Skip to main content

"'விக்கி விக்கி' அழுதிருக்கமாட்டார்கள், 'விஸ்கி விஸ்கி'யாக அழுதிருப்பார்கள்!" - கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்! #2  

Published on 09/08/2018 | Edited on 03/06/2020


 

kalaignar pressmeet

 

இன்றிருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரைவிடவும் செய்தியாளர்களிடம் மிகுந்த நெருக்கமும், அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்தவர் கலைஞர். அவரது செய்தியாளர்கள் சந்திப்பு களைகட்டும். அவரை மடக்க வேண்டும் என்று வரும் கேள்விகளை மடக்கி திருப்பி அனுப்பும் திறனே தனி.
 


ஆட்சியில் இல்லாதிருப்பதே நல்லது...

சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு 7.9.06 அன்று நடைபெற்ற சமயம்.

நிருபர்: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருப்பேன் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறாரே...!

கலைஞர்: அவர் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்குச் செய்கிற பெரிய நன்மைதானே. அதைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார் போலும்.

ஜான்சி ராணி அல்ல...

சென்னையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது,

ஒருவர்: உலகத்தில் வேறு எந்தத் தலைவரோடும் எங்கள் தலைவியை ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஜான்சிராணி என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்குமென்று, முன்னாள் அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே...  அப்படியென்ன அந்த அம்மையார் சாதித்து விட்டார்?

கலைஞர்: அந்த அமைச்சரைப் பற்றி நாவலர்தான் சொல்வார். அவர் பெயரையே அவரால் சரியாக எழுதித்தெரியாதவர் என்று. எனவேதான், டான்சிராணி என அழைப்பதைத்தான், தவறுதலாக ஜான்சிராணி எனச் சொல்லியிருப்பார்...

எனச் சொல்லி முடிப்பதற்குள், நிருபர்கள் கூட்டமே சிரிப்பில் சிக்கி கலகலத்துப் போனது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமை

நிருபர்கள் கூட்டமொன்றில், 

ஒருவர்: அண்மையில், தாங்கள் ரசித்த துணுக்கு ஒன்றைக் கூறமுடியுமா?

கலைஞர்: கபீர்தாசர், இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். ஆனால், அவரை இந்துக்களும் திட்டினார்கள், முஸ்லிம்களும் திட்டினார்கள். கபீர்தாசர் இதனைக் கண்டு சிரித்தாராம்."இந்துக்களும்-முஸ்லிம்களும் என நாங்கள் இருவருமே உங்களைத் திட்டுகிறோம். நீங்கள் சிரிக்கிறீர்களே ஏன்?" எனக் கேட்டார்களாம். அதற்கு அவர், "என்னைத் திட்டுவதிலாவது நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறீர்களே. அதனால்தான்" என்றாராம். நாகூர் லோகநாதன் என்பவர் எழுதிய இந்தத் துணுக்கு என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

(நிருபர்களையும் இது கவரத்தானே செய்யும்).

 

 

 


விக்கி விக்கி அழவில்லை...!

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டபின், அதே ஆண்டு மே திங்களில், சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு வந்த நேரம் ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளர்களைத் தீவிரமாகத் தேர்வு செய்தபோது, எம்.ஜி.ஆர். தனது கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே, சட்டமன்ற உறுப்பினர்களாகவிருந்தவர்கள் பலர் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்து ஏமாற்றமடைந்திருந்தனர்.

மறுநாள், கலைஞரைச் சந்தித்த நிருபர்களில் ஒருவர், "நேற்றைய அ.தி.மு.க. பட்டியல் பலருக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்துவிட்டன. சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி முழுமைக்கும் ஒரே முனகல். போர்க்கொடி. இன்னும் சொல்லப்போனால், பலர் விக்கி விக்கி அழுது கொண்டே இருக்கிறார்கள் என முடிப்பதற்குள், கலைஞர் இடைமறித்து,"அன்புள்ள நிருபரே, நீங்கள் சொல்வதைக் கொஞ்சம் மாற்றிக்  கொள்ளுங்கள். அவர்கள் "விக்கி விக்கி" அழுதிருக்கமாட்டார்கள். 'விஸ்கி விஸ்கி'யாக அழுதிருப்பார்கள் என்றதும் ஒட்டுமொத்த நிருபர்களும் சிரிப்பில் மூழ்கிப் போனார்கள்.
 

http://onelink.to/nknapp


எந்தக் காலகட்டம்?

1998-ம் ஆண்டு ஜூன் மாதம் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நடைபெற்ற சமயம்...

ஒரு நிருபர்: நான்கு முறை நீங்கள் முதல்வராக இருந்திருக்கிறீர்கள். இவற்றில் எந்தக் காலகட்டத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறீர்கள்?

கலைஞர்: ஒரு குறிப்பிட்ட காலத்தை மட்டும் நான் சொன்னால் மற்ற மூன்றுக்கும் கோபம் வராதா?

இது போன்ற கேள்விகளை இனி யாரிடம் கேட்போம், இது போன்ற பதில்களை இனி யார் தருவார் என்று நிருபர்கள் கலைஞரை மிஸ் பண்ணுகிறார்கள்.  


 

 

 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார்.