Skip to main content

கத்தி குத்து.... 3000 கிமீ நடை பயணம்.... சந்திரபாபுவை தோற்கடித்த ஜெகனின் அரசியல் பயணம்...

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ஆந்திர அரசியலில் காங்கிரஸ் என்றொரு வலிமை மிக்க கட்சிக்கு மிகப்பெரிய சோகம் நேர்ந்தது. ராஜசேகர ரெட்டி என்ற அப்போதைய ஆந்திராவின் வலிமை மிக்க முதல்வர் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். அதனை அடுத்துதான் காங்கிரஸின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்தது. மக்களின் செல்வாக்கு அதிகம் இருந்த ஒய்.எஸ்.ஆர் -க்கு பின் யார் ஆந்திராவை ஆள்வது என்ற குழப்பம் காங்கிரஸ் தலைமையிடத்திற்கு அதிகமாக இருந்தது. அந்த இடத்திற்கு உரிமை கோரினார் அரசியலுக்குள்ளே வராத ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், தலைமையோ அவருக்கு முதலமைச்சர் பதவி தராமல் அரசியலில் அனுபவம் வாய்ந்த ரோசையாவுக்கு தரப்பட்டது. இது ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவருடைய தந்தையின் ஆதரவாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியளித்தது.  ரோசையாவுக்கு முதலமைச்சர் பதவி தரப்பட்டவுடன் அந்த நிலையை பயன்படுத்தி கே. சந்திரசேகர ராவ் தெலங்கானாவை பிரித்து தர வேண்டும் என்று கடுமையான போராட்டங்களை நடத்தினார். வேறு வழியின்றி காங்கிரஸ் அரசும் தெலங்கானாவை பிரித்துக்கொடுக்க ஒப்புக்கொண்டது. 
 

jegan

 

 

இதனயடுத்து தன்னுடைய தந்தை மறைவின் செய்தியை கேட்டு தற்கொலை செய்துகொண்ட நூறுக்கும் மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஜெகன் ஆறுதல் கூறினார். அந்த யாத்திரையை பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும்படி காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியது. அதை மீறியும் ஜெகன் அந்த யாத்திரையை நடத்தினார். இதான் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சில மாதங்களிலேயே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்று கட்சியை நிறுவினார் ஜெகன். 
 

கட்சி தொடங்கியவுடன் இடைக்கால சட்டமன்ற தேர்தலை சந்தித்து பல தொகுதிகளில் வெற்றியை கண்டது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். கடப்பாவில் போட்டியிட்ட ஜெகனும் பெரியளவில் வெற்றிபெற்றார். சுமார் 18 தொகுதிகளில் வெற்றிபெற்றனர். இதனை அடுத்து சொத்து குவிப்பு வழக்கினால் 16 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். அப்போதுதான் தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெகன் மோகன் ரெட்டி சிறையிலேயே 125 மணி நேரங்களுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஜெகன் வெளிவந்த பின்பு 72 மணிநேர பந்துக்கு அழைப்புவிடுத்தார். இவரும் இவரது அம்மா விஜய லக்‌ஷ்மியும் தெலங்கானா உருவாக்கப்பட்டதற்கு தங்களின் எதிர்பை தெரிவித்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.  இன்னும் ஆறு மாதத்தில் பொதுத் தேர்தல் மற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தது. அரசியல் சூழலே வேறு விதமாக இருந்தது, அப்போது ஜெகனின் கட்சி எந்த இடத்தில் இருந்தது என யாருக்கும் தெரியவில்லை.
 

2014ஆம் ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மோடியுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு களத்தில் இறங்கினார். காங்கிரஸின் மேலிருந்த வெறுப்பு, சந்திரபாபுவின் மேல் நம்பிக்கையாக மக்களை திருப்பியது. ஜெகன் மோகன் ரெட்டியை மக்கள் மாற்றாக கருதவில்லை அதனால் நடைபெற்ற அத்தேர்தலில் ஜெகன் 65 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றார். ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டிக்கு போட்டியாக இருந்த சந்திரபாபு நாயுடு 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்தார். பின்னர், சந்திரபாபுவும் மூன்றாம் அணி உருவாகும் இந்திய அரசியலில் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடிக்க போகிறோம் என்று நினைத்தாரா என தெரியவில்லை. பாஜகவுடன் முறித்துக்கொண்டு, மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார்.  
 

jegan

 

 

மோடி போல அரசியல் வியூகங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைத்த ஜெகன் மோகன் ரெட்டி மோடிக்கு 2014 தேர்தல் வியூகங்களை வகுத்தவரையே அடுத்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு வகுக்க கோரினார். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பிரசாந்த் கிஷோருடன் இணைந்தார். இதனையடுத்து பிரசாந்த் வகுத்துக்கொடுத்த வியூகத்தின்படி 15 மாதங்களில் 3,000 கி.மீ. பயணம் செய்து இரண்டரை கோடி மக்களை சந்தித்தார் ஜெகன்மோகன். அப்போதுதான் ஜெகன் மோகன் ரெட்டியை கத்தியால் குத்தி தெலுங்கு தேச தொண்டர் ஒருவர் கொலை செய்ய முயற்சித்தார். ஒட்டுமொத்த மக்களையும் 'ஜெகன் அண்ணா அழைக்கிறார்' என்ற போஸ்டர்களால் கவர்ந்து பொது மக்களையே ஜெகன்மோகனை அண்ணா என அழைக்க வைத்தார். ஜெகனின் பிம்பம் ஒருபுறம் உயர மற்றொரு புறம் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கை சரிக்கவும் திட்டங்களை தீட்டினார்.
 

‘உங்களை நம்பமாட்டோம் பாபு’, ‘பை-பை பாபு’ ஆகிய வாசகங்களுடன் கூடிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பரப்பப்பட்டது. அவரின் இந்த வியூகங்கள் சரியான முறையில் வேலை செய்தன. இது ஆந்திர சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுத்துள்ளது.
 

10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய அப்பாவின் பதவியை சுலபமாக கேட்டார். ஆனால், தற்போது மக்களின் செல்வாக்குடன் தன்னுடைய தந்தை பெற்ற அதே அந்தஸ்துடன் 151 சீட்டுகளை சட்டமன்றத்திலும்,  22 சீட்டுகளையும் பெற்று மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

 

 

Next Story

ஆளும்கட்சி எம்.எல்.ஏவுக்கு சவால்; ஒரு பக்க மொட்டை, மீசையை எடுத்த டிரைவர்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The driver challenged the YSR party MLA

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ளது புட்டபர்த்தி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்  ஸ்ரீதர் ரெட்டி. அரசியல்வாதியான இவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவருக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக புட்டபர்த்தி தொகுதியில் சீட் கொடுத்துள்ளனர். அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதன் காரணமாக ஸ்ரீதர் ரெட்டி இந்தத் தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்க நபராக இருந்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஸ்ரீதர் ரெட்டிக்கு ஏராளமான பணியாளர்கள் இருந்துள்ளனர். அதில், கார் ஓட்டுநராக பங்கர்ராஜூ மகேஷ்வர் ரெட்டி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீதர் ரெட்டியிடம் வேலை பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த டிரைவர், ஸ்ரீதர் ரெட்டி மீது மிகுந்த விசுவாசமாகவும், மரியாதையாகவும் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், திடீரென ஒரு சில காரணத்தால் எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டிக்கும் ஓட்டுநர் பங்கர்ராஜூ மகேஷ்வர் ரெட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரிடம் இருந்து திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார் ஓட்டுநர். இது குறித்து அவரின் நண்பர்கள் சிலர் டிரைவரிடம் கேட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டி மிகவும் மோசமானவர் என்றும், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடமும் ஸ்ரீதர் ரெட்டியால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் நல்லவர் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதனால், சில சமயம் ஸ்ரீதர் ரெட்டியின் ஆதரவாளருக்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீதர் ரெட்டியை கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம், இவரால் நான் மட்டும் பாதிக்கப்படவில்லை எனவும், ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இதனைக் கேட்டு எரிச்சலடைந்த இவரின் நண்பர்கள் சிலர், எம்.எல்.ஏ.வை எதிர்த்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீதர் ரெட்டி மீது நீ என்னதான் குறை சொன்னாலும் மறுபடியும் அவர்தான் இந்தத் தொகுதிக்கு எம்.எல்.ஏ ஆவார் என்றும் கூறியிருக்கின்றனர். இதனால் கடுப்பான ஓட்டுநர் மகேஷ்வர் ரெட்டி, இந்தத் தொகுதியில் கண்டிப்பாக இவருக்கு மறுபடியும் சீட் கொடுக்க மாட்டார்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால், இவர் சொல்வது எதுவும் நடக்காது என அவரின் நண்பர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். அப்போது ஆவேசமான மகேஷ்வர் ரெட்டி, மறுபடியும் புட்டபர்த்தி தொகுதியில் ஸ்ரீதர் ரெட்டிக்கு சீட் கொடுத்துவிட்டால் நான் ஒரு பக்கம் மொட்டையடித்துக் கொள்கிறேன் எனவும், ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதனை நான் உறுதியாகத்தான் சொல்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ஸ்ரீதர் ரெட்டிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஓட்டுநர், அவர் சவால் விட்டது போன்று புட்டபர்த்தியில் உள்ள சத்தியம்மா கோயில் முன்பு பாதி மொட்டையடித்துக் கொண்டார். மேலும், பாதி மீசையையும் எடுத்துக் கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்ரீதர் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், அவர் வெற்றி பெற்றால் தன்னைப் போல் மேலும் பலர் ஏமாற்றப்படுவார்கள் என்றும் ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார். இந்நிலையில், டிரைவர் மகேஷ்வர் ரெட்டி பாதி மொட்டையடித்து பாதி மீசை எடுத்துக்கொண்டு பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

தலைமைச் செயலகம் முன் முற்றுகை போராட்டம்; ஒய்.எஸ்.ஷர்மிளாவை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
YS Sharmila was arrested by the police for Blockade in front of Chief Secretariat for

ஆந்திர மாநில முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஷர்மிளா போட்டியிடாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். 

இதனைத் தொடர்ந்து இவர், கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார். மேலும் அவர் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார். இதனையடுத்து, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் மாநில அரசின் தலைமைச் செயலக அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் ஒய்.எஸ்.ஷர்மிளாவை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்க ஆந்திரா போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அவர் நேற்று (21-02-24) இரவு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்.

இதனை தொடர்ந்து, ஆந்திரா தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விஜயவாடாவில் இன்று (22-02-24) அவர் தொடங்கினார். இதனால், ஷர்மிளாவையும், காங்கிரஸ் கட்சியினரையும் போலீசார் தடுக்க முயன்ற போது தடையை மீறி அவர் முற்றுகை போராட்டத்தை நடத்த முயன்றார்.  இதனால், அவரை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள் ஆந்திரா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.