Skip to main content

ஜெ. கொடுத்த வாக்குறுதி..! அலட்சிய எடப்பாடி! அரசுக்கு நட்டம் ரூ.20 ஆயிரத்து 600 கோடி!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021
dddd

 

"அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்கமாட்டேன்' என முதலமைச்சர் எடப்பாடி பிடிவாதம் காட்டி வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள் சங்கத்தினர். இதனால், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொருளாதார வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

 

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, சம்பள உயர்விலுள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட வருடங்களாகப் போராடிவருகிறார்கள் அரசு ஊழியர்கள். அவர்களின் கோரிக்கையை புறந்தள்ளியே வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம்' என 2016 தேர்தலின்போது தெரிவித்தார். அதை நம்பி அ.தி.மு.க.வை அரசு ஊழியர்கள் ஆதரித்தனர். ஆட்சிக்கும் வந்தார் ஜெயலலிதா. நிறைவேற்றாமலேயே இறந்துபோனார். "அம்மா ஆட்சி' என்கிற எடப்பாடியும் கண்டுகொள்ளவில்லை என்ற கொந்தளிப்பு அரசு ஊழியர்களிடம் உள்ளது.

 

பழைய பென்ஷன் திட்டத்தின்படி அரசு ஊழியர் ஓய்வு பெற்றவுடன் குறிப்பிட்ட அளவில் பலன்களும், அதன் தொடர்ச்சியாக மாத ஓய்வூதியமும், இறந்தபிறகு அந்தக் குடும்பத்திற்கு கிடைத்து வந்தது. புதிய ஓய்வூதியத்தில் இவை சாத்தியமில்லை. எல்லாமே தாமதம்தான். அண்மையில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 14ஆயிரம் பேரில் சிலர் இறந்தும் போய்விட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு இன்றளவிலும் பலன்கள் கிடைக்கவில்லை. இத்திட்டத்திற்கான உரிய நெறி முறைகளும் இல்லை.

 

dddd

 

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் இது குறித்து நாம் விவாதித்த போது,’""பழைய ஓய்வூதிய திட்டம்ங்கிறது அரசு ஊழியர் களிடம் மாதம்தோறும் குறிப் பிட்ட தொகையை அரசு பிடித்துக்கொள்ளும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பிறகு அந்த தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தொகை மாதாமாதம் பென்ஷனாக அரசு வழங்கும்.

 

இந்த திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசும் ஊழியர்களும் பங்களிப்பை செலுத்தும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத் தியது. அதாவது, அரசு ஊழியர் களிடம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அதே அளவிலான தொகையை அரசும் செலுத்தும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அந்த தொகை திருப்பித் தரப்படும். இதுதான் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம். இந்த திட்டத்தில் விருப்பமிருந்தால் மாநில அரசு இணைந்து கொள்ளலாம் என்ற அரசாணையின்படி, முதலில் கையெழுத்திட்டு இணைந்தவர் ஜெயலலிதா.

 

"இதனால் தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் நட்டம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யுங்கள்' என போராடினோம். உண்மைகளை காலதாமதமாக உணர்ந்த ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் "புதிய பென் ஷன் திட்டத்தை ரத்து செய் வோம்' என்றதுடன், அது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் கமிட்டியை அமைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இறந்து போனார். வல்லுநர் கமிட்டியின் காலத்தை மட்டும் நீட்டித்தே வந்த முதல்வர் எடப்பாடியிடம் கமிட்டியின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதனை இதுநாள் வரை வெளியிட மறுப்பதுடன் எங்கள் கோரிக்கையில் அக்கறையும் காட்டவில்லை.

 

dddd

புதிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்புத் தொகை, அதற்கான வட்டி தொகை ஆகியவை மூலம் தற்போது சுமார் 36,000 கோடி ரூபாய் தமிழக அரசின் பொதுக்கணக்கில் இருக்கிறது. இந்த தொகையை ரிசர்வ் வங்கியிலுள்ள மத்திய அரசு கருவூலப் பெட்டகத்தில் வைத்திருக்கிறார்கள்.

 

இந்த 36,000 கோடியில் அரசு ஊழியர்களின் தொகை மட்டும் 18,000 கோடி ரூபாய். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால், அரசு பங்களிப்பாக உள்ள 18,000 கோடி அரசுக்கு லாபம். பழைய பென்ஷன் திட்டமும் நடைமுறைக்கு வந்து விடும். இதுதவிர, 1.4.2019 முதல் அரசின் பங்களிப்பு தொகையை மட்டும் 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக மத்திய அரசு உயர்த்திவிட்டது. திட்டத்தில் தமிழக அரசு இணைந்திருப்பதால் இந்த உயர்வை முதல்வர் எடப்பாடி அரசும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

 

அதாவது ஒரு அரசு ஊழியரின் சம்பளத்தில் 100 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதே 100 ரூபாயை அரசும் வழங்கி வந்தது. ஆனால், 1.4.2019 முதல் அரசு ஊழியரிடம் 100 ரூபாய் பிடித்தம் செய்தால் அரசாங்கமோ தனது பங்களிப்பு தொகையை 140 ஆக செலுத்த வேண்டும். இதனால் இந்த 4 சதவீத உயர்வினால் சுமார் 1200 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும். அந்த வகையில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தால் இந்த 1,200 கோடி ரூபாயும் அரசுக்கு லாபம்.

 

இது மட்டுமல்ல, இந்த திட்டத்தில் மத்திய கருவூல பெட்டகத்தில் தமிழக அரசு வைத்துள்ள 36,000 கோடிக்கும் தற்போது 3.17 சதவீத வட்டித் தொகைதான் தருகிறது ரிசர்வ் வங்கி. ஆனால், இந்த 36,000 கோடியில் அரசு ஊழியர்களின் பணமாக இருக்கும் 18,000 கோடிக்கு தமிழக அரசோ 7.1 சதவீத வட்டி தருகிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து 3 சதவீத வட்டி வாங்கும் தமிழக அரசு, ஊழியர்களுக்கு 7 சதவீத வட்டி தருகிறது. இதன் மூலம் 4 சதவீத வட்டி அதிகமாக தருவதால் வருடத்திற்கு 1,400 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம்.

 

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் 20,600 கோடி (18,000+1,200+1,400) ரூபாய் தமிழக அரசுக்கு லாபம் ஏற்படும்.

 

ஆனால், ரத்து செய்வதில் அக்கறை காட்ட மறுக்கிறார்கள் இதனால் 20,600 கோடி ரூபாய் நடப்பாண்டில் நட்டம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 4 லட்சம் கோடிக்கு அதிகமான கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழக அரசு, புதிய பென்சன் திட்டத்தினால் 20,600 கோடி ரூபாய் நட்டத்தையும் சந்தித்து வருவது கவலை தருகிறது'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார் பிரடெரிக் ஏங்கெல்ஸ்.

 

இது குறித்த உண்மைகளை முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., தலைமைச்செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தெரிவிப்பதற்காக, பிரடெரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்ட பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் பல முறை முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.

 

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்கள் பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தினர். இவர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ""எடப்பாடி அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இது மிகப்பெரிய உதாரணம். இப்படிப்பட்ட திட்டங்களால் ஏற்படும் நட்டங்களால்தான் அரசு கஜானா திவாலாகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம்'' என்று உறுதியளித்திருக்கிறார்.

 

தமிழக அரசின் நிதித்துறை வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தபோது, ""முன்னாள் நிதித்துறைச் செயலாளரான தலைமைச் செயலாளர் சண்முகமும், தற்போதைய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அரசுக்கு ஏற்படும் நட்டங்களை குறைப்பது குறித்து எந்த உருப்படியான யோசனையையும் சொல்வதே இல்லை. குறிப்பாக, புதிய பென்ஷன் திட்டத்தின் பாதகங்களை முதல்வர் எடப்பாடியிடமும் நிதி அமைச்சரான துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சிடம் விவரித்து ரத்துசெய்ய முயற்சித்திருக்கலாம். ஏனோ அந்த முயற்சியை அவர்கள் எடுக்க வில்லை''’என்கின்றனர்.

 

இதுபற்றி கருத்தறிய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனை தொடர்புகொள்ள நாம் முயற்சித்தபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது. அலுவலக எண்ணை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் தொடர்ந்து பிஸியாகவே இருந்தது. அரசுத் தரப்பின் விளக்கத்தை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம். 

 


 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.