Skip to main content

என்னை விலைக்கு வாங்கவும் முடியாது... பொதுக்குழுவை கூட்டவும் முடியாது... கே.சி.பழனிசாமி காட்டம்

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளும்கட்சியான அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் எப்போது கூட்டப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து கேட்பதற்காக அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமியை தொடர்பு கொண்டோம்.
 

ops-eps


 

அதிமுக பொதுக்குழு ஏன் தள்ளிப்போகிறது?
 

ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அது நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் கடைசியில் ஜெயலலிதா பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவார். ஜெயலலிதா இறந்த பின்னர் 2016 டிசம்பர் 29ல் நடந்தது. அதில் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12ல் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்புக்காக ஒரு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஆனால் அது அதிமுகவின் பொதுக்குழு அல்ல. அதன் பிறகு 2018ல் நடக்கவில்லை. 2019ல் இதுவரை நடக்கவில்லை.
 

நீங்கள் தொடர்ந்த வழக்கு எந்த நிலைமையில் உள்ளது?
 

அந்த வழக்கு 2019 செப்டம்பர் 17ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வந்தது. என்னுடைய மனுவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தினகரன் சசிகலா vs ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். வழக்கில் நீதிமன்றம், சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை தவறு. அதை நீக்குவதாக சொல்லியிருக்கிறது. அதேபோல், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகியோர் கட்சி விதிகளை திருத்தம் செய்ததும் தவறு, அதாவது அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளை பறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என திருத்தம் செய்தது தவறு என்று கூறியுள்ளது. இது டிவிஷன் பென்ஞ் தீர்ப்பு. இதைக்காட்டித்தான் தேர்தல் ஆணையத்திற்கு சொல்லுங்கள் என்று வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தாக்கல் செய்யாததால் 06 பிப்ரவரி 2020க்கு இந்த வழக்கு திரும்ப வருகிறது. 

 

k c palanisamy - aiadmk


அதற்குள் பொதுக்குழுவை கூட்டுவார்களா?
 

அது தெரியவில்லை. இவர்களுக்கு ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கிடையாது. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரையில் அதிமுக எம்எல்ஏக்கள் தன் பக்கம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார். எம்எல்ஏக்களை கையில் வைத்திருந்தாலே அரசை நடத்திடலாம், அரசு கையில் இருந்தால் கட்சியை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்.
 

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதை தாண்டி, தன் குடும்பம், வாரிசுகளுக்கு வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வதற்காக கிட்டதட்ட எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டார். உண்மையான அதிமுக விசுவாசிகள், அனுதாபிகள், வாக்காளர்களை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவர்களது நலன்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 
 

தங்களை தற்காத்துக்கொள்வதற்காக கட்சியை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். இது எது வரைக்கும் போகும் என்றால் வரும் 2020 மே, ஜுன் வரை போகும். 2020 பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தல் வரும். அப்போதுதான் கட்சிக்காரர்கள் தேவை, கட்சியை புறக்கணித்தற்கான பலன்களை உணர்வார்கள்.
 

பொதுச்செயலாளராக தான் ஆகுவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக கூறப்படுகிறதே?
 

பொதுக்குழுவைக் கூட்டி அந்த பொதுக்குழுவிலேயே தான் பொதுச்செயலாளராக ஆகிவிடலாம் என்று ஒரு முயற்சியை அவர் எடுக்கிறார். மேலும் டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டு, சசிகலா தரப்புடனும் தொடர்பில் இருந்து அந்த பதவியை பெற நினைக்கிறார். ஆனால் இந்த நடைமுறை செல்லாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 

பொதுக்குழுவை இவர்களால் கூட்ட முடியுமா? முடியாதா?
 

என்னை இவர்களால் விலைக்கு வாங்க முடியாது. இந்த வழக்கு முடியும் வரை பொதுக்குழுவை கூட்டவும் வாய்ப்பு இல்லை. 
 

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடந்தால் போட்டியிடுவீர்களா?
 

கட்டாயமாக போட்டியிடுவேன்.

 

Next Story

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அடுத்தடுத்த திட்டங்கள்..ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

EPS-led AIADMK's next plans

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக  அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. 

 

Next Story

ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல் முற்றுகிறது! ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த ஓபிஎஸ் ! 

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

The OBS-EPS conflict is over! OBS boycotts demonstration

 

ஜெயலலிதா பிறந்த நாளின் போது, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 24-ந் தேதி சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பிற்கு ஓ.பி.எஸ்சை அழைத்துச் செல்லவில்லை. ஓ.பி.எஸ்சிடம் சொல்ல கூட இல்லை எடப்பாடி. இத்தனைக்கும், ஓ.பி.எஸ். கேட்டும் ஜெயக்குமாரைச் சந்திக்க செல்வது பற்றி மூச்சு விடவில்லை இ.பி.எஸ். 

 

இந்த விசயமறிந்து, ஏகத்துக்கும் கோபமான ஓ.பி.எஸ், "இனியும் பொறுப்பதற்கில்லை" என்று ஆவேசப்பட்டார். இந்த செய்தியை முதன் முதலில் நக்கீரன் இணையதளத்தில் நாம் தான் பதிவு செய்தோம். அந்த செய்தியின் இறுதியில், ஜெயக்குமாரை சந்திக்க ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறோம். 

 

இந்த நிலையில், ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதனை புறக்கணித்து விட்டு, தனது நட்பில் இருக்கும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோருடன் புழல் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்தித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

 

அந்த சந்திப்பில், "நீங்கள் கலங்காதீர்கள். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருப்போம். எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் சொல்லாமலே உங்களை சந்திக்க வந்துவிட்டார்" என்று சொல்லி, ஜெயக்குமாருக்கு தெம்பூட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ். மற்றவர்களும் ஜெயக்குமாருக்கு நம்பிக்கையாக பேசியுள்ளனர். 

 

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ், "அதிமுக இன்று நடத்தும் ஆர்ப்பாட்டம் என்னிடம் கேட்காமலே முடிவு எடுக்கப்பட்டது" என்று குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல் முற்றத் துவங்கியுள்ளது. இந்த மோதலில் சமாதானம் இருக்கப் போவதில்லை என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.