Skip to main content

20 வருடத்திற்கு வேலை இல்லை...ரயில்வே சதி அம்பலம்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

திருச்சி பொன்மலை ரயில்வே காலியிடங்களில் வட இந்தியர்களை நிரப்பு வதற்கெதிராக மறியல் போராட்டம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக மாறியது. அந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 ஹெல்பர் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வு முடிவின்படி, புதிதாக நியமிக்கப்பட்ட 528 பேரில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்கிற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே புதிதாக பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள திருச்சி ரயில்வே கோட்ட எம்.பி.க்கள் குழுத் தலைவர் திருச்சி சிவா, "நியமனம் தொடர்பாக குழுவுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை'' என்கிறார்.

 

railway



இரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் நம்மிடம், "இரயில்வே அப்ரண்டிஸ் தேர்வில் பொன்மலையிலும் போத்தனூரிலும் சேர்த்து மொத்தமாக 813 பழகுனர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. தமிழகத்திலிருந்து பெரிதாக யாருமே விண்ணப்பிக்கவில்லை. இந்த பயிற்சியின்போது தரப்படும் உதவித்தொகை மிகவும் குறைவு என்பதாலும், பயிற்சி மட்டுமே என்பதாலும் தமிழர்கள் ஆர்வம்காட்டவில்லை. இந்த வாய்ப்பு களுக்கு வடஇந்தியர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைதான்'' என்கின்றனர்.

 

politicians



வைகோ தன்னுடைய அறிக்கையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதைக் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் நம்மிடம், "இந்த ரயில்வே நிறுவன விதியில் விளம்பரம் என்கிற தலைப்பில் விதி எண் 110-ல் 4,600 ரூபாய் ஊதியத்திற்கும், அதற்கு கீழுள்ள பணியாளர் தேர்வுக்கும் அந்தந்த பிராந்தியத்தில் விளம்பரம் வெளியிட வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தொடர்புடைய பிராந்தியத்தில் போதுமானோர் விண்ணப்பிக்கவில்லை என்றால் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற பிராந்திய ரயில்வே வாரியத்தில் வெளியிடலாம்.


ஆனால் ரயில்வே வாரியம் இந்த விதியைப் பின்பற்றாமல் நாடு முழுவதும் விளம்பரம் வெளியிட்டதாலே பிற மாநிலத்தார் தெற்கு ரயில்வே வாரியத்தில் சேருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது கடைநிலை ஊழியர்களாக நியமனம் செய்ய 2393 முன்னாள் ராணுவத்தினரை சென்னை ரயில்வே தேர்வாணையம் தேர்வு செய்திருக்கிறது. இவர்கள் மாதாந்திர தொகுப்பு ஊதியம் பெறும் ஒப்பந்த தொழிலாளர்கள். இதனால் இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு தெற்கு ரயில்வேயில் இவர்கள் பணியாற்றுவார்கள்.

இதனால் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை குறையும். இளைஞர்களின் ரயில்வே பணிக்கான வாய்ப்பும் பறிபோகிறது. இந்தியாவிலேயே தமிழக கேரள பகுதிகள் அடங்கிய தெற்கு ரயில்வேயில்தான் மிக அதிக அளவு இந்த மாதிரியான ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனம் நடக்கிறது. ரயில்வே பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனத்தை எதிர்த்து மிகப் பெரிய அளவில், தெற்கு ரயில்வே முழுவதும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் போராட்டத்தை முன்னெடுக்கும்'' என்கிறார்.

வட மாநிலங்களின் ஊடே ரயில்போகும்போது, ரிசர்வ் செய்த இருக்கை களில் அப்பகுதி மக்கள் ஏறியமர்ந்துகொண்டு இறங்கமறுப்பர் என்று பேச்சுண்டு. இப்போதோ தமிழர்களுக்கான ரயில்வே வேலைகளிலும் ஏறியமரத் தொடங்கிவிட்டனர் வடஇந்தியர்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு ரயில்வேயில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் சீட்டுகளைப் இறுகப் பற்றிக்கொள்வதிலே அக்கறை செலுத்தும் மாநில ஆட்சியாளர்கள், மக்களின் பிரச்சினைகள் குறித்து எப்போது யோசிக்கப் போகிறார்கள் என்பதுதான் விடைதெரியாத புதிர். 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.