Skip to main content

கலைஞர் சிலை சிலரைப் படுத்தும்பாடு!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவுக்கும், தந்தை பெரியாருக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அளவுக்கு வேறு யாருக்கும் சிலைகள் இல்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக காமராஜருக்கும், அம்பேத்கருக்கும் சிலைகள் உள்ளன.

 

 

kk

 

 

தந்தை பெரியார் நவீன தமிழகத்தை கனவு கண்டார் என்றால், அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியை அமைப்பதில் வெற்றி கண்டார். மிகக் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால், அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர், பெரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதில் பெரிய அளவில் வெற்றிபெற்றார்.

 

 

அண்ணாவுக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டி பெற்ற தலைவர்கள் வரிசையில் இருந்தார்கள். ஆனால், அண்ணாவுக்கு அடுத்தபடியாக தந்தை பெரியாரின் அன்பைப் பெற்றவர் கலைஞர்தான் என்பதை 1968ல் அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சமயத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

 

ஆம், 1968 ஜனவரியில் சென்னையில் அண்ணா தலைமையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நினைவாகத்தான், மெரினாவுக்கு இன்று அழகு சேர்த்துக் கொண்டிருக்கிற 10 சிலைகள் நிறுவப்பட்டன. அந்த மாநாடு முடிந்த கையோடு, முதல்வர் அண்ணாவுக்கு அன்றைக்கு மவுண்ட்ரோடு என்று அழைக்கப்பட்ட அண்ணாசாலையில் சிலை திறக்கப்பட்டது.

 

 

அண்ணாவுக்கு சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞருக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்து, அனுமதியும் பெற்றார். ஆனால், பெரியாரின் இந்த முயற்சியை அன்றைக்கு பிராமணர்கள் பலர் கடுமையாக விமர்சித்தார்கள். அண்ணாவுக்கு சிலை வைப்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள், கலைஞருக்கு சிலை வைக்கும் முயற்சியை விமர்சித்தார்கள் என்றால், அவர்கள் அன்றைக்கே கலைஞரை எந்த அளவுக்கு கற்பனை செய்திருக்கிறார்கள் என்பது புரியும்.

 

 

கலைஞரை கடுமையான வார்த்தைகளால் பிராமணர்கள் சிலர் அர்ச்சித்தற்கு காரணம் என்னவாக இருந்திருக்க முடியும்? அவரே எழுதியதுபோல அவர் பிறந்த சாதியைத் தவிர வேறு எதுவாக இருந்திருக்க முடியும். ஒருகட்டத்தில் பெரியாரின் சிலை வைக்கும் முயற்சி தேவையில்லாதது என்றும், சிலை வைக்கும் அளவுக்கு தான் தகுதி பெற்றவன் அல்ல என்றும் கலைஞரே மறுத்து அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

kk

 

 

ஆனால், அந்த அறிக்கையைப் பெரியார் பொருட்படுத்தவில்லை. தனது முயற்சி குறித்து விடுதலை இதழில் தலையங்கமே எழுதினார். 1968 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதியிட்ட விடுதலை இதழில் கலைஞரின் அறிக்கையைக் குறிப்பிட்டு, அவர் மறுத்தாலும், சிலை வைப்புக் கமிட்டியார் தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவுடன் அவருக்கு சிலை வைப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

 

 

தந்தை பெரியாரின் ஆசை அண்ணா உயிருடன் இருக்கும்போதே வெளிப்பட்டது ஆகும். அதன்பிறகு, திமுகவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு, கலைஞர் முதல்வரானார். தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மறைந்தார். அவருக்கு அரசு மரியாதை அளிப்பதற்காக தனது ஆட்சியையே பறிகொடுக்கவும் தயாராய் இருந்தார் கலைஞர். அந்த அளவுக்கு பெரியாரின் சீடராய் கலைஞர் இருந்திருக்கிறார் என்பதை அறியமுடியும். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, மணியம்மை, கி.வீரமணி ஆகியோர் தலைமையில் கலைஞருக்கு சிலை அமைக்கும் முயற்சி மீண்டும் உயிர்ப்பெற்று, அண்ணாசாலையில் 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி மாபெரும் விழா எடுத்து, பேராசிரியர் தலைமையில், மணியம்மை முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் கலைஞர் சிலையை திறந்துவைத்தார்.

 

 

kk

 

 

அந்தச் சிலை பலருடைய வயிற்றெரிச்சலுக்கு தொடர்ந்து ஆளானது. கலைஞர் என்ற தலைவரின் வளர்ச்சி ஒரு பிரிவினரை தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தது. 1987ல் எம்ஜிஆர் இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை பயன்படுத்தி, கலைஞர் சிலையை உடைத்தெறிந்தனர். அந்தப் படம் ஏடுகளில் வந்தபோதுகூட எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர்,
 

 

"உடன் பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை-

நெஞ்சிலே தான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!'' என்று கவிதை எழுதினார். அதன்பிறகு அதே இடத்தில் சிலை வைக்க திராவிடர் கழகம் முயற்சித்தபோது கலைஞர் அதை நிராகரித்துவிட்டார்.

 

 

kk

 

 

கலைஞர் தனது ஆட்சியில் எத்தனையோ கலைநயமிக்க சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும், கட்டிடங்களையும் கட்டியிருக்கிறார். திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்திலேதான் திமுகவின் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயம் என்ற மாபெரும் கட்டிடத்தை தொண்டர்களிடம் பெற்ற நிதியில் கட்டி எழுப்பினார். இதோ, அந்த அலுவலகத்தின் அருகிலே, தனது தலைவர் அண்ணாவின் அருகிலே அவரே சிலையாக மாறியிருக்கிறார். 

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.