட்சி! கலைத்தாய் எங்களை எல்லாம் கையை பிடித்துக்கொண்டு நடந்து செல்கிறார், ஆனால் கமலை மட்டும் இடுப்பில் அமர வைத்து அழைத்து செல்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது சூப்பர்ஸ்டார் சாட்சி! 50 ஆண்டுகளாக தமிழகத்தில் கட்சி நடத்தி பழம்தின்று கொட்டை போட்ட கட்சிகளை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி தலைநகரிலேயே அவர்களை தெறிக்கவிட்டதற்கு வரலாறே சாட்சி! ஆனால் ஆழ்வார் பேட்டையில் இருந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் செல்வதற்கு இந்த சாட்சிகளைவிட மிக முக்கியமாக தேவைப்படுவது எதற்கும் குலையாத மனசாட்சி!  உங்களின் திரைப்பயணத்தில் காட்டிய அதே மன உறுதியையும், உத்வேகத்தையும் காட்டினால் "உன்னை வெல்ல இந்த உலகத்தில் யாரு" என்ற உங்களின் பாடல் வரிகளை உண்மையாக்கலாம். உங்களின் இரண்டாவது இன்னிங்ஸில் நீங்கள் இன்னிங்ஸ் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், அரசியல் சினிமா அல்ல என்பதைச் சொல்ல வேண்டிய பொறுப்பு ஒரு ரசிகராக எங்களுக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது!

 

 

 

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.