Skip to main content

“கலைஞர் பெயரை சொன்னதற்காக எம்.ஜி.ஆர். அடித்தார்...” - நினைவுகளைப் பகிரும் ஜாகுவார் தங்கம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Jaguar thangam spoke about  Kalaignar and MGR

 

சினிமா சண்டை பயிற்சியாளர், இயக்குநர், தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களுடன் நெருங்கி பழகியவர். சினிமா, அரசியல், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜாகுவார் தங்கம், முன்னாள் முதல்வர்களுடனான தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அவர் நமக்களித்த பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் இங்கே.

 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடனான அனுபவம்:


1977ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் திருச்சிக்கு வரும்போது, அவருடைய நிகழ்ச்சிக்காக நான் சிலம்பம் சுற்றினேன். அதில் கவச கலையை ஆச்சரியத்துடன் பார்த்த எம்.ஜி.ஆர்., கைதட்டி உற்சாகப்படுத்தினார். அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராகவனந்தம் என் கையைப் பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆர் அருகில் அழைத்துச் சென்றார். நான் அவரை அருகிலிருந்து பார்க்கும்போது மிகவும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து அவருடைய பளபளப்பான சட்டை, அவருடைய தோற்றத்தைப் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட்டேன். அவரைப் பார்த்தவுடன் எல்லாம் மறந்து பேச முடியாமல் இருந்தேன். அப்போதைய அமைச்சரிடம் இவர் தொழில் ரீதியாக என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டார். என்னை அருகில் அழைத்து விசாரித்து, மறுநாள் ஹோட்டலுக்கு வந்து சந்திக்குமாறு கூறினார். மறுநாள் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு முழுக்க போலீஸ் நின்றிருந்தது. என் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளதால் நெருங்கிச் செல்ல தயங்கி நின்றேன். பிறகு எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. வந்து விவரம் கேட்க, எம்.ஜி.ஆர். வரச் சொன்னதை அவரிடம் சொல்லிவிட்டு, போலீஸுக்கு பயந்து இங்கே இருப்பதாகச் சொன்னேன். உடனே அவர் என்னை மேலே அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் கோபம் அடைந்து, “உன்ன எப்ப வரச் சொன்னா எப்ப வர” என்றார். நான் கீழே நடந்ததை சொன்னேன். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்ததில் அவரது கண்களிலிருந்து தண்ணீரே வந்துவிட்டது. பின், என்னை டிபன் சாப்பிடச் சொன்னார். மேலும், என்னை சென்னைக்கு வந்துவிடுமாறு சொன்னார். என் மீது வழக்கு இருக்கிறது வாரம்தோறும் சென்று கோர்ட்டில் கையெழுத்துப் போட வேண்டும்  என்று சொன்னேன். அதன்பின்பு என் மீது இருந்த வழக்குளை எல்லாம் தீர்த்து வைத்தார்.

 

இதெல்லாம் முடிந்து சென்னை சென்றேன். அங்கு அவரைக் கண்டதும், சாப்டியா என்று கேட்டு என்னுடைய கையை முகர்ந்து பார்த்தார். தாயைத் தவிர வேறு யாரும் கையை முகர்ந்து பார்க்க மாட்டார்கள். அவருடைய இந்தச் செயலை பார்த்தவுடன் நான் கண் கலங்கி அழுதுவிட்டேன். பிறகு தொழில் ரீதியாக என்ன செய்கிறாய் என்றார். நான், சிலம்பம் சுற்றிக்கொண்டு சும்மாதான் இருக்கிறேன் என்றேன். அவர் உடனே என்னை சினிமாவில் சேர்ந்துவிடு என்று சொன்னார். ஆனால், கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் வருடம் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில் ஒருநாள் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது அவர் விளையாட்டாய் “ஷூட்டிங்ல ரொம்ப பிஸியா” எனக் கேட்டார். அப்போதுதான் எனக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்காததைச் சொன்னேன். உடனே அவர், அப்போது இதயக்கனி படத்தில் சண்டைப் பயிற்சியாளராக இருந்தவரிடம் என்னைப் பற்றிச் சொல்லி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அப்போதிலிருந்து என்னுடைய சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. 

 

முன்னாள் முதல்வர் கலைஞருடனான அனுபவம் பற்றி:


எம்.ஜி.ஆர். உடன் பயணம் செய்து கொண்டே இருந்தேன். இருந்தபோதிலும் கலைஞர் உடனான அனுபவம் என்பது எதிர்பாராதது. அவருடைய படங்களில் வேலை செய்துள்ளேன். அவருடைய நாடகங்களிலும் நடித்துள்ளேன். ஒருமுறை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தொடர்பான பிரச்சனையின் போது என்னை கடத்தி சென்றுவிட்டனர். அது தொடர்பாக அவர் என்னை சந்திக்க சொல்லி அவர் வீட்டில் இருந்து போன் வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை, அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். மிகவும் பதற்றத்துடன் அவர் வீட்டில் அமர்ந்து இருந்தேன். பிறகு அவரது உதவியாளர் என்னை மேலே அழைத்துச் சென்றார். அங்கு நான் அறையினுள் நுழைந்ததும் முதல்வர் கலைஞர் உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் என்னை உட்காருய்யா என்றார். நீங்கள் உட்காருங்கள் நான் உட்காருகிறேன் என்றார். இல்லை ஐயா, நீங்கள் மூத்தவர் அதனால் நீங்கள் உட்காருங்கள். அப்புறம்  நான் உட்காருகிறேன் என்றேன். உடனே அவர், என்னய்யா என் வீட்டிற்கே வந்து எனக்கே  ஆர்டர் போடுற என்று சிரித்தார். 

 

அதன் பிறகு, என்னைக் கடத்திய வழக்கில் காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார். ஒருமுறை மகாபலிபுரத்தில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. நான், அங்கு இருந்தேன். அப்போது அங்கு கலைஞர் வந்திருந்தார். என்னைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து விவரம் கேட்டார். பின் சென்னைக்கு திரும்பிப் போவது குறித்துக் கேட்டார். நான் பஸ்ஸில் போவதாகச் சொன்னேன். ஆனால் அவர் என்னை தனது காரில் ஏறச் சொல்லி அவருடன் சென்னைக்கு அழைத்து வந்தார். வழியில், ‘எங்க போகணும்’ என்று கேட்டபோது, கிண்டின்னு சொன்னேன். ‘வீடு எங்கனு கேட்டார்’, கே.கே.நகரில் இருந்து நடந்து சென்றுவிடுவேன் பக்கம்தான் என்றேன். உடனே அவர், ‘எங்க? எம்.ஜி.ஆர். நகரா’ என்று கேட்டுவிட்டு, “எம்.ஜி.ஆர். இல்லன்னா, நான் இல்ல; நான் இல்லன்னா எம்.ஜி.ஆர். இல்ல” என்று சொல்லி வீட்டிலேயே இறக்கிவிட்டார். வெளியில் இருப்பவர்களுக்குத்தான் கலைஞரும், எம்.ஜி.ஆரும் எதிரும் புதிருமாக இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால் கலைஞரும் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பாசம் கொண்ட நெருங்கிய நண்பர்கள். 

 

இதற்கு மற்றொரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒருமுறை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் கலைஞரை ‘கருணாநிதி’ என்று சொன்னார். உடனே எம்.ஜி.ஆர், கோபம் அடைந்து அவரின் முகத்தில் ஒரு அறை விட்டார். ‘கலைஞர்’னு சொல்லு என்று சொல்ல வைத்தார். அவரும் கலைஞர் என்று திரும்ப சொன்னார். இப்படி கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே அண்ணன் தம்பி பாசத்தை விட அதிகமான பாசத்தை ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்தனர். 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.