Skip to main content

'என் க்ரஷ் சமி கபூர்' - ஜெயலலிதாவின் மலரும் நினைவுகள்!!!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

JJ interview BBC


 

மைக்கை எறிந்தார்...

 

முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கென ஒரு வட்டத்தை போட்டு அதனுள் இருந்தார். பல்வேறு ரகசியங்கள், வதந்திகள் இருந்தன. அதனால் எப்பொழுதும் அவர் ஊடகங்களிடமிருந்தும் தள்ளியே இருந்தார். ஆனாலும், செய்தியாகிக் கொண்டுதான் இருந்தார். கலைஞரை போல ஊடகங்களுக்கு அணுக்கமானவராய் எப்பொழுதுமே ஜெயலலிதா இருந்ததில்லை. அவரது  1991-96 ஆட்சியின் பொழுதெல்லாம் முற்றிலும் தமிழ் ஊடகங்களை புறக்கணித்தே வந்திருக்கிறார்.  ஆனாலும் எப்போதாவது ஒரு முறை அவர் அளித்த பேட்டிகள் பரபரப்பேற்படுத்தத்  தவறியதில்லை. அவை பெரும்பாலும் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களாகும்.

 

ஜெயலலிதாவின் மிக புகழ் பெற்ற நேர்காணல் என்றே இதை கூறலாம். 2004இல் பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட 'ஹார்ட்டாக் இந்தியா' (Hard Talk) என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கரண் தாப்பர் ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதாவை தன் கேள்விகளால் சீண்டினார். சற்று ரணகளமாகவே சென்ற பேட்டியில் ஒரு கட்டத்தில் தி.மு.கவை பற்றி  குற்றம் சாட்டும் போது ஜெயலலிதா கையில்  பேப்பர் இருந்தது. அதற்கு கரண் தாப்பர், 'நீங்கள் ஏன்  குறிப்புகளைப்  பார்த்து  சொல்கிறீர்கள்?' என்று கேட்க, கோபமடைந்த  ஜெயலலிதா 'நான் ஒன்றும் பார்த்து படித்து சொல்லவில்லை, உங்கள் முகத்தைப்  பார்த்து தான் சொல்கிறேன்' என்பார். இப்படி அனலாகவே சென்று கொண்டிருந்த நேர்காணல் ஜெ.வின் ஜோசிய நம்பிக்கை பற்றிய கேள்வியில் பற்றி எரிய ஆரம்பித்தது. விருப்பமற்ற முறையில் வந்து முகத்தின் முன் நின்ற கேள்விகளால் கோபமடைந்த ஜெயலலிதா, நேரடியாக கோபத்தை காட்டினார்.  அந்த நேர்காணலின் இறுதியில் 'வரும் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி அடையும் நம்பிக்கை இருக்கிறதா?' என்ற கேள்விக்கு, 'எனக்கு ஜோசியம் பார்த்து கணிக்க தெரியாது, நீங்கள் இங்கு தானே இருப்பீர்கள், பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறிய ஜெயலலிதா, இறுதியில் 'உங்களிடம் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கரண் தாப்பர் கூற, 'உங்களிடம் பேசியது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை'  என்று கூறி  மைக்கை எறிந்து  விட்டு கோபமாக சென்றுவிட்டார்.

 

என் முடிவுகளை நான் எடுக்கவில்லை 
 

JJ interview NDTV


 

2013இல் என்.டி.டிவியில் 'டாக்கிங் ஹெட்ஸ்' எனும் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் பதில்கள் பொறுமையாக இருந்தது. அதன் தொகுப்பாளர் ஜெனிபர் கேள்விகளை ஜெயலலிதாவுக்கு ஏற்ப கேட்டார். 'உங்கள் தனிப்பட்ட வாழ்வும், பொது வாழ்வும் ஒரு போர்க்களமாகத்தானே உள்ளது, அதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அதற்கான சக்தி உங்கள் குடும்பத்தார் அல்லது நண்பர்களிடமிருந்து பெறுகிறீர்களா?' என்ற கேள்விக்கு, 'எனக்குள்தான் எனக்கான சக்தியை பெறுகிறேன். என் குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபட்டதில்லை.  இதுவரை எனக்கான துறையை தேர்ந்தெடுத்தது கூட நானில்லை. சினிமாவிற்கு என் அம்மாவினால்தான் வந்தேன். அரசியலுக்கு எம்.ஜி.இராமச்சந்திரன்தான் அழைத்து வந்தார். அதனால் அனைத்து பிரச்சனைகளையும் நான் காலப்போக்கில் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன். இப்படி தன் தனிப்பட்ட வாழ்வை பகிர்ந்திருந்தார் ஜெயலலிதா.

 

என் க்ரஷ் சமி கபூர்! 

 

JJ interview Simi

 

 

1999ஆம் ஆண்டு சிமி கார்வெல் நடத்திய 'ரெண்டேஸ்வஸ்' என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக அமைந்தது இந்த பேட்டி. மிகவும் உற்சாகமான பேட்டியான இதில் சிமி கார்வல் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசும்பொழுது, 'அப்பொழுது உங்கள் மனதைக் கவர்ந்த ஆண்கள் யாரும் இருந்தனரா' என்று கேட்க, கிரிக்கெட் வீரர் நாரி கான்ட்ராக்டர் மீது 'க்ரஷ்' இருந்ததாகவும், அவரைப் பார்ப்பதற்காகவே அப்பொழுது கிரிக்கெட் போட்டிகளை காணச் சென்றதாகவும் கூறினார். மேலும் ஹிந்தி திரைப்பட நடிகர் சமி கபூரையும் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார். தொகுப்பாளர் சிமி, ஜெயலலிதாவிற்கு பிடித்த பாடல் பற்றி கேட்டு, அதை பாடச் சொன்னார். முதலில், 'இப்பொழுது பழக்கத்தில் இல்லை என்று கூறி பாட மறுத்த ஜெயலலிதாவை, சிரித்துக் கேட்டு, பாடவைத்துவிட்டார் சிமி. 'ஆஜா சனம்' என்ற அந்த ஹிந்தி பாடலை அழகாக பாடுவார் ஜெயலலிதா. இந்த பேட்டி ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஜெயலலிதாவின்  குதூகலத்துடனும் சிரிப்புடனும் இருக்கும்.

 

 

JJ interview simi2

 
இவைதான் ஜெயலலிதாவின் புகழ் பெற்ற நேர்காணல்கள். ஜெயலலிதா, குறைவாகத்தான் பேட்டிகள் கொடுத்துள்ளார். அதுவும் தமிழ் ஊடகங்களுக்கு மிக மிக அரிது. 2011இல் முதல்வராக பதவியேற்ற பொழுது, செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, 'இனிமேல் உங்களை வாரா வாரம் சந்திப்பேன்' என்று கூறினார். அவரது அணுகுமுறை மாறிவிட்டதோ என்று செய்தியாளர்கள் நினைக்க, அடுத்த வாரமே அது தவறென தெரிந்தது. செய்தியாளர் சந்திப்புகள் நடக்கவில்லை. ஊடகங்களிடமிருந்து விலகி விலகி சென்ற ஜெயலலிதாவிடம் கடைசிவரை கேட்கப்படாமலேயே நூற்றுக்கணக்கான கேள்விகள் செய்தியாளர்கள், மக்களின் மனதில் இருக்கின்றன. 

படங்கள் : BBC, NDTV,   Simigarewalofficial 
 
 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.