Skip to main content

370-வது சட்டப்பிரிவு நீக்கம்! இனி என்னவாகும் காஷ்மீர்?

Published on 05/08/2019 | Edited on 05/08/2019


                       
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (5.8.2019) அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவரும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்கிற அந்தஸ்து பறிபோயிருக்கிறது. 
 

மேலும், இந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக உடைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு.  மத்திய அரசின் இத்தகைய முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. பாஜகவின் இந்த முடிவுகளை அதிமுக எம்.பி.க்கள் வரவேற்று ஆதரித்திருக்கிறார்கள். 

 

kashmir


 

மத்திய அரசின் இந்த முடிவுகள் தேசம் முழுவதும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் நாம் பேசிய போது, ‘’ மத்திய பாஜக அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் இனி  சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் இருக்கும்.  அதேபோல சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.
 

இதனை வைத்து ஆய்வு செய்கிறபோது, இனி ஜம்மு - காஷ்மீருக்கு தனிக் கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது. இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கும் பொருந்தும்.  மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியல் சாசனத்தின் 370-வது விதி. இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம்.  


 

 

இந்திய அரசியல் சாசனத்தின்  238 வது பிரிவு இம்மாநிலத்திற்குப் பொருந்தாது என்ற நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனி அனைத்துத் துறை சார்ந்து  மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்குக் கொண்டு வர முடியும். மேலும், வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணம் முடித்தால், அந்த ஆண்களால் காஷ்மீரில்  சொத்துகளை வாங்க முடியும். முன்பு  இந்த அதிகாரம் கிடையாது. 
 

இனிமேல் இந்தப் பிரச்சனை எப்படி அணுகப்படும் என்பதும் கேள்விக்குறியானது. காஷ்மீர் பிரச்சினை இன்றல்ல. ; நேற்றல்ல. பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பே சிறு சிறு கலகங்களாகத் தொடங்கின. ஆங்கிலேயர்கள் சாமர்த்தியமாக இதில் காய்களை நகர்த்தி தங்களுடைய இருப்பையும், ஆதாயத்தையும் பெருக்கிக் கொண்டனர்.  பஞ்சாப்பை பிடித்து ஆப்கானை ஆக்கிரமித்ததைப் போல, காஷ்மீர் பிரச்சினையிலும் சிக்கல் உருவானது.  ஆங்கிலேயர்களுக்குப் பல வகைகளிலும் துணையாக நின்ற ரன்பீர்சிங்கை, காஷ்மீர் அரசராக அங்கீகரித்தனர். அவருடைய வாரிசான ஹரிசிங்தான், அதாவது மத்திய அமைச்சர் கரண் சிங்கின் தந்தையார் காலத்தில்தான் பல நிகழ்வுகள் நடந்தேறின. 
 

இப்படியான சிறுசிறு பிரச்சினைகள் இருந்த சூழலில், நாடு 1947-இல் விடுதலை பெற்றது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவின்போது காஷ்மீர் சிக்கல் பெரிதாக எரிய ஆரம்பித்தது.  பல மன்னராட்சி சமஸ்தானங்கள், குறிப்பாக, இன்றைக்கு பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத், ஜோத்பூர், ஜூனாகத் மற்றும் பஞ்சாப் பகுதியில் உள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடு இணைய வேண்டுமென்று ஜின்னா போன்றவர்கள் விரும்பியதாகக் கூறப்படுவதுண்டு.


 

 

இதில் ஒரு சில பகுதிகள், அதிக இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கொண்ட சமஸ்தானங்கள் ஆகும்.  குறிப்பாக ஜம்மு-காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டுமென்று பாகிஸ்தான் மும்முரம் காட்டியது.  ஆனால், ஜூனாகத் சமஸ்தானத்தில் பெரும்பான்மையானோர் இந்தியாவுடன் இணைய வேண்டுமென்ற விருப்பத்தின்படி இந்தியாவோடு இருந்துவிட்டது.  இந்த நிலையில் ஜின்னாவும், லியாகத் அலிகானும் பாகிஸ்தானோடு சேர்ந்தால்தான் இஸ்லாமியருக்கு நல்லது என்று பிரச்சாரம் மட்டுமல்லாமல், வேறு சில நடவடிக்கைகளிலும் இறங்கினர். அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் மீது படையெடுத்தது.
 

கரண்சிங்கின் தந்தையார் மன்னர் ஹரிசிங், இந்தச் சூழலில் இந்தியாவின் உதவியை நாடினார்.  ஷேக் அப்துல்லாவும் இஸ்லாமியரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தன்னுடைய காய்களை போராட்டக் களத்தில் நகர்த்தினார். ஹரிசிங் கையறு நிலையில் இருந்தார். பாகிஸ்தான் இராணுவமும் நெருங்கிவிட்டது. ஹரிசிங்கிடம் நேருவும், படேலும், "நீங்கள் உதவ வேண்டும். இந்திய இராணுவத்தை அனுப்புங்கள் என்று அழைத்தால் அனுப்புவோம். அதுமட்டுமல்லாமல், இந்தியாவோடுதான் இணைவோம் என சொல்லுங்கள்" என்று நிபந்தனையும் போட்டனர்.

 

K S Radhakrishnan


 

 "உங்களையும், உங்கள் சமஸ்தானத்தையும் இந்தியா பாதுகாக்கும் என்ற உத்தரவாதத்தையும் தருகிறோம்" என்று பிரதமர் நேருவும், உள்துறை அமைச்சர் படேலும் அப்போது  கூறினர்.  கூறியவாறே ஹரிசிங்கையும், அவர் சமஸ்தானத்தையும் இந்திய அரசு காப்பாற்றியது. அவரும் உறுதியளித்தவாறு 1947, அக்டோபர் 26ஆம் தேதி முறைப்படி இந்தியாவோடு இணைந்தார். 
 

அந்த வகையில் இன்றைக்கு நீக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் 370, 35A  ஆகியன, காஷ்மீரின் தனித்தன்மையைப் பாதுகாக்க இந்திய அரசு ஒத்துக்கொண்டது.  இதற்கான ஒப்பந்தங்களில் ஹரிசிங்கும், இந்திய அரசும் முறைப்படி கையொப்பமிட்டனர்.  இந்தப் பிரிவுகளை பின்னாள்களில் ரத்து செய்யச் சொல்லி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்ததெல்லாம் உண்டு.   இந்த நிலையில் பாகிஸ்தான், தன் எல்லைப் பக்கத்தில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு, "ஆசாத் காஷ்மீர் " என்று தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது.  நேருவின் ஆட்சிக் காலத்தில் 1964-ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் ஏற்பட்ட காலத்தில் காஷ்மீரின் வடகிழக்குப் பகுதியில் சீனாவும் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இதை பாகிஸ்தானும் அன்று ஆதரித்தது. 

 

amit shah


 

இந்த நிலையில் பண்டித நேரு, காஷ்மீர் சிக்கலை ஐ.நா. மத்தியஸ்தத்திற்கு விட்டுவிட்டார். அன்றைய உள்துறை அமைச்சர் படேலும் நேருவின் இந்த முடிவுக்கு மாறுபட்டார்.  ஐ.நாவுக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றதில் இருந்து, கிணற்றில் போட்ட கல்லாக ஒரு தீர்வு எட்டப்படாமல் சீனாவும், பாகிஸ்தானும் தங்களது விருப்பத்திற்கேற்றவாறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே வந்தன. இடைப்பட்ட காலத்தில் பொதுவாக்கெடுப்பு என்கிற விவாதம் வந்தபோது, " ஆசாத் காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறினால்தான் சாத்தியம் " என்று ஐ.நா.வில் தெரிவித்தது இந்தியா. 
 

             காஷ்மீர் அழகான, அமைதியான பூமி. இன்றைக்கு கலவர பூமியாக மாறியதற்கு உலகப் புவியரசியலும் ஒரு காரணம்.  காஷ்மீர் பிரச்சினையின் விளைவாக 1980-களில் பஞ்சாபிலும் சிக்கல்கள் கடுமையாக இருந்தன.  காஷ்மீர் மக்கள் பலர் இந்தியாவுடன் இருக்கத் தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். யாசிம் மாலிக் போன்ற சிலர் , வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்றும் காஷ்மீரில் இருப்பவர்களே சொல்கின்றனர். காஷ்மீர் பிரச்சினையில் ஒவ்வொருவரும் தவறான அணுகுமுறையில் நடத்திச் சென்றுவிட்டனர் என்பதே யதார்த்தம்.  காஷ்மீர் விவகாரத்தில் கண்டிப்பும் வேண்டும் ;  அனுசரணையும் வேண்டும். அதுவே தீர்வுக்கு வழி.  காஷ்மீர் மீண்டும்  அழகிய, அமைதியான பூமியாகத் திரும்பட்டும் ‘’ என்கிறார் மிக அழுத்தமாக !  
 

 

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.