Skip to main content

பேனை பெருமாளாக்குகிறதா பாஜக அரசு?

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய மத்திய அரசு, தனது முடிவை காஷ்மீர் மக்களும், உலக நாடுகளும் வரவேற்பதாக கூறியது. ஆனால், சீனாவோ இந்தப் பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கே கொண்டுபோய்விட்டது.
 

thumb

 

 

தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை காஷ்மீரிகளுக்கே உண்டு என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 11 முறை தீர்மானம் இயற்றியிருப்பதாகவும், அந்தத் தீர்மானங்களை வலியுறுத்தும் வகையிலேயே இந்தப் பிரச்சனையை ஐ.நா. விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது.
 

அதாவது இந்தப் பிரச்சனை இப்போது சர்வதேச பிரச்சனையாகி இருக்கிறது என்பதே உண்மை. இதற்கிடையே பாகிஸ்தானுடன் மோதல் போக்கை தவிர்த்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணிக்கும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு யோசனை தெரிவித்திருக்கிறார்.
 

அதைத்தொடர்ந்து ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி அரை மணிநேரம் பேசினார். அப்போது, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் தலைவர்களால்தான் பதற்றம் ஏற்படுகிறது. அவர்களுடைய நடவடிக்கைகளால் பதற்றத்தை தணிக்க முடியாது என்று ட்ரம்ப்பிடம் கூறியிருக்கிறார்.
 

சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மக்கள் வரவேற்பதாக மத்திய அரசு இதுவரை கூறிவந்தது. ஆனால், 15 நாட்களாகியும் அங்கு அமைதி திரும்பவில்லை. லட்சம் ராணுவ வீரர்களை தெருக்களில் நிறுத்தி, அமைதி திரும்பியதாக கூறினாலும், காஷ்மீரில் வாழும் பண்டிட்டுகள், டோக்ராக்கள், புத்தமதத்தினர் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதாவது, காஷ்மீரில் நிலத்தை வாங்கவோ விற்கவோ வெளி ஆட்களுக்கு உரிமை கொடுக்கக்கூடாது என்றும், காஷ்மீரில் வெளி ஆட்களை குடியமர்த்தி மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எதற்காக மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததோ அந்த நோக்கத்தையே இவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

காஷ்மீரில் பள்ளிகளைத் திறந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பிள்ளைகளைத்தான் காணோம் என்கிறார்கள். மிகச் சிறிய அளவிலேயே மாணவர்கள் வந்ததாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

பள்ளிகளைத் திறந்த அரசு கல்லூரிகளை எப்போது திறக்கும் என்பது தெரியவே இல்லை. அரசு அலுவலகங்கள் எப்போது இயங்கும், மக்கள் எப்போது வீடுகளை விட்டு வெளியே வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்பதெல்லாம் கேள்விகளாகவே நீடிக்கின்றன.
 

வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் மட்டுமே காஷ்மீரைக் குறித்த உண்மையான செய்திகளை வெளியிடுவதாகவும், உள்ளூர் செய்தி நிறுவனங்களில் அரசுக்கு சாதகமானவை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
 

மத்திய ராணுவ அமைச்சரும் மற்ற பாஜக தலைவர்களும் பேனைப் பெருமாளாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் ஹரியானா, மகாராஸ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களுக்காக பல பொய்களை பரப்பி வருகிறார்கள்.
 

kashmir

 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த இந்தியா, பாலகோட் தாக்குதலைக் காட்டிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார். இதை குறிப்பிட்டு ராஜ்நாத் சிங் ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அப்போது, பாலகோட் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலையும், அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கில் தீவிரவாதிகள்  கொல்லப்பட்டதையும் இம்ரான்கான் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறினார்.
 

பாலகோட்டில் ஆளில்லாத வனப்பகுதியில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், அதைக்காட்டிலும் பெரிய தாக்குதலுக்கு இந்தியா திட்டமிடுவதாகத்தான் இம்ரான்கான் சொல்லியிருந்தார். அவர் சொன்ன விஷயத்தையே மாற்றி, பாஜக அரசின் வீரதீரச் செயலைப் போல ராணுவ அமைச்சரே பேசியிருப்பது தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.