Skip to main content

ஜெ. சொத்துக்கள் ஏலம்! எடப்பாடி அரசு எஸ்கேப்! -எதிர்க்கட்சிகள்  கப் சிப்!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

உப்புக்குப் பெறாத விஷயங்களைக்கூட, நோண்டி நுங்கெடுத்து, கிண்டிக் கிழங்கெடுத்து, காய்ச்சி வறுத்தெடுப்பதுதான், தமிழகத்தில் பெரும்பாலோரின் பொழுதுபோக்காக இருக்கிறது. மக்களின் மனநிலையை அறிந்தோ என்னவோ, மேடைகளும் பொது விவாதங்களும் அந்த ரசனைக்கு ஏற்றாற்போல் அமைந்துவிடுகின்றன.  ஆனாலும், முக்கியமான ஒரு விஷயத்தை எதிர்க்கட்சியினரோ, எதற்கெடுத்தாலும் வாய்நீளம் காட்டும் அரசியல் தலைவர்களோ கண்டுகொள்ளவில்லை. அது என்னவென்று பார்ப்போம்!


 

jayalalithaa asset case


 

2017 பிப்ரவரி 14-ஆம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என,  கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.100 கோடியை வசூலிப்பதற்காக, அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டது.  மற்ற மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 
 

ஜெயலலிதாவுக்கு அபராதம் என்று தீர்ப்பு வெளிவந்த  ஒரு வாரத்திலேயே, அவருடைய அண்ணன் மகன் தீபக் “போயஸ் கார்டன் வீட்டுக்கு உரியமையாளர்கள் நானும் தீபாவும்தான். என்னுடைய அத்தை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடியை கடன் வாங்கியாவது நான் கட்டுவேன்.” என்று கூறினார். அப்போதே தீபக்கை கலாய்த்து ‘ஜெ.தீபக் தம்பி! டின்னருக்கு காசு இருக்கா? இல்ல.. அம்மா உணவகமா?’ என்று மீம்ஸ்கள் வந்தன. நெட்டிசன்கள் கிண்டலடித்தது போலவே, அபராதத் தொகையைக் கட்டுவதற்கு, தீபக் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை.  
 

ஜெயலலிதாவின் சொத்துக்கள் எவை? 
 

1991-96 காலக்கட்டத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, பல ஊர்களில் நிலங்களை வாங்கினார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமாக 68 சொத்துக்கள் உள்ளன. இந்தச் சொத்துக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ளன. போயஸ் கார்டன் வீட்டின் இரண்டு தளங்கள் முன்பே கட்டப்பட்டவை. 31-A எண் கொண்ட கட்டடம்தான் 1991-க்கு பிறகு கட்டப்பட்டது. ஹைதராபாத் திராட்சை தோட்டமும்  செகந்திராபாத் வீடும் ஜெயலலிதாவின் பழைய சொத்துக்கள் என்பதால்,   ஏலம் விட முடியாது. அதே நேரத்தில், 1996-ல் போயஸ் கார்டன் வீட்டில், கலர் டிவி வழக்குக்காக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட்டு கைப்பற்றி, சென்னை ரிசர்வ் வங்கி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள  அசையும் சொத்துக்களான 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி காலணிகள், 10500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் ஏலத்துக்கு விட முடியும். 68 சொத்துக்கள் என்பது ஒரு கணக்காக இருந்தாலும், சிறுதாவூர், பையனூர், கருங்குழிபள்ளம், ஈஞ்சம்பாங்க்கம், நுங்கம்பாக்கம், அடையார், சோழிங்கநல்லூர், வேலகாபுரம், செய்யூர் போன்ற இடங்களில் உள்ள நிலங்களும், கட்டடங்களும், பல வங்கிகளில் உள்ள இருப்புத்தொகை என அரசுத் தரப்பு அப்போது தாக்கல் செய்த  சொத்துப் பட்டியலில் 306 வகையிலான விபரங்கள் இடம் பெற்றுள்ளன.   


 

jayalalithaa asset case


ஜெயலலிதா சொத்துக்கள் எப்போது ஏலத்துக்கு விடப்படும்?
 

2017, மே இறுதியில், தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு,  வழக்கு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த விபரங்களை உள்ளடக்கிய,  சொத்துக்களைக் கையகப்படுத்த வேண்டிய கடிதத்தை,    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவிட்டது.  பறிமுதல் செய்ய வேண்டிய சொத்துக்கள் குறித்து  ஆட்சியர்கள் ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். இதனை தனி அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். சொத்துக்களை பராமரிப்பது, தேவைப்பட்டால் அரசே அதனை உபயோகிப்பது, அல்லது ஆட்சியர்/நீதிபதி முன்னிலையில் ஏலம் விடுவது என, தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். தமிழக அரசோ,  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபராதத் தொகைக்காக, ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதாவின் நகைகளை ஏலம்விட, ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆமாம். இதுகுறித்து எந்தவித தகவலும் அரசுத் தரப்பில் இருந்து தங்களுக்கு வரவில்லை என்கிறது ரிசர்வ் வங்கி வட்டாரம். 
 

ஊழல் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும்,  ‘ஜெயலலிதா’ என்ற லேபில்,  எடப்பாடி அரசுக்கு  இன்றும் தேவையாக உள்ளது. அதனால்தான், எந்தக் கூச்சமும் இல்லாமல்,   ‘அம்மாவின் அரசு’ என்று மார் தட்டுகிறார்கள்.  அப்புறம் எப்படி,  இந்த அரசு  ஜெயலலிதா முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏலத்துக்கு விடும் என்று எதிர்பார்க்க முடியும்?  
 

தமிழகத்தின் முதலமைச்சர் என்ற அதிகாரத்தை வைத்து, ஊழல் செய்து கோடிகளில் சொத்துக்களைக் குவிப்பார்களாம்.  வழக்கை 21 ஆண்டுகள் இழுத்தடிப்பார்களாம்.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவே ஆனாலும், கிடப்பில் போடுவார்களாம். என்னமாய் நீதிக்குத் தலை வணங்குகிறார்கள்? ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த விவகாரம் குறித்து,    திமுக, காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க.,  அட, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட, இதுவரை எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. எல்லாம் அரசியல்தானோ?

 


 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.