Skip to main content

உயிரா? பசியா? -இது கொரோனா காலம்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

இதைத் தவிர இப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியாது என்பதை அவனது மூளை அறிந்திருக்கிறது. அதனால், 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு அது தயாராகிவிட்டது. ஆனால், அவனது வயிறு ஓர் அடங்காப்பிடாரி. மூளையாவது வெங்காயமாவது என்று அது தன் வேலையிலேயே கவனமாக இருப்பதுதான் அவனுக்குப் பெரும் பிரச்சினை.
 

 

மாநகரத்து நெருக்கடியில் அவனுக்கான ஒரு வாடகை இடம் இருக்கிறது. ஒற்றை ஆள்தான். ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேறிய பிறகுதான் தனக்கான வாழ்க்கை என்ற அவனது உறுதியால் காலம் கடந்து கொண்டிருந்தது.

 

தனித்திருப்பவன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பொழுதுகள் இதுவரை அவனால் கற்பனை செய்துகூட பார்த்திராதவை. சமைக்கத் தெரியாதவன். அவன் தங்கியிருக்கும் இடத்தில் ஸ்டவ்கூட கிடையாது. இத்தனை நாட்களாக அவனது வயிறு கூப்பிடும்போதெல்லாம் அதை ஆரியபவனுக்கோ முனியாண்டி விலாசுக்கோ, கையேந்தபவனுக்கு அழைத்துச் சென்று விடுவான். தோசை, ஆம்லேட், மட்டன்சுக்கா உள்ளிட்டவற்றால் வயிற்றின் குரலை அடக்கிவிடுவான்.
 

திடுதிப்பென்று ஏப்ரல் 1 வரை 144 என்றது மாநில அரசு. மாதக்கடைசி. அக்கவுண்ட்டில் பேங்க்காரனுக்குப் பயந்து மிச்சம் வைத்திருந்த சொற்பம் மட்டும்தான் இருந்தது. பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போகலாம் என்றாலும் வழியில்லை. அங்கே இங்கே முயற்சித்து கடன் வாங்கி, பணத்தைத்  தேற்றியபோது பஸ் இல்லை.

 

ஹோட்டல்களில் பார்சல் வாங்கிக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்திருந்ததால், கையிலிருக்கிற பணத்தை வைத்து ஒருவார காலத்தை எப்படியாவது கடத்திவிடலாம், ரொம்ப அவசரம் என்றால் நாயர்கடை டீயும் பன்னும் காப்பாற்றும் என வயிற்றுக்கு ஆறுதல் சொல்லியிருந்தது அவன் மூளை.
 

அந்த ஆறுதலையும் ஏமாற்றமாக்கிவிட்டது பிரதமரின் 21 நாள் முடக்கம் பற்றிய அறிவிப்பு. “3 வாரத்துக்கு என்ன செய்வது?” என வயிறு அவனிடம் கேட்டது. “ஒரு வாரகால 144 போல, மூணு வார ஊரடங்கை சமாளிக்கலாம், நான் கியாரண்டி” என்றது அவன் மூளை.
 

chennai




 

காலையில்தான் அது தேர்தல் நேர வாக்குறுதி என வயிற்றுக்குத் தெரிந்தது. நாயர்  டீக்கடை கதவு திறக்கவில்லை. வாசலில் ஒரு பிளாஸ்க்கில் டீ நிரப்பியிருந்தார். பேப்பர் கப்பில் பிடித்து அவனுக்குக் கொடுத்தவர், “கூட்டம் போடக்கூடாதுன்னு போலீஸ் மிரட்டுது. நாலைஞ்சு பேரா வரும் கஸ்டமரை கூட்டம் போடாதீங்கன்னு சொல்லவும் முடியாது. போலீஸ் டார்ச்சரையும் தாங்க முடியாது. அதனால கடையை மூடிட்டேன். நாளைக்கு இதுவும் கிடையாது” என்றார்.

 

ஒன்றுக்கு இரண்டு டீயாக வாங்கி வயிற்றை ஆறுதல் படுத்திவிட்டு வந்து படுத்தான்.  கவலையும் அசதியும் மனதை அழுத்த, தூங்கிப் போனான். மதியம், வயிறுதான் அவனைக் கிள்ளி எழுப்பியது. “எவ்வளவு நேரம் தூங்குவே? நான் இருக்கிறதையே மறந்துட்டியா?” என்றது. குளித்து முடித்து டூவீலரில் கிளம்பினான்.

 

chennai



ஆரியபவன் திறக்கவில்லை. முனியாண்டி விலாஸ் மூடிக்கிடந்தது. மதிய நேரத்தில் அந்த கையேந்தி பவனும் கிடையாது.  வேறு ஓட்டல் ஏதாவது திறந்திருக்கிறதா என்று தேடினான்.
 

வயிறு அழ ஆரம்பித்துவிட்டது. “சோறு வாங்கிக் கொடுன்னு கேட்டா, சென்னையை சுத்திக் காட்டுறியா?” என்றது. அவன் மூளையோ, “ரொம்ப நேரம் சுத்தாதே.. வெளியிலே நடமாடினா வீட்டுக்குள்ளே கரோனா வந்து, உயிரே போயிடுனு அரசாங்கம் எச்சரிச்சிருக்கு” என்றது.
 

வயிற்றின் கோபம், அவன் மூளையை நோக்கித் திரும்பியது. “பட்டினிப் போட்டுக் கொல்லுறதைவிட, கரோனாவுல போய்ச் சேர்ந்திடலாம். இத்தனை காலம் தனியா இருந்தியே.. சொந்தமா சமையல் செய்ய கத்துக்கிட்டியா? உன்னோட அலட்சியத்தால எனக்கு தண்டனையா?” என்றது.


 

amma



வருமா வராதா என்று உறுதியாக சொல்ல முடியாத கண்ணுக்குத் தெரியாத நுண்ணியிரியால் அவன் வயிறும் மூளையும் வாய்த்தகராறில் ஈடுபட்டன. அவனோ பொறுக்க முடியாமல், “அம்மா...” என்றான்.
 

“கரெக்ட்’‘ என்றது அவன் மூளை. அம்மா உணவகம் திறந்திருக்கும் என்று அரசாங்கம் அறிவித்திருந்ததை நினைவுபடுத்தியது. வயிற்றிடம் அதைச் சொல்லி ஆறுதல்படுத்தியவன், அந்தப் பகுதியில் இருந்த அம்மா உணவகம் நோக்கிச் சென்றான்.
 

பூட்டிக் கிடந்தது.
 

அவன் கண்கள் பார்ப்பதற்கு முன்பாக அவன் வயிறு அதைப் பார்த்துவிட்டது. “அம்மான்னா சொன்னே.. மவனே!” என்று கோபத்தில் திட்டியது.
 

என்ன செய்வதென்று தெரியாதவன், அங்கே இருந்தவர்களிடம், “எப்ப திறப்பாங்க?” என்று கேட்டான்.
 

“யாருக்குத் தெரியும்? பூட்டுப் போட்டு மூணு மாசமாச்சு. என்ன காரணம்னு தெரியல. அந்தம்மா மாதிரியே இதுவும் மர்மம்தான்” என்றார் ஒரு பெரியம்மா.
 

வயிறு என்ன கேட்கப் போகிறது என்பது அவன் மூளைக்குத் தெரிந்துவிட்டதால், அமைதியானது. கண்தான் பதில் சொன்னது, கண்ணீர்த்துளிகளால்.
 

“ருசிக்காக எதுவும் கேட்கலை. பசிக்காகத்தான் கேட்கிறேன்” என்றது அவன் வயிறு.

 

chennai



மெடிக்கல் ஷாப் திறந்திருந்தது. உள்ளே சென்றான். உப்பு+சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வாங்கினான். ரொட்டிப் பொட்டலங்கள் இருந்தன. அதையும் வாங்கிக் கொண்டான். அதைப் பார்த்ததும் வயிறு குலுங்கிச் சிரித்தது.
 

 “மாஸ்க் இருக்கான்னு கேளு?” என்று அவனை உசுப்பியது மூளை.
 

“ஸ்டாக் இல்லை” என்றார் பார்மசிஸ்ட்.



 

chennai7



வெளியே வந்து பைக்கை எடுத்தான். கொஞ்ச தூரம்தான் வந்திருப்பான். போலீஸ்காரர் மறித்தார். கையெடுத்துக் கும்பிட்டார். “வீட்டுக்குள்ளேயே இருங்க.. உயிரைக் காப்பாத்திக்குங்க” என்றார் பரிதாபமாக.

 

“அப்படின்னா என்னை யாரு காப்பாத்துவாங்கன்னு கேளு” என்று அவனைக் கிள்ளியது வயிறு.

 

chennai


 

போலீஸ்காரரிடமிருந்து தலையாட்டிவிட்டு டூவீலரை ஓட்டினான். அடுத்த சிக்னல். இங்கும் ஒரு போலீஸ்காரர் இருந்தார். கையெடுத்துக் கும்பிடுவார் என அவன் எதிர்பார்த்திருக்க, “அடங்க மாட்டீங்களாடா நீங்க.. மாஸ்க்கும் போடலை.. .வூட்டுக்குள்ள கிடங்கடான்னா ஏண்டா இப்படி ஊரு தாலிய அறுக்குறீங்க?” என்றபடி லத்தியால் அவன் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டார்.
 

டூவீலர் ஒரு பக்கமும், அவன் ஒரு பக்கமுமாக சாய, மறுபடியும் ஒரு போடு. துடித்து எழுந்தவன், தெறிக்க ஓடி, ஒரு கடையின் ஷட்டரில் மோதி, சரிந்தான்.

 

ccccc



 

chennai


அங்கே உட்கார்ந்திருந்த நடைபாதைவாசிகள் அவனை நிமிர்த்தி உட்கார வைத்தனர். தண்ணீர் கொடுத்தவர்கள், தங்களிடமிருந்த சோற்றில் கொஞ்சம் அவனுக்குக் கொடுத்தனர்.
 

அவன் முதுகில் தடித்து சிவந்திருந்த ‘லத்தி’த் தழும்பைத் தடவிக் கொடுத்தனர்.
 

“ரொம்ப செவந்திருக்குல்ல” என்றான், முதுகில் வாங்கிய அடியின் வலியை வயிற்றில் உணர்ந்திருந்த அவன். 
 

 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.