Skip to main content

பேனை பெருமாளாக்குகிறதா பாஜக அரசு?

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய மத்திய அரசு, தனது முடிவை காஷ்மீர் மக்களும், உலக நாடுகளும் வரவேற்பதாக கூறியது. ஆனால், சீனாவோ இந்தப் பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கே கொண்டுபோய்விட்டது.
 

thumb

 

 

தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை காஷ்மீரிகளுக்கே உண்டு என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 11 முறை தீர்மானம் இயற்றியிருப்பதாகவும், அந்தத் தீர்மானங்களை வலியுறுத்தும் வகையிலேயே இந்தப் பிரச்சனையை ஐ.நா. விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது என்றும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது.
 

அதாவது இந்தப் பிரச்சனை இப்போது சர்வதேச பிரச்சனையாகி இருக்கிறது என்பதே உண்மை. இதற்கிடையே பாகிஸ்தானுடன் மோதல் போக்கை தவிர்த்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணிக்கும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு யோசனை தெரிவித்திருக்கிறார்.
 

அதைத்தொடர்ந்து ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி அரை மணிநேரம் பேசினார். அப்போது, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் தலைவர்களால்தான் பதற்றம் ஏற்படுகிறது. அவர்களுடைய நடவடிக்கைகளால் பதற்றத்தை தணிக்க முடியாது என்று ட்ரம்ப்பிடம் கூறியிருக்கிறார்.
 

சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மக்கள் வரவேற்பதாக மத்திய அரசு இதுவரை கூறிவந்தது. ஆனால், 15 நாட்களாகியும் அங்கு அமைதி திரும்பவில்லை. லட்சம் ராணுவ வீரர்களை தெருக்களில் நிறுத்தி, அமைதி திரும்பியதாக கூறினாலும், காஷ்மீரில் வாழும் பண்டிட்டுகள், டோக்ராக்கள், புத்தமதத்தினர் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதாவது, காஷ்மீரில் நிலத்தை வாங்கவோ விற்கவோ வெளி ஆட்களுக்கு உரிமை கொடுக்கக்கூடாது என்றும், காஷ்மீரில் வெளி ஆட்களை குடியமர்த்தி மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எதற்காக மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததோ அந்த நோக்கத்தையே இவர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

காஷ்மீரில் பள்ளிகளைத் திறந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பிள்ளைகளைத்தான் காணோம் என்கிறார்கள். மிகச் சிறிய அளவிலேயே மாணவர்கள் வந்ததாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

பள்ளிகளைத் திறந்த அரசு கல்லூரிகளை எப்போது திறக்கும் என்பது தெரியவே இல்லை. அரசு அலுவலகங்கள் எப்போது இயங்கும், மக்கள் எப்போது வீடுகளை விட்டு வெளியே வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்பதெல்லாம் கேள்விகளாகவே நீடிக்கின்றன.
 

வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் மட்டுமே காஷ்மீரைக் குறித்த உண்மையான செய்திகளை வெளியிடுவதாகவும், உள்ளூர் செய்தி நிறுவனங்களில் அரசுக்கு சாதகமானவை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
 

மத்திய ராணுவ அமைச்சரும் மற்ற பாஜக தலைவர்களும் பேனைப் பெருமாளாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் ஹரியானா, மகாராஸ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களுக்காக பல பொய்களை பரப்பி வருகிறார்கள்.
 

kashmir

 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த இந்தியா, பாலகோட் தாக்குதலைக் காட்டிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார். இதை குறிப்பிட்டு ராஜ்நாத் சிங் ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அப்போது, பாலகோட் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலையும், அந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கில் தீவிரவாதிகள்  கொல்லப்பட்டதையும் இம்ரான்கான் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறினார்.
 

பாலகோட்டில் ஆளில்லாத வனப்பகுதியில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், அதைக்காட்டிலும் பெரிய தாக்குதலுக்கு இந்தியா திட்டமிடுவதாகத்தான் இம்ரான்கான் சொல்லியிருந்தார். அவர் சொன்ன விஷயத்தையே மாற்றி, பாஜக அரசின் வீரதீரச் செயலைப் போல ராணுவ அமைச்சரே பேசியிருப்பது தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

Next Story

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி பங்கேற்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Ramdas, Anbumani participate in the BJP public meeting

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தெரிவிக்கையில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இந்த முடிவை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு ஆகும். எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் விபரங்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார். சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி என்ற அறிவிப்பை நாளை (19.03.2024) காலை செய்தியாளர் சந்திப்பின் போது ராமதாஸ் அறிவிக்க உள்ளார். அதே சமயம் பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க.வுக்கு தர்மபுரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம் மற்றும் மத்திய சென்னை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் நாளை (19.03.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். 

Next Story

கோவையில் ‘ரோடு ஷோ’வைத் தொடங்கினார் பிரதமர் மோடி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Prime Minister Modi started the 'road show' in Coimbatore

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18  ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன் 4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வந்துள்ளார். பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு சென்றார். அங்கிருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, ரோடு ஷோவை பிரதமர் மோடி தொடங்கினார். திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார்.