Skip to main content

அன்று டேனிஷ் சித்திக்; இன்று ஷிரீன் அபு அக்லே - அதிகாரப் பசிக்கு இரையான பத்திரிகையாளர்!

Published on 12/05/2022 | Edited on 13/05/2022

 

 journalist incident during Israeli raid

 

1997- ஆம் ஆண்டு, தனது 26- வது வயதில் போர்க்களத்தில் இறங்கிய அப்பெண்ணுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பிற்காலத்தில் நமது வாழ்வு ஒரு நித்திய சுடர் ஆகும் என்று. இன்று, அவரது 51 ஆவது வயதில் வீழ்ந்தாலும், அவரது போராட்ட குணத்தாலும், அநீதிக்கு எதிராக தனது குரலாலும் கம்பீரமாக நிற்கிறார், நிற்பார்.

 

'PRESS' என்ற வாக்கியத்தை, நீதிக்கான கடமையை ஏந்தும் அனைவரது இதயத்திலும், அவர்கள் சந்தித்த துயரங்கள் ஒரு வடுவாக வாழ்ந்து கொண்டிருக்கும். பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், ஆபத்துகள் வீற்றிருக்கும் பாதையில் வீறுநடை போட்டு, குண்டு மழை பொழியும் போர்க்களத்தில் நின்று உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்கள் என்றுமே மடிவதில்லை.

 

தலிபான்களால் கொல்லப்பட்ட இந்திய புகைப்படக்கலைஞர் டேனிஷ் சித்திக் அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது, நாம் மற்றொரு மகத்தான பத்திரிகையாளரை இழந்திருக்கிறோம். 51 வயதான அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்ரேலிய படையால், பாலஸ்தீனத்தில், சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார்.  மே 3- ஆம் தேதி, தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடிய ஷிரீன் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என யார் தான் அறிந்திருந்தோம்? போராட்ட குணம் நிறைந்த இதயங்கள், பிறந்த நாளுக்கோ, இறந்த நாளுக்கோ எதற்கும் தயாராகத்தான் இருக்கின்றன.

 

இரண்டு தசாப்தங்களாக போர்க்களத்தில் வாழ்ந்த ஷிரீன், தன்னை எப்போதேனும் தோட்டாக்கள் தாக்கும் என நிச்சயமாக யூகித்திருப்பார். இருந்தும், தனது தோளில் சுமந்தப் பணியை, நீதிக்கான குரலை அவர் எப்போதும் இறக்கி வைத்ததில்லை. ஜெருசலேத்தில் பிறந்த ஷிரீன், பிற்காலத்தில், அரேபிய உலகில் மிகப் பிரபலமான பெண் பத்திரிகையாளராக உயர்ந்து நின்றார். 1997- ல் அல் ஜஸிராவில் பயணிக்க தொடங்கிய ஷிரீன், பாலஸ்தீன அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்கும் பொழுது, இஸ்ரேலிய படையின் தோட்டாக்களுக்கு இரையாகி இருக்கிறார்.

 

சிறிய உலகில் ஒரு நெடும் பயணமாக அது இருந்தாலும், ஆயுதங்களுக்கு எதிராக தனது வலிமையான குரலால், பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறையை சர்வதேச சமூகத்திற்கு பறைசாற்றினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீனிய மக்களின் அவலநிலையைத்  தொடர்ந்து வெளிப்படுத்தினார். இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் இறுதி ஊர்வலத்தை கா(சா)ட்சிப்படுத்தியவர், தற்போது அதே படைகளால் கொல்லப்பட்டது, அப்போர்க்களத்தின் தட்பவெப்ப நிலையை நமக்கு ஆவணப்படுத்தியிருக்கிறது.

 

பத்திரிக்கைத் துறையில் தான் செய்த அளப்பரிய பணி, பாலஸ்தீனிய அகதிகளுக்கு தான் ஆற்றிய சேவை, மற்றும் மற்ற அரேபியர்களும் பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க அவரின் உந்துதல் ஆகியவை மூலமாக ஷிரீன் அவரை வீழ்த்திய தோட்டாக்களை தோற்கடிப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பயங்கரவாதத்தால் பலியான சவுதியின் ஜமால் காஸோக்கி, இந்தியாவின் டேனிஷ் சித்திக், கவுரி லங்கேஷ் போன்றோரின் வரிசையில், ஷிரீனும் பலியாயிருக்கிறார்.

 

வீழ்வது நாமாயினும் வாழ்வது நாடாகட்டும் என்பதுபோல, தான் வீழ்ந்தாலும், தன் பங்களிப்பின்மூலம் மக்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பார். "அழிவின் அளவையோ அல்லது மரணம் சில சமயங்களில் நெருங்கிவிட்டது என்ற உணர்வையோ என்னால் மறக்கவே முடியாது." - ஷிரீன் 2002- ஆம் ஆண்டு உதிர்த்த வார்த்தைகள் இவை. இந்தாண்டு தொடக்கத்தில், அல் ஜசீரா, ஷிரீனின் 25- வது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ஒரு காணொளி வெளியிட்டது. அதில் ஷிரீனின் பேச்சு மறக்கமுடியாதவை, "கடினமான காலங்களில், நான் பயத்தை வென்றேன். யதார்த்தத்தை மாற்றுவது கடினமாக இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் அந்த குரலை உலகிற்கு கொண்டு வர முடிந்தது" என கூறினார்.

 

ஷிரீனின் குரல் எப்பொழுதும் மக்கள் படும் துன்பங்களின் குரலாகவே இருந்திருக்கிறது. அவர்களின் சுதந்திரத்திற்கான, விடுதலைக்கான நம்பிக்கையாய் இருந்தது. கண்ணீர் துடைத்த கைகளை, தற்போது தோட்டாக்கள் துளைத்துவிட்டது. ஆனால், தோட்டாக்கள் தோற்றுப்போகும், ஆயிரம் ஷிரீனின் எழுச்சியினால். பயங்கரவாதமும் தோற்கும். அது தோற்பதற்கு தாமதமாகும், ஆனால் இறுதியில் வீழும். அதற்கு நம் கண்முன் இருக்கும் தற்போதைய சாட்சி இலங்கை.

 

ஷிரீன் வீழ்த்தப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.

 

- அழகு முத்து ஈஸ்வரன் 

 

Next Story

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள்; விடுதிக்குள் புகுந்து தாக்கிய கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The gang that broke into the hostel for islamic students engaged in prayer

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாதம் ரம்ஜான் மாதம் என்பதால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்களும் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சுற்றி எந்த மசூதியும் இல்லாத காரணத்தினால், விடுதியில் தங்கி இருக்கும் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், விடுதியில் ஓர் இடத்தில் கூடி தொழுகை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி இரவு இஸ்லாம் வகுப்பைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில் தொழுகை நடத்தினர். அப்போது, அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய கும்பல், தொழுகை நடத்தி கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. 

மேலும், வெளிநாட்டு மாணவர்களை நோக்கி, 25 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு தாக்குதலில், வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக விடுதிக்குள் வருவதற்குள், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது. 

இதனையடுத்து, காயமடைந்த வெளிநாட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 பேர் கொண்ட கும்பல், விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.