Skip to main content

“கலைஞர் பெயரை சொன்னதற்காக எம்.ஜி.ஆர். அடித்தார்...” - நினைவுகளைப் பகிரும் ஜாகுவார் தங்கம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Jaguar thangam spoke about  Kalaignar and MGR

 

சினிமா சண்டை பயிற்சியாளர், இயக்குநர், தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களுடன் நெருங்கி பழகியவர். சினிமா, அரசியல், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜாகுவார் தங்கம், முன்னாள் முதல்வர்களுடனான தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அவர் நமக்களித்த பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் இங்கே.

 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடனான அனுபவம்:


1977ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் திருச்சிக்கு வரும்போது, அவருடைய நிகழ்ச்சிக்காக நான் சிலம்பம் சுற்றினேன். அதில் கவச கலையை ஆச்சரியத்துடன் பார்த்த எம்.ஜி.ஆர்., கைதட்டி உற்சாகப்படுத்தினார். அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராகவனந்தம் என் கையைப் பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆர் அருகில் அழைத்துச் சென்றார். நான் அவரை அருகிலிருந்து பார்க்கும்போது மிகவும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து அவருடைய பளபளப்பான சட்டை, அவருடைய தோற்றத்தைப் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட்டேன். அவரைப் பார்த்தவுடன் எல்லாம் மறந்து பேச முடியாமல் இருந்தேன். அப்போதைய அமைச்சரிடம் இவர் தொழில் ரீதியாக என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டார். என்னை அருகில் அழைத்து விசாரித்து, மறுநாள் ஹோட்டலுக்கு வந்து சந்திக்குமாறு கூறினார். மறுநாள் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு முழுக்க போலீஸ் நின்றிருந்தது. என் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளதால் நெருங்கிச் செல்ல தயங்கி நின்றேன். பிறகு எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. வந்து விவரம் கேட்க, எம்.ஜி.ஆர். வரச் சொன்னதை அவரிடம் சொல்லிவிட்டு, போலீஸுக்கு பயந்து இங்கே இருப்பதாகச் சொன்னேன். உடனே அவர் என்னை மேலே அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் கோபம் அடைந்து, “உன்ன எப்ப வரச் சொன்னா எப்ப வர” என்றார். நான் கீழே நடந்ததை சொன்னேன். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்ததில் அவரது கண்களிலிருந்து தண்ணீரே வந்துவிட்டது. பின், என்னை டிபன் சாப்பிடச் சொன்னார். மேலும், என்னை சென்னைக்கு வந்துவிடுமாறு சொன்னார். என் மீது வழக்கு இருக்கிறது வாரம்தோறும் சென்று கோர்ட்டில் கையெழுத்துப் போட வேண்டும்  என்று சொன்னேன். அதன்பின்பு என் மீது இருந்த வழக்குளை எல்லாம் தீர்த்து வைத்தார்.

 

இதெல்லாம் முடிந்து சென்னை சென்றேன். அங்கு அவரைக் கண்டதும், சாப்டியா என்று கேட்டு என்னுடைய கையை முகர்ந்து பார்த்தார். தாயைத் தவிர வேறு யாரும் கையை முகர்ந்து பார்க்க மாட்டார்கள். அவருடைய இந்தச் செயலை பார்த்தவுடன் நான் கண் கலங்கி அழுதுவிட்டேன். பிறகு தொழில் ரீதியாக என்ன செய்கிறாய் என்றார். நான், சிலம்பம் சுற்றிக்கொண்டு சும்மாதான் இருக்கிறேன் என்றேன். அவர் உடனே என்னை சினிமாவில் சேர்ந்துவிடு என்று சொன்னார். ஆனால், கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் வருடம் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில் ஒருநாள் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது அவர் விளையாட்டாய் “ஷூட்டிங்ல ரொம்ப பிஸியா” எனக் கேட்டார். அப்போதுதான் எனக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்காததைச் சொன்னேன். உடனே அவர், அப்போது இதயக்கனி படத்தில் சண்டைப் பயிற்சியாளராக இருந்தவரிடம் என்னைப் பற்றிச் சொல்லி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அப்போதிலிருந்து என்னுடைய சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. 

 

முன்னாள் முதல்வர் கலைஞருடனான அனுபவம் பற்றி:


எம்.ஜி.ஆர். உடன் பயணம் செய்து கொண்டே இருந்தேன். இருந்தபோதிலும் கலைஞர் உடனான அனுபவம் என்பது எதிர்பாராதது. அவருடைய படங்களில் வேலை செய்துள்ளேன். அவருடைய நாடகங்களிலும் நடித்துள்ளேன். ஒருமுறை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தொடர்பான பிரச்சனையின் போது என்னை கடத்தி சென்றுவிட்டனர். அது தொடர்பாக அவர் என்னை சந்திக்க சொல்லி அவர் வீட்டில் இருந்து போன் வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை, அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். மிகவும் பதற்றத்துடன் அவர் வீட்டில் அமர்ந்து இருந்தேன். பிறகு அவரது உதவியாளர் என்னை மேலே அழைத்துச் சென்றார். அங்கு நான் அறையினுள் நுழைந்ததும் முதல்வர் கலைஞர் உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் என்னை உட்காருய்யா என்றார். நீங்கள் உட்காருங்கள் நான் உட்காருகிறேன் என்றார். இல்லை ஐயா, நீங்கள் மூத்தவர் அதனால் நீங்கள் உட்காருங்கள். அப்புறம்  நான் உட்காருகிறேன் என்றேன். உடனே அவர், என்னய்யா என் வீட்டிற்கே வந்து எனக்கே  ஆர்டர் போடுற என்று சிரித்தார். 

 

அதன் பிறகு, என்னைக் கடத்திய வழக்கில் காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார். ஒருமுறை மகாபலிபுரத்தில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. நான், அங்கு இருந்தேன். அப்போது அங்கு கலைஞர் வந்திருந்தார். என்னைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து விவரம் கேட்டார். பின் சென்னைக்கு திரும்பிப் போவது குறித்துக் கேட்டார். நான் பஸ்ஸில் போவதாகச் சொன்னேன். ஆனால் அவர் என்னை தனது காரில் ஏறச் சொல்லி அவருடன் சென்னைக்கு அழைத்து வந்தார். வழியில், ‘எங்க போகணும்’ என்று கேட்டபோது, கிண்டின்னு சொன்னேன். ‘வீடு எங்கனு கேட்டார்’, கே.கே.நகரில் இருந்து நடந்து சென்றுவிடுவேன் பக்கம்தான் என்றேன். உடனே அவர், ‘எங்க? எம்.ஜி.ஆர். நகரா’ என்று கேட்டுவிட்டு, “எம்.ஜி.ஆர். இல்லன்னா, நான் இல்ல; நான் இல்லன்னா எம்.ஜி.ஆர். இல்ல” என்று சொல்லி வீட்டிலேயே இறக்கிவிட்டார். வெளியில் இருப்பவர்களுக்குத்தான் கலைஞரும், எம்.ஜி.ஆரும் எதிரும் புதிருமாக இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால் கலைஞரும் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பாசம் கொண்ட நெருங்கிய நண்பர்கள். 

 

இதற்கு மற்றொரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒருமுறை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் கலைஞரை ‘கருணாநிதி’ என்று சொன்னார். உடனே எம்.ஜி.ஆர், கோபம் அடைந்து அவரின் முகத்தில் ஒரு அறை விட்டார். ‘கலைஞர்’னு சொல்லு என்று சொல்ல வைத்தார். அவரும் கலைஞர் என்று திரும்ப சொன்னார். இப்படி கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே அண்ணன் தம்பி பாசத்தை விட அதிகமான பாசத்தை ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்தனர். 

 

 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.