Skip to main content

கலைஞர் தி கிரேட்!

Published on 03/06/2018 | Edited on 03/06/2018
kalaignar

 

கலைஞரை இருமுறை நான் விட்டு விலகியிருக்கிறேன். முதல்முறை விலகும்போது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். இரண்டாம் முறை விலகும்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

 

அதாவது மைனராக இருக்கும்போது ஒருமுறையும், மேஜரான பிறகு ஒருமுறையும் அவரைவிட்டு விலகியிருக்கிறேன்.

 

1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து எம்ஜியார் விலகும்போது கலைஞர் மீது எனக்கு வெறுப்பு வந்தது. அது சினிமா பார்க்கும் வயது. திமுக குடும்பமாக இருந்தாலும், கலைஞர் தனது மூத்தமகன் மு.க.முத்துவை சினிமாவில் அறிமுகப்படுத்தி, அதன்மூலம் எம்ஜியாரை கலைஞர் ஒழிக்கப் பார்க்கிறார் என்ற பிரச்சாரத்தை நான் நம்பிவிட்டேன்.

 

ஆனால், சில நாட்களில் ஒரு மலையாளி டீக்கடையில் அவருடைய மகன் என்னைக்காட்டிலும் சின்னப்பையன், கலைஞர் படத்தை காலில் போட்டு மிதித்ததை பார்த்து எனது அப்பா கொதித்தார். அந்த டீக்கடைக்காரர் பயந்துபோனார். தனது மகனை கண்டித்தார். இருந்தாலும் அது எனது மனதுக்குள் பதிந்தது.

 

பின்னர், எம்ஜியார் கட்சியினர் ஆடிய ஆட்டம், அதற்கு திமுகவினர் கொடுத்த பதிலடி எல்லாம் கேட்க நேர்ந்தது. துக்ளக் பத்திரிகையில் எம்ஜியாரை கடுமையாக கிண்டலடிப்பார் சோ. இதெல்லாம் எனக்கு எம்ஜியார் திமுகவை எதற்காக உடைத்தார் என்ற விவரத்தை புரியவைத்தன.

 

மிகக்குறிப்பாக, திமுகவை உடைக்க மத்திய காங்கிரஸ் அரசு ஏன் விரும்பியது. அதற்காக எம்ஜியாரை அச்சுறுத்த என்ன செய்தது என்பதெல்லாம் தெரிந்தபோது நான் கலைஞரிடமே திரும்பவும் வந்தேன். அப்போதெல்லாம் கலைஞரின் நிர்வாகத் திறமை, கட்சியை அவர் வழிநடத்தும் ஆற்றல் இதெல்லாம் எனக்கு தெரியாது.

 

மதுரையில் பியுசி சேர்ந்த மாதத்தில் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. அதுபற்றிய அறிவிப்பே பரபரப்பான செய்தியாக வெளிவந்தது.  நான் எனது அத்தை வீட்டிலிருந்து கல்லூரிக்கு போய்க் கொண்டிருந்தேன்.

 

எமெர்ஜென்சியின் தாக்கம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், எமெர்ஜென்சியை எதிர்த்து திமுக அரசு கடுமையாக போராடிய செய்திகள் கிடைத்தன. திமுகவை எதிர்க்கிற கட்சிகளுக்கு எந்த கட்டுப்பாடையும் கலைஞர் விதிக்கவில்லை. இந்திரா அறிவித்த 20 அம்சத் திட்டம் குறித்து ரேடியோவில் எந்நேரமும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

 

எனது சித்தப்பா திமுகவின் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளராக இருந்ததால் நெருக்கடி நிலை குறித்த திமுகவின் பிரசுரங்கள் படிக்கக் கிடைக்கும். வடக்கே இந்திராவின் இளைய மகன் சஞ்சய்காந்தி ஆடிய ஆட்டமெல்லாம் தெரியவந்தது.

 

பிரதமர் இந்திரா அறிவித்த 20 அம்ச திட்டங்களை வரிசைப்படுத்தி, அவை அனைத்தும் தமிழகத்தில் ஏற்கெனவே திமுக அரசு நிறைவேற்றி இருப்பதை கலைஞர் சட்டமன்றத்தில் விரிவாக பேசினார். அந்த பேச்சு வாளும் கேடயமும் என்ற தலைப்பில் பிரசுரமாக வந்தது. அது ஒரு அருமையான பேச்சு.

 

கலைஞரின் கடிதங்கள் மட்டுமல்ல, மேடைப்பேச்சு மட்டுமல்ல, சட்டமன்ற உரையும்கூட படித்து ரசிக்கும்படி இருக்கும். அதுபோல தமிழக முதல்வர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா? என்றால், இல்லை என்றுதான் சொல்வேன்.

 

எம்ஜியார் ஆட்சியில் கவிஞர் கண்ணதாசனை ஆஸ்தான கவிஞராக நியமிக்கப்பட்டார். கலைஞர் ஆட்சியில் ஏன் இதுபோல ஆஸ்தான கவிஞர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதுகுறித்து ஆசிரியர் சாவியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாவி, ஆஸ்தானமே கவிஞராக இருப்பதால் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்று கூறினார்.

 

பல்துறை வித்தகர் ஒருவர் முதல்வராக இருப்பதை நான் உணரத்தொடங்கிய சமயத்தில்தான், 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திமுக ஆட்சியை இந்திரா கலைத்தார். அதாவது பதவிக்காலம் முடிவதற்கு 6 வாரங்களே இருக்கும் நிலையில் கலைக்கப்பட்டது.

 

கலைஞரின் வரலாற்றிலும், திமுகவின் வரலாற்றிலும் இந்தக் காலகட்டம்தான் மிக முக்கியமானது. ஆம், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட விவரம்கூட மிகத் தாமதமாகவே உறவினர்களுக்கு தெரியவந்தது.

 

கலைஞரின் மகன் ஸ்டாலின், மருமகன் முரசொலிமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். சிறையில் நடக்கும் சித்திரவதைகள்கூட செய்தியாக முடியாத அளவுக்கு பத்திரிகை தணிக்கைத்துறை அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து எனக்குத் தெரிந்து பூடகமாகவாவது செய்திகளை வெளிப்படுத்த போராடிய பத்திரிகைகள் முரசொலி, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் ஆகியவைதான்.

 

திமுக சார்பில் ரகசியத் துண்டறிக்கைகள் எங்களுக்கு கிடைக்கும். அவற்றை திமுக கிளைகளுக்கு கொடுக்கும் வேலையை நான் செய்திருக்கிறேன். திமுக கரை வேட்டி கட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள் என்று பீதி கிளப்பப்பட்ட சமயத்தில் நான் கல்லூரிக்கு எனது சித்தப்பாவின் திமுக கரை வேட்டியை கட்டிச் சென்றிருக்கிறேன். அதெல்லாம் ஒரு தில்லான காலம். திமுகவினர் அப்படித்தான் இருந்தார்கள்.

 

எமர்ஜென்சி கட்டுப்பாடுகளை எப்படி சிக்கிக்கொள்ளாமல் மீறுவது, திமுகவினரை எப்படி சோர்ந்துபோகாமல் உற்சாகப்படுத்துவது என்ற வித்தையை, கலைஞர் பயன்படுத்திய விதம் நவீன ராஜதந்திரங்களின் உச்சமாகக் கருதப்படுகிறது.

kalaignar


இப்படியெல்லாம் கடந்தகால வரலாற்றில் எதுவுமே இடம்பெறவில்லை. திருமண வீடுகளை, பூப்புனித நீராட்டு விழா நடக்கும் வீடுகளை, புதுமனை புகுவிழாக்களை கட்சிக்கூட்டங்களாக நடத்தி கலைஞர் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். அவரை சட்டம் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

திருமணம் முடிந்தவர்களுக்கு, கலைஞருக்காக மீண்டும் திருமணம் நடத்தப்படுவதும், பழைய வீட்டை மராமத்து பார்த்து பெயிண்ட் அடித்து புதுமனை புகுவிழாவாக்குவதும் ரொம்ப ஜாலியாக இருக்கும். கலைஞருக்கு தினமும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

ஒரு நகரில் அனைத்துப் பகுதிகளையும் கவர்பண்ற அளவுக்கு எல்லாப் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். கலைஞர் பின்னால் இளைஞர்கள் சுற்றித் திரிவார்கள். அவரும் தனது உரைகளை அவ்வளவு லாவகமாக அமைத்து நாட்டு நடப்புகளை இலக்கிய கதைகளையும், வரலாற்று சம்பவங்களையும் பயன்படுத்தி ரசிக்க வைப்பார்.

 

அவருடைய உரைகளும் கடிதங்களும் முரசொலியில் வரும்போது படிக்கவே உற்சாகமாக இருக்கும். அந்தச் சமயத்தில்தான் கலைஞர் எனக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். நானும் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை அப்போதுதான் உதித்தது.

 

அதன்பிறகு, எம்ஜியார் ஆட்சி, அதை வீழ்த்த கலைஞர் வகுத்த வியூகங்கள், அந்த வியூகங்களையும், கலைஞர் மற்றும் திமுகவினரின் உழைப்பை வீணடிக்கும் வகையில், அதிமுகவுக்கு வாய்த்த அனுதாப வாய்ப்புகள், கூட்டணி பலம் எல்லாம் என்னைப் போன்றோரை ஒன்றும் செய்ய முடியவில்லை. தோல்விகளும் அவற்றை கலைஞர் எதிர்கொண்ட விதமும் புதிய பாடங்களைக் கற்றுக் கொடுக்கவே பயன்பட்டது.

 

1989 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்த சமயத்தில்தான் அவர் எவ்வளவு பெரிய நிர்வாகி என்பதை அறிய முடிந்தது. எம்ஜியாரால் செய்ய முடியாத விவசாயத்திற்கு இலவச மின்சாரம் திட்டத்தை அமல்படுத்தியது, எம்ஜியார் சிந்தித்தே பார்க்காத வகையில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட நலத்திட்டங்களை மிக எளிதாக அமல்படுத்தினார். தொலைநோக்குத் திட்டங்கள் என்றால் என்னவென்று கலைஞர் ஆட்சியில்தான் தெரிந்துகொண்டேன்.

 

1991ல் கலைஞர் ஆட்சியை எவ்வித காரணமும் இல்லாமல் ஆர்.வெங்கட்ராமன் என்ற பார்ப்பன குடியரசுத்தலைவர் கலைத்தபோதுதான், கலைஞரை ஏன் இப்படி சுழற்றி அடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். 1991ல் ராஜிவ் காந்தி தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லப்பட்டபோது, இரவோடு இரவாக திமுகவினர் ஏன் வேட்டையாடப்பட்டார்கள் என்பதற்கும் காரணம் புரிந்தது.

 

இந்தக் காலகட்டத்தில்தான் திமுகவை பிளக்கும் இரண்டாவது சதி அரங்கேறியது. இப்போது, திமுகவில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாக ஒரு முழக்கத்தை எழுப்பி அந்தப் பிளவு அரங்கேற்றப்பட்டது. இந்த சதிக்கு பெரும்பாலும் துடிப்பான கட்சிக்காரர்கள் இரையானார்கள். நானும் ஒருவனாக இருந்தேன்.

 

அந்தப் பிளவின் சூத்திரதாரியை அவ்வளவு பேர் நேசித்தார்கள். ஆனால், அவருடன் சென்றவர்கள் பெரும்பாலோர் மீண்டும் திமுகவுக்கே திரும்பிவிட்டார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தபோது நானும் அவரை விட்டு விலகிவிட்டேன். பின்னர் சில ஆண்டுகள் தீக்கதிரில் பணியாற்றினேன். அந்தக் காலகட்டத்திலும் கலைஞரை நேசிப்பவனாகவே இருந்தேன்.

 

இரண்டு மிகப்பெரிய பிளவுகளை தனி ஆளாக, தனது வியூகங்களைப் பயன்படுத்தி எதிர்கொண்டவர் கலைஞர். திமுக மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் என்று நிரூபித்தவர்.

 

அவர் அரசியலில் தீவிரப் பங்குகொள்ள முடியாத நிலையிலும் இன்றைக்கும் அவருடைய தலைமையிலேயே திமுக இயங்குகிறது. திமுகவுக்கு எதிராக பல சமயங்களில் செயல்பட்டவர்கள்கூட இன்றைக்கு திமுகவின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். பிரிந்து சென்ற வைகோவே இன்றைக்கு திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற திமுகவை ஆதரிப்பதாக பிரகடனம் செய்திருக்கிறார் என்றால் அதுதான் கலைஞரின் வலிமை. அவருடைய பெருமை!

 

காலம் கடந்தும் வரலாறு பேசும் தலைவர் கலைஞர் கிரேட்தான்!

 

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார்.