Skip to main content

அமித் ஷாவை திமுக அழைத்தது சரியா?

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

அமித்ஷாவை கலைஞர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைக்கலாமா என்ற குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அவரை அழைத்ததன் மூலம் திமுக பாஜக கூட்டணிக்கு அடித்தளம் போடுகிறதா? காங்கிரஸை மிரட்டுகிறதா என்றெல்லாம் விவாதங்கள் தூள்பறக்கின்றன.

 

modi with narendra modi



திமுகவுக்குள்ளேயே ஒரு குரூப் அமித்ஷாவை அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். கலைஞர் உயிரோடு இருந்தவரை யாரையும் தனக்கு எதிரியாக நினைத்தவரில்லை. அவரை கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட மறுநாள் அவரை அவருடைய இல்லத்தில் நேரடியாக சந்திக்க முடியும் என்ற இலகுத் தன்மையை கடைப்பிடித்தவர் கலைஞர்.

அவருக்கான அஞ்சலிக்கூட்டத்தில் யாரையும் அழைக்காமல் விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அந்த வகையில்தான் கலைஞருக்கான ஊடகவியலாளர் அஞ்சலிக் கூட்டத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. 

அதுபோலத்தான் அரசியல்தலைவர்கள் அஞ்சலி்க் கூட்டத்திற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. அவர்களில் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஒருவர். அமித் ஷாவை அரசியல் ரீதியாக எதிர்ப்பதில் திமுக முன்னோடியாகவே இருந்திருக்கிறது. இப்போது அஞ்சலிக் கூட்டத்திற்கு அழைக்க வேண்டிய கடைமையை திமுக சரியாக செய்திருக்கிறது. அதற்கு வருவதும் வராமல் இருப்பதும் அமித் ஷாவின் முடிவு. இதை ஏன் இவ்வளவு பெரிய விவாதமாக்குகிறார்கள் என்பது புரியவில்லை.

கலைஞர் அஞ்சலிக் கூட்டத்தில் கலைஞரைப் பற்றி அமித் ஷா என்ன பேசுகிறார் என்பதும், ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பதும்தான் முக்கியம். மாறாக தனிப்பட்ட அரசியல் நாகரிக நடவடிக்கைகளையும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளையும் இணைத்து குழப்பிக் கொள்வது தவறு.
 

amit shah



ஆட்சிக்கு வரக்கூடிய பலம் உள்ள கட்சிகள், மத்தியில் ஆளுங்கட்சியாக வரக்கூடிய கட்சிகளைப் பகைத்துக் கொள்வதோ, எதிரி மனப்பான்மையோடு அணுகவதோ ஆபத்து என்பதை உணர்ந்தவர் கலைஞர். அதற்காக, எம்ஜியார் மாதிரி கும்பிடுவதோ, ஜெயலலிதா மாதிரி அளவுக்கதிகமாக பகைத்து காரியங்களைக் கெடுத்துக் கொள்வதோ, திமுகவிடம் இருக்காது. தமிழக நலன்களுக்காக உரிமைகளை பேச்சுவார்த்தை மூலம் பெறவேண்டும் என்று நினைக்கிற கட்சி.

எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளைப் போல நடத்துவது திமுகவுக்கு என்று பழக்கமே இல்லை. பாஜகவினர் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு திமுகவினர் செல்வதைப் போலவே திமுகவினர் வீடுகளுக்கும் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சியினர் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் அமித் ஷாவை கலைஞர் அஞ்சலிக் கூட்டத்திற்கு அழைத்ததை அரசியலாக்குவதில் அரசியலாக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

இதில் மேலும் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், பதிவுபெற்ற அனைத்து தேசிய, மாநில கட்சிகளுக்கும் கலைஞர் அஞ்சலிக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.