Skip to main content

அன்று எக்னாமி ரேட் 10, இன்று உலகின் நம்பர் 1 பவுலர்...

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
bumrah


 

ஜஸ்ப்ரிட் பும்ராஹ். ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசை பட்டியலில் பந்து வீச்சில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் பவுலிங் நம்பிக்கை நட்சத்திரம். அதே ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசை பட்டியலில் பேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பவர் விராட் கோலி. கோலியை நாம் கொண்டாடிய அளவில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட நாம்  பும்ராஹ்வை கொண்டாடவில்லை என்பதே உண்மை. 
 

ஒரு நாள் போட்டிகளில் 2016 முதல் இன்று வரை கிரிக்கெட் உலகில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு முக்கிய பங்காற்றியவர் பும்ராஹ். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சாதாரணமாக இன்றுள்ள இந்த இடத்தை அவர் அடைந்து விடவில்லை. மிகப்பெரிய சோதனைகளையும், சில இறக்கங்களையும் சந்தித்து, அதை கடந்துதான் உலகின் நம்பர் 1 பவுலர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இன்றுள்ள வேகபந்து வீச்சாளர்களில் யாரும் இவரை போல யார்கர் வீச இயலாது. ஓவரின் ஆறு பந்துகளையும் யார்கர் பந்துகளாக வீசுவதில் இவருக்கு இந்த தலைமுறையில் ஈடுஇணை கிடையாது. வாசிம் அக்ரம், லசித் மலிங்கா வரிசையில் இவரும் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கபடுகிறார்.


2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார் பும்ராஹ். தனது முதல் ஐ.பி.ல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கினார். விராட் கோலி, க்ரிஸ் கெயில் போன்ற உலகத்தரம் வாய்ந்த அதிரடி வீரர்களுக்கு பந்துவீச நேர்ந்தது. தனது முதல் ஓவரை இன்று நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ள கோலிக்கு வீசினார். முதல் இரண்டு பந்துகள் பவுண்டரி. மூன்றாவது பந்து டாட். நான்காவது பந்து மீண்டும் பவுண்டரி. ஐந்தாவது பந்தில் கோலியை எல்.பி.டபள்யூ. முறையில் ஆட்டமிழக்க செய்தார். அவரின் மூன்றாவது ஓவரில் கெயில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி. இப்படி சோதனைகளை சந்தித்தாலும் 4 ஓவரில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்த போட்டியில் 3  ஓவரில் 38  ரன்களை கொடுத்தார். விக்கெட் ஏதும் விழவில்லை. 2013-ல் விளையாடிய இரண்டு போட்டிகளில் எக்னாமி ரேட் 10.

 

bumrah


 

2014-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 11 போட்டிகளில் விளையாடிய பும்ராஹ் 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். 2015-ல் 4 போட்டிகளில் 3 விக்கெட்கள், எக்னாமி ரேட் 12.  தனது பந்து வீச்சில் உள்ள குறைபாடுகளை கணடறிந்து அதை மாற்றுவதில் பயிற்சி எடுக்க தொடங்கினார். அதற்கு பிறகு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 9 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தினார். மற்ற உள்ளூர் போட்டிகளிலும் மிகசிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்தார். 

2016-ன் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முஹம்மது சமியின் காயம் காரணமாக பும்ராஹ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினார். அன்று முதல் இன்று வரை அவருக்கு ஏறுமுகம் தான். அந்த தொடரில் கிடைத்த 1 ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். டி20-ன் 3 போட்டிகளில் 6 விக்கெட்களை கைபற்றினார். பிறகு இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் 3 விக்கெட்கள், எக்னாமி ரேட் 4.60.  அடுத்து நடைபெற்ற ஆசிய கோப்பை டி20-ன் 5 ஆட்டங்களில் 6 விக்கெட்கள், எக்னாமி ரேட் 5.22.  

 

bumrah


 

கடந்த மூன்று வருடங்களில் நடந்த ஐ.பி.ல்.-லில் 44 போட்டிகளில் 52 விக்கெட்கள், எக்னாமி ரேட் 7. ஐ.பி.ல்.-ன் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார். இதுவரை 44  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 78 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார், எக்னாமி ரேட் 4.45. சர்வதேச டி20-ல் 37 ஆட்டங்களில் 46 விக்கெட்கள்,  எக்னாமி ரேட் 6.74.  இப்படி விக்கெட்கள் வீழ்த்துவதிலும், ரன்களை கட்டுபடுத்துவதிலும் வல்லவரான இவர் இந்திய அணிக்கு கிடைத்தது பாக்கியம். இந்திய அணிக்கு ஜாகிர் கானுக்கு பின்பு சிறந்த பவுலர்கள் இல்லாமல் தவித்த உலகத்தரம் வாய்ந்த புவனேஷ் மற்றும் பும்ராஹ் கிடைத்துள்ளனர். 


இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும்போது கேப்டனின் முதல் அழைப்பு பும்ராஹ்க்கு தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிவார். ஒருநாள் போட்டிகளில் 40-50 ஓவர்கள், டி20-ல் 15-20 ஓவர்கள் என இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுபடுத்தி, விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை தடுமாற செய்வதில் இன்றைய காலகட்டத்தில் இவருக்கு இணை யாரும் இல்லை. பேட்ஸ்மேன்களுக்கு இணையாக, சில சமயம் அதிகமாக ஆற்றலை வெளிபடுத்தும் பவுலர்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.  
 

 

 

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.