Skip to main content

உயிரா? பசியா? -இது கொரோனா காலம்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

இதைத் தவிர இப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியாது என்பதை அவனது மூளை அறிந்திருக்கிறது. அதனால், 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு அது தயாராகிவிட்டது. ஆனால், அவனது வயிறு ஓர் அடங்காப்பிடாரி. மூளையாவது வெங்காயமாவது என்று அது தன் வேலையிலேயே கவனமாக இருப்பதுதான் அவனுக்குப் பெரும் பிரச்சினை.
 

 

மாநகரத்து நெருக்கடியில் அவனுக்கான ஒரு வாடகை இடம் இருக்கிறது. ஒற்றை ஆள்தான். ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேறிய பிறகுதான் தனக்கான வாழ்க்கை என்ற அவனது உறுதியால் காலம் கடந்து கொண்டிருந்தது.

 

தனித்திருப்பவன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பொழுதுகள் இதுவரை அவனால் கற்பனை செய்துகூட பார்த்திராதவை. சமைக்கத் தெரியாதவன். அவன் தங்கியிருக்கும் இடத்தில் ஸ்டவ்கூட கிடையாது. இத்தனை நாட்களாக அவனது வயிறு கூப்பிடும்போதெல்லாம் அதை ஆரியபவனுக்கோ முனியாண்டி விலாசுக்கோ, கையேந்தபவனுக்கு அழைத்துச் சென்று விடுவான். தோசை, ஆம்லேட், மட்டன்சுக்கா உள்ளிட்டவற்றால் வயிற்றின் குரலை அடக்கிவிடுவான்.
 

திடுதிப்பென்று ஏப்ரல் 1 வரை 144 என்றது மாநில அரசு. மாதக்கடைசி. அக்கவுண்ட்டில் பேங்க்காரனுக்குப் பயந்து மிச்சம் வைத்திருந்த சொற்பம் மட்டும்தான் இருந்தது. பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போகலாம் என்றாலும் வழியில்லை. அங்கே இங்கே முயற்சித்து கடன் வாங்கி, பணத்தைத்  தேற்றியபோது பஸ் இல்லை.

 

ஹோட்டல்களில் பார்சல் வாங்கிக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்திருந்ததால், கையிலிருக்கிற பணத்தை வைத்து ஒருவார காலத்தை எப்படியாவது கடத்திவிடலாம், ரொம்ப அவசரம் என்றால் நாயர்கடை டீயும் பன்னும் காப்பாற்றும் என வயிற்றுக்கு ஆறுதல் சொல்லியிருந்தது அவன் மூளை.
 

அந்த ஆறுதலையும் ஏமாற்றமாக்கிவிட்டது பிரதமரின் 21 நாள் முடக்கம் பற்றிய அறிவிப்பு. “3 வாரத்துக்கு என்ன செய்வது?” என வயிறு அவனிடம் கேட்டது. “ஒரு வாரகால 144 போல, மூணு வார ஊரடங்கை சமாளிக்கலாம், நான் கியாரண்டி” என்றது அவன் மூளை.
 

chennai




 

காலையில்தான் அது தேர்தல் நேர வாக்குறுதி என வயிற்றுக்குத் தெரிந்தது. நாயர்  டீக்கடை கதவு திறக்கவில்லை. வாசலில் ஒரு பிளாஸ்க்கில் டீ நிரப்பியிருந்தார். பேப்பர் கப்பில் பிடித்து அவனுக்குக் கொடுத்தவர், “கூட்டம் போடக்கூடாதுன்னு போலீஸ் மிரட்டுது. நாலைஞ்சு பேரா வரும் கஸ்டமரை கூட்டம் போடாதீங்கன்னு சொல்லவும் முடியாது. போலீஸ் டார்ச்சரையும் தாங்க முடியாது. அதனால கடையை மூடிட்டேன். நாளைக்கு இதுவும் கிடையாது” என்றார்.

 

ஒன்றுக்கு இரண்டு டீயாக வாங்கி வயிற்றை ஆறுதல் படுத்திவிட்டு வந்து படுத்தான்.  கவலையும் அசதியும் மனதை அழுத்த, தூங்கிப் போனான். மதியம், வயிறுதான் அவனைக் கிள்ளி எழுப்பியது. “எவ்வளவு நேரம் தூங்குவே? நான் இருக்கிறதையே மறந்துட்டியா?” என்றது. குளித்து முடித்து டூவீலரில் கிளம்பினான்.

 

chennai



ஆரியபவன் திறக்கவில்லை. முனியாண்டி விலாஸ் மூடிக்கிடந்தது. மதிய நேரத்தில் அந்த கையேந்தி பவனும் கிடையாது.  வேறு ஓட்டல் ஏதாவது திறந்திருக்கிறதா என்று தேடினான்.
 

வயிறு அழ ஆரம்பித்துவிட்டது. “சோறு வாங்கிக் கொடுன்னு கேட்டா, சென்னையை சுத்திக் காட்டுறியா?” என்றது. அவன் மூளையோ, “ரொம்ப நேரம் சுத்தாதே.. வெளியிலே நடமாடினா வீட்டுக்குள்ளே கரோனா வந்து, உயிரே போயிடுனு அரசாங்கம் எச்சரிச்சிருக்கு” என்றது.
 

வயிற்றின் கோபம், அவன் மூளையை நோக்கித் திரும்பியது. “பட்டினிப் போட்டுக் கொல்லுறதைவிட, கரோனாவுல போய்ச் சேர்ந்திடலாம். இத்தனை காலம் தனியா இருந்தியே.. சொந்தமா சமையல் செய்ய கத்துக்கிட்டியா? உன்னோட அலட்சியத்தால எனக்கு தண்டனையா?” என்றது.


 

amma



வருமா வராதா என்று உறுதியாக சொல்ல முடியாத கண்ணுக்குத் தெரியாத நுண்ணியிரியால் அவன் வயிறும் மூளையும் வாய்த்தகராறில் ஈடுபட்டன. அவனோ பொறுக்க முடியாமல், “அம்மா...” என்றான்.
 

“கரெக்ட்’‘ என்றது அவன் மூளை. அம்மா உணவகம் திறந்திருக்கும் என்று அரசாங்கம் அறிவித்திருந்ததை நினைவுபடுத்தியது. வயிற்றிடம் அதைச் சொல்லி ஆறுதல்படுத்தியவன், அந்தப் பகுதியில் இருந்த அம்மா உணவகம் நோக்கிச் சென்றான்.
 

பூட்டிக் கிடந்தது.
 

அவன் கண்கள் பார்ப்பதற்கு முன்பாக அவன் வயிறு அதைப் பார்த்துவிட்டது. “அம்மான்னா சொன்னே.. மவனே!” என்று கோபத்தில் திட்டியது.
 

என்ன செய்வதென்று தெரியாதவன், அங்கே இருந்தவர்களிடம், “எப்ப திறப்பாங்க?” என்று கேட்டான்.
 

“யாருக்குத் தெரியும்? பூட்டுப் போட்டு மூணு மாசமாச்சு. என்ன காரணம்னு தெரியல. அந்தம்மா மாதிரியே இதுவும் மர்மம்தான்” என்றார் ஒரு பெரியம்மா.
 

வயிறு என்ன கேட்கப் போகிறது என்பது அவன் மூளைக்குத் தெரிந்துவிட்டதால், அமைதியானது. கண்தான் பதில் சொன்னது, கண்ணீர்த்துளிகளால்.
 

“ருசிக்காக எதுவும் கேட்கலை. பசிக்காகத்தான் கேட்கிறேன்” என்றது அவன் வயிறு.

 

chennai



மெடிக்கல் ஷாப் திறந்திருந்தது. உள்ளே சென்றான். உப்பு+சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வாங்கினான். ரொட்டிப் பொட்டலங்கள் இருந்தன. அதையும் வாங்கிக் கொண்டான். அதைப் பார்த்ததும் வயிறு குலுங்கிச் சிரித்தது.
 

 “மாஸ்க் இருக்கான்னு கேளு?” என்று அவனை உசுப்பியது மூளை.
 

“ஸ்டாக் இல்லை” என்றார் பார்மசிஸ்ட்.



 

chennai7



வெளியே வந்து பைக்கை எடுத்தான். கொஞ்ச தூரம்தான் வந்திருப்பான். போலீஸ்காரர் மறித்தார். கையெடுத்துக் கும்பிட்டார். “வீட்டுக்குள்ளேயே இருங்க.. உயிரைக் காப்பாத்திக்குங்க” என்றார் பரிதாபமாக.

 

“அப்படின்னா என்னை யாரு காப்பாத்துவாங்கன்னு கேளு” என்று அவனைக் கிள்ளியது வயிறு.

 

chennai


 

போலீஸ்காரரிடமிருந்து தலையாட்டிவிட்டு டூவீலரை ஓட்டினான். அடுத்த சிக்னல். இங்கும் ஒரு போலீஸ்காரர் இருந்தார். கையெடுத்துக் கும்பிடுவார் என அவன் எதிர்பார்த்திருக்க, “அடங்க மாட்டீங்களாடா நீங்க.. மாஸ்க்கும் போடலை.. .வூட்டுக்குள்ள கிடங்கடான்னா ஏண்டா இப்படி ஊரு தாலிய அறுக்குறீங்க?” என்றபடி லத்தியால் அவன் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டார்.
 

டூவீலர் ஒரு பக்கமும், அவன் ஒரு பக்கமுமாக சாய, மறுபடியும் ஒரு போடு. துடித்து எழுந்தவன், தெறிக்க ஓடி, ஒரு கடையின் ஷட்டரில் மோதி, சரிந்தான்.

 

ccccc



 

chennai


அங்கே உட்கார்ந்திருந்த நடைபாதைவாசிகள் அவனை நிமிர்த்தி உட்கார வைத்தனர். தண்ணீர் கொடுத்தவர்கள், தங்களிடமிருந்த சோற்றில் கொஞ்சம் அவனுக்குக் கொடுத்தனர்.
 

அவன் முதுகில் தடித்து சிவந்திருந்த ‘லத்தி’த் தழும்பைத் தடவிக் கொடுத்தனர்.
 

“ரொம்ப செவந்திருக்குல்ல” என்றான், முதுகில் வாங்கிய அடியின் வலியை வயிற்றில் உணர்ந்திருந்த அவன். 
 

 

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.