Skip to main content

கமல் இன்னொரு ரஜினி... த.லெனின் கடும் தாக்கு...

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

 

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்த முதல் தென்னிந்திய திரைப்படக் கலைஞர் கமல்ஹாசன். இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுக்க எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்த வந்த நிலையில் திமுக உட்பட அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு கொண்டு வந்த இந்த மசோதாவை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. 
 

மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒவ்வொரு பகுதியிலும் போராட்டத்தை வீரியமாக கொண்டு சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் மத்திய அரசுக்கு காட்ட வேண்டும் என்பதோடு, இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சிகளோடு நாளை சென்னையில் பிரமாண்ட பேரணியை நடத்த உள்ளது. 

 


 

இந்த பேரணி அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோதே, திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளும் என தாமாகவே முதலில் தெரிவித்தவர் நடிகர் கமல். இதனைத் தொடர்ந்து திரைப்படத்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு பேரணியில் கலந்து கொள்ள திமுக அழைப்பு விடுத்தது. 
 

இந்த நிலையில் நடிகர் கமலை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் சென்று பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். முறைப்படி அழைப்பு நிகழ்ந்த நேரத்தில் திடீரென கமல், திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என அதிரடி அறிவிப்பை கொடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் வினோதமாக அமைந்தது. 

 


 

நடிகர் கமலின் இந்த திடீர் முடிவு ஏன்? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் த.லெனின் நம்மிடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, நடிகர் கமல் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்ததோடு இந்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி போராடிய பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்தார். அவராகவே திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொள்வோம் என்றார். இப்போது திடீரென அவர் பல்டி அடித்திருப்பது, யாருடைய மிரட்டலுக்காக என்று தெரியவில்லை. 
 

அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் தனித்தனியாக அவர்களின் கொள்கை கோட்பாடுகளை வைத்து அரசியல் நடத்தும். ஆனால் பொதுப்பிரச்சனைக்காக அனைவரும் இணைந்து போராடுவது, குரல் கொடுப்பது என்பது வழக்கமான ஒன்று. குடியுரிமை திருத்த சட்ட மசோதா திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கோரிக்கை. கமல் திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொண்டால் திமுகவோடு கூட்டணிக்கு வருகிறார் என்பது அர்த்தமற்ற ஒன்று. 

 

lenin-cpi

 

 

கேரளாவில் எதிரெதிர் துருவமாக அரசியலில் இயங்கும் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் இந்த பிரச்சனையில் ஒருங்கிணைந்து போராடியது. நாளை தேர்தல் வந்தால் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்தான் அங்கு போட்டி. ஆனாலும் தேசத்தின் ஒற்றுமையும், பொது பிரச்சனையிலும் இணைந்து போராடுவது அரசியலில் நாகரீகமான ஒன்று. அதேபோல்தான் கம்யூனிஸ்ட்களின் எதிரியாக பார்க்கப்படும் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி நடத்திய பேரணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டோம்.
 

காரணம், இந்த சட்ட மசோதா இந்திய மக்களுக்கு பேராபத்தை, பிரிவிணையை கொடுக்கும் என்பதால் ஒன்றிணைந்து எதிர்த்தோம். இது மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. அதை  செயல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று கேரளாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்தது. இவையெல்லாம் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள். இதில் எங்கேயும் கூட்டணியும் இல்லை. தொகுதி பங்கீடு பேரமும் இல்லை. நடிகர் கமல் மக்களோடு பணியாற்றி, மக்களுக்காக போராடி அரசியல் இயக்கத்தில் வளர்ந்திருந்தால் இவையெல்லாம் தெரியும். ஆனால் அவர் திடீர் அரசியல்வாதியானவர்தான். 

 

rajinikanth kamal haasan



அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். ரஜினியின் நடவடிக்கையைப்போல் இவரது செயல்பாடு உள்ளது. கமல் இன்னொரு ரஜினியாகவே தெரிகிறார். அரசியல்வாதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் மக்களையும் அவர்களுக்கு தேவையான பிரச்சனைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நடிகர் கமல், இப்போது மாற்றி மாற்றி பேசுவது அவர் கட்சியினரையே ஏமாற்ற வைத்துள்ளது என்றார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.