Skip to main content

கலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்! #1  

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

kalaignar smile


இன்றிருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரைவிடவும் செய்தியாளர்களிடம் மிகுந்த நெருக்கமும், அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்தவர் கலைஞர். காலை நான்கு மணியிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளையும் படித்துவிட்டு ஆறு மணிக்கு அதில் பலரை போனில் அழைத்து கருத்துகளை சொல்வார். தன்னை விமர்சித்து வரும் செய்திகளுக்கும்கூட விளக்கம் கொடுப்பார். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பத்திரிகையாளர்களுடன் அவர் பராமரித்த உறவு பாராட்டத்தக்கது என்கின்றனர் எதிர்தரப்பு பத்திரிகையாளர்களும். அதிலும் அவரது செய்தியாளர்கள் சந்திப்பு களைகட்டும். அவரை மடக்க வேண்டும் என்று வரும் கேள்விகளை மடக்கி திருப்பி அனுப்பும் திறனே தனி.
 


பெரியாரும்-பெரியாறும்

கலைஞருக்கு மதுரைப் பல்கலைக்கழகம், 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்த அன்று,(16-12-2006) மதுரையில் நிருபர்கள் அவரைப் பேட்டி கண்டனர். அப்போது பெரியாறு அணை குறித்து நிருபர் ஒருவர் கேட்டபோது, கலைஞர் அவர்கள், "பெரியாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, 'பெரியாறு' பற்றி கேட்கிறீர்கள். 'முல்லைப் பெரியாறு' என்று கேளுங்கள் என்றார். (நிருபர்கள் கூட்டத்தில் சிரிப்பொலி). மீண்டும் ஒருவர் பேட்டியின் இறுதியில், சசிகலா கணவர் நடராசன் வழக்கு ஒன்றிற்காக, உங்களை ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டபோது, "நீண்ட நேரம் பேட்டி கொடுத்தால், இப்படித்தான் கேள்வி கேட்பீர்களோ" என்று பலத்த சிரிப்புடன் பதில் அளித்தார். நிருபர்களும் சிரிப்பில் கலந்தனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை

1997-ம் வருடம் சந்தனகடத்தல் வீரப்பனால் 9 வனத்துறை ஊழியர்கள் கடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அவர்களை மீட்க நக்கீரன் ஆசிரியர் அரசு தூதராக நியமிக்கப்பட்டு வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும்போது 21-7-1997 அன்று தமிழக முதல்வர் கலைஞரும், கர்நாடக முதல்வர் ஜே.ஹெச்.பட்டேலும் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நக்கீரன் ஆசிரியரிடமிருந்து வந்த மீட்பு முயற்சி பற்றிய தகவல்களைக் கூறிக் கொண்டிருந்தனர். அதில் நிருபர்கள், பிரச்சனையை வலுவாக்கும் விதமாக கேள்விகள் கேட்க ஆரம்பித்தவுடன், பேட்டியை முடிவுக்குக் கொண்டுவர நினைத்த கலைஞர் எந்தவித கோபமும் இன்றி சமயம் பார்த்துக் கொண்டிருந்த நேரம், ஒரு நிருபர், 'உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என்று கேட்க, உடனடியாக கலைஞர் "அடுத்த கட்ட நடவடிக்கை எல்லோரும் சாப்பிட செல்லவேண்டியதுதான்" என்று கூறினார்.(மதிய உணவை மறந்து, நிருபர்கள் சிரித்து கலகலப்பாகினர்).
 

 

 

 


'சின்ன'ப் பிரச்சினை இல்லவே இல்லை

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாக, கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையேயான பங்கீடு பற்றி பேச்சுவார்த்தைகள் அறிவாலயத்தில்      நடந்தபின், நிருபர்கள் கலைஞரைப் பேட்டி கண்டனர்.

ஒருவர்: இந்தத் தேர்தலில், முக்கிய பிரச்சினையாக எது இருக்குமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கலைஞர் (சிரித்துக் கொண்டே): வெற்றி தோல்விதான் (சிரிப்பு).

மற்றவர்: உங்கள் கட்சிகளுக்கிடையே இடப்பங்கீட்டில் சின்ன பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர்: "சின்ன பிரச்சனையும் இல்லை. சின்னங்களிலும் பிரச்சனை இல்லை.
(மிகவும் பரபரப்பான சூழ்நிலைகளிலும், கலைஞரின் இயல்பான நகைச்சுவையுணர்வைக் கண்டு நிருபர்கள் வியந்து சிரித்து மகிழ்ந்தனர்).

பூரண மதுவிலக்கு வந்தால் சரி!
 

http://onelink.to/nknapp


நவம்பர் 98-ல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது,

ஒரு நிருபரின் கேள்வி...

"பார் வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்காவிட்டால் மதுபானக் கடைகளை மூடிவிடப் போவதாக மதுக்கடை உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்களே...?

கலைஞரின் பதில்: நல்லதுதானே. அவர்கள் கடைகளை மூடிவிட்டால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தானாகவே வந்துவிடும்தானே...
(நிருபர்கள் சிரிப்பில் மூழ்கினராம்)

 

 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.