Skip to main content

'ஜெஸ்ஸி'க்கும் 'ஜானு'வுக்கும் 6 வித்தியாசங்கள்!

Published on 05/10/2018 | Edited on 14/02/2020

தமிழ் சினிமா ரசிகர்கள் என்றென்றும் காதலிக்கும் நாயகிகளில் இருவர் ‘ஜெஸ்ஸி’ மற்றும் ‘ஜானு’. இந்த இரு பாத்திரங்களிலும் நடித்தவர் த்ரிஷா. த்ரிஷா, தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்குப் பிடித்த நாயகியாக பதினைந்து ஆண்டுகளைத் தாண்டித் தொடர்கிறார். இடையிடையே சர்ச்சைகள், விமர்சனங்கள், வயதானவர் என்று குறிப்பிடும் மீம்ஸ்கள் வந்தாலும் 'சாமி' மாமிக்கு இருந்த அதே சார்ம் 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஜெஸ்ஸிக்கு இருந்தது, '96' ஜானுவுக்கும் இருக்கிறது. இத்தனை வருடங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் பல விதமான பாத்திரங்களில் த்ரிஷா நடித்திருந்தாலும் அனைத்தையும் தாண்டி இதுவரை ரசிகர்கள் மனதில், 'இந்த உலகத்தில எவ்ளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் சார் அவளை லவ் பண்ணேன்' என்று லவ் பண்ண வைத்தது 'ஜெஸ்ஸி'தான். '96' படத்தில் த்ரிஷா நடித்த 'ஜானு' பாத்திரம் 'ஜெஸ்ஸி'க்கு டஃப் கொடுத்தது. 'காதலே காதலே தனிப்பெருந்துணையே' என 2000ஸ் கிட்ஸையும் காதலில் கரைய வைத்தாள் 'ஜானு'. இந்த இரு பாத்திரங்களின் ஈர்ப்புக்குக் காரணம் அசால்ட்டான நடை, அதிக அலங்காரமில்லாத அழகு என புற தோற்றம் மட்டுமல்ல, இருவரின் அகத்தோற்றமும்தான். இவர்களால் கிறங்கிப் போனது கார்த்திக்கும் ராமும் மட்டுமல்ல ரசிகர்களும்தான். 'ஜெஸ்ஸி'க்கும் 'ஜானு'வுக்கும் ஒற்றுமைகள் என்ன, வித்தியாசங்கள் என்ன...

 

jessi

ஜெஸ்ஸி


 

janu

ஜானு (எ) ஜானகிதேவி



ஜெஸ்ஸிக்கு சினிமா, பாடல்கள் எல்லாம் ரொம்ப தூரம். கேளிக்கைகள் அவள் குடும்பத்துக்கு ஆகாது. குடும்ப நிகழ்ச்சிகளில், சர்ச்களில் கிட்டார்களுடன் இசைக்கப்படும் இயேசு பாடல்கள்தான் அவளது பாடல்கள். அவள் பார்த்தது மொத்தம் ஐந்து படங்கள்தான். கார்த்திக் திரைப்பட இயக்குனராகப் போகிறேன் என்று சொல்லும்போதே அவள் கிட்டத்தட்ட முடிவு செய்துவிடுகிறாள், இது நடக்காதென்று. ஆனால், ஜானு (எ) ஜானகிதேவி சுற்றியிருப்பவர்களை தன் பாடல்களால் வசீகரிப்பவள். அவள் பாட மேடையேறினால் நண்பர்கள் தங்கள் விருப்பப் பாடல்களை கேட்பார்கள். ஜானு பாடத் தேர்ந்தெடுப்பது மென்மையான பாடல்கள் மட்டுமல்ல. 'சின்னப் பொண்ணு நான், ஒரு சிங்காரப்பூ நான்' என்று அவள் 'ஆச அதிகம் வச்சு' பாடலை அசால்ட்டாக புன்னகைத்துக் கொண்டே பாடி ராமை கிறங்கடிக்கிறாள், நம்மையும்தான். ராம் விரும்பிக் கேட்கும் 'யமுனை ஆற்றிலே' பாடலை மட்டும் பாடாமல் அவனை அலைக்கழிக்கிறாள்.
 

jessi karthik

கார்த்திக் - ஜெஸ்ஸி

 

ram janu

ராம் - ஜானு



தோற்றம், ட்ரெஸ்ஸிங் போன்றவற்றில் ஜெஸ்ஸி, ஜானு இருவருமே கிட்டத்தட்ட ஒரு மாதிரிதான். மாடர்ன் டிரஸ் என்றாலும் மிதமான வண்ணங்கள், நாகரிகமான உடைகள், குறைந்த மேக்-அப் என சிம்பிளாக ஆனால், ஸ்ட்ராங்காக நம் மனதில் நுழைகிறார்கள். ஜெஸ்ஸி வளர்ந்தது சென்னை நகரத்தில். ஜானு வளர்ந்தது தஞ்சாவூரில், என்றாலும் சிங்கப்பூர் சென்று வரும்போது சற்றே ஜெஸ்ஸியை நினைவுபடுத்துகிறாள், தோற்றத்தில் மட்டும்.

ஜெஸ்ஸி, கார்த்திக்கை தனக்கு பிடித்தபின்பும் கூட அதை பெரிதாக வெளிப்படுத்துபவள் அல்ல. அவன் மீது காதல் வந்தபின்பும் கூட, அதை "உன் கூட கொஞ்ச நேரம் ஸ்பென்ட் பண்ணனும் கார்த்திக், ஏதாவது படம் போலாமா?' என்பதுதான் அவளது அதீத வெளிப்பாடு. கார்த்திக் தன்னை விட இளையவன் என்ற எண்ணம் அவளுக்குள் உண்டு, என்றாலும் அவன் மீது உரிமை எடுத்துக்கொள்ளமாட்டாள். ஆனால், ஜானு தன் வகுப்புத் தோழனான ராம் மீது தனக்கிருக்கும் ஈர்ப்பை சொல்லவில்லையே தவிர பல விதங்களில் வெளிப்படுத்துகிறாள். அவனை மிரட்டுகிறாள், அவனது தயக்கத்தை பல இடங்களிலும் அமைதியாகவே கிண்டல் செய்கிறாள். வளர்ந்து பெண் ஆன பின்பு இன்னும் வெளிப்படையாக ராம் மீது தனக்கிருந்த காதலை பேசுகிறாள்.


ஆலப்புழாவிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில், தனக்கே தெரியாமல் தன்னருகே பயணிக்க கார்த்திக் வருவது ஜெஸ்ஸிக்கு பெரிய மகிழ்ச்சி. வழக்கம் போல அதை காட்டிக்கொள்ளாத அவள், அந்த இரவு முழுவதும் அவனுடன் பேசுகிறாள். அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படுகிறது. அங்கு ஒரு முத்தம் நிகழ்கிறது. ஒரு முத்தத்திற்குப் பின்னரும் கூட காதலை ஒத்துக்கொள்ளாதவள் ஜெஸ்ஸி. 'நீ என்னை கிஸ் பண்ணீல, அதுதான் ஃபர்ஸ்ட் டைம் கார்த்திக்' என தன் ஒழுக்க எல்லையைப் பற்றி கார்த்திக்கிடம் சொல்பவள். அந்த முத்தத்தைக் கடக்க நினைப்பவள். ஜானுவோ, 'நீ இன்னும் வெர்ஜினா ராம்?' என்று வெளிப்படையாகக் கேட்டு ராமை நிலைகுலைய வைக்கிறாள். அவன் வெட்கப்படும்போது, இவள் சற்றும் தயங்காமல் 'எப்படிடா உன்னை பொண்ணுங்க விட்டாங்க, நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்டடா' என்று கேட்கிறாள். ராமிடம் தன்னை வெளிப்படுத்துவதில் அவளுக்கு சற்றும் தயக்கமில்லை. ராமை தனக்கானவன் என்றே அவள் நினைக்கிறாள், பள்ளிக் காலத்திலும் திருமணமான பின்பும். ஆனால், ஜெஸ்ஸி கார்த்திக்கின் கோட்டுக்குள் வருவதும் போவதுமாக அலைபாய்கிறாள். அவனையும் அந்தப் பதற்றத்திலேயே வைக்கிறாள்.

 

 

jessi jail

 

janu



ஒரு ஊடல் வரும்போது, கார்த்திக் தன்னை தவிர்க்கிறான் என்ற உணர்வு வரும்போது, "இது முடிஞ்சு போச்சு கார்த்திக், திஸ் இஸ் ஓவர்" என்று மிகப்பெரிய முடிவை அவசரமாக, ஆனால் உறுதியாக எடுத்தவள் ஜெஸ்ஸி. அதன் பின்னர் கார்த்திக் பண்ணும் நூற்றுக்கணக்கான ஃபோன்கால்களையும் எஸ்.எம்.எஸ்களையும் நிராகரிப்பவள். ஆனால், ஜானுவோ சண்டை போட்டுவிட்டுப்  போனாலும், அவளே ராமுக்கு ஃபோன் பண்ணி, "எங்க இருக்க ராம், ரொம்ப தூரமா போய்ட்டியா?" என்று கேட்பவள். மீண்டும் வந்து பேசுபவனை ஏற்பவள்.

ஜெஸ்ஸிக்கு நகைச்சுவை உணர்வு மிகக் குறைவு. கார்த்திக்குடன் வரும் கணேஷ் சார் பேசுவதைக் கேட்டு சிறிதே புன்னகைப்பவள். 'அப்பா கேட்டா உன்னை தம்பி மாதிரின்னு சொல்லிக்கலாம்' என்ற மெல்லிய நகைச்சுவைதான் ஜெஸ்ஸிக்கு உள்ளது. ஆனால் ஜானு, காமெடி சென்ஸில் கலக்குபவள். ராம் கேட்ட பாடலை பாடாமல் அவனை படுத்துவதிலும், 'அண்ணியாரே' என்று கூறும் தோழியிடம் (தேவதர்ஷினி நடித்த பாத்திரம்), "நாத்தனாரே... நீங்க மெதுவா நடந்து போய் அந்த கோட்டை தொட்டுட்டு வாங்க" என்று சிரித்துக் கொண்டே தானும் ராமும் தனியாகப் பேசுவதற்காக அவளை அனுப்புவதிலும் அவளது நகைச்சுவை உணர்வு வெளிப்படுகிறது.

இருவருமே சூழ்நிலையால் காதலனை மணக்க முடியாமல் வேறு ஒருவரை மணந்தவர்கள், இருவரின் திருமணத்தின் போதும் அங்கு அவர்களின் காதலர்கள் இருந்தார்கள். ஜெஸ்ஸி, தன் தந்தை முடிவெடுத்து செய்த முதல் திருமணத்தை தைரியமாக நிறுத்துகிறாள், அத்தனை பேர் முன். ஆனால் அடுத்த முறை அவளே முடிவெடுத்து வேறு ஒருவரை மணக்கிறாள். ஜானுவோ, தன் திருமணத்தை நிறுத்த ராம் வருவானா என்று மனதிற்குள் எதிர்பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல், இருக்கிறானா இல்லையா என்று தெரியாத ஒருவனை எப்படி நம்புவது என்று திருமணம் முடிக்கிறாள். ஜெஸ்ஸி, ஜானு இருவருமே வசீகரிக்கும் தேவதைகள்தான். ஜெஸ்ஸி, வெளிப்படுத்துவது கொஞ்சம்தான், ஆனால், எந்த முடிவிலும் உறுதியானவள். அவள் ஒரு சான்ஸ்தான் தருவாள். ஜானு மனதை வெளிப்படுத்துகிறாள், ஆனால் உள்ளுக்குள் உண்மையில் சற்று பயம் கொண்டவள், ஆனால் எத்தனை முறையும் காதலுக்காக திறந்திருப்பவள்.      

 

 

 

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - விஜய்யின் படத்திற்கு டாப் ஹீரோயின்கள் பரிந்துரை

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
vijay 69 heroine update

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால், அவருக்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தினசரி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடப்பதாக கூறப்படுகிறது. 

vijay 69 heroine update

இப்படத்தை அடுத்து விஜய்யின் கடைசி படமாக உருவாகும் அவரது 69ஆவது படத்தை அ.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் உலா வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா, சமந்தா, மிருனால் தாக்கூர் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகிய நான்கு நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

vijay 69 heroine update

இதனிடையே தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், தனது 69வது படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

அல்லு அர்ஜுனுக்கு ஜோடி - இரண்டு ஹீரோயின்களிடம் அட்லீ பேச்சு வார்த்தை

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
trisha or samantha to pair in atlee next allu arjun movie

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

trisha or samantha to pair in atlee next allu arjun movie

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருவதையடுத்து தற்போது ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா மற்றும் சமந்தா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாளான வருகிற 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. த்ரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், மலையாளத்தில் ஐடென்டிட்டி, ராம் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா படத்தை கைவசம் வைத்துள்ளார். சமந்தா சிட்டாடெல் நெப் தொடரை வைத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வருகிற 8ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாள் விருந்தாக வெளியாகிறது.