'It contained everyone's leela and quirks' - Kodanad again; TTV opened its mouth Photograph: (ttv)
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு பிறகு கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது வரை முடிவு பொறாமல் விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கையிலெடுத்து விசாரித்து வருகின்றனர்.
சிபிசிஐடி, ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் 250 க்கும் மேற்பட்டோரிடம் இந்த வழக்கில் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள் என்பவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி கடந்த 11/03/2025 அன்று வீரபெருமாள் ஆஜராகி இருந்தார். அப்போதைய பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், இந்த சம்பவத்தில் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜ்க்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவருடைய செல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் ஆஜராகிய வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். தற்போதுவரை விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் முடிவு கிடைக்காத சூழலே தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கில் யார் குற்றவாளி என கண்டறிந்து தக்க தண்டனை கொடுக்கப்படும் என திமுக தெரிவித்திருந்தது.
கடந்த மே மாதம் நிலகிரிக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ''பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்று சொல்லிருந்தேன். அந்த பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது போன்று கொடநாடு கொலை கொள்ளை வழக்கும் நடந்துகொண்டு இருக்கிறது. அதற்கும் இந்த மாதிரி உரிய தண்டனை வழங்கப்படும்'' என்றார்.
முடிவுபெறாத இந்த கொடுநாடு சம்பவம் குறித்து டி.டி.வி.தினகரன் பல்வேறு பரபரப்பு தகவல்களை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் இதுகுறித்து பேசுகையில், ''கொடநாட்டில் போய் அந்த வாட்ச்மேன் வாயையெல்லாம் கட்டி போட்டுவிட்டு உள்ளே போய் ஜன்னலை உடைச்சு பார்த்துள்ளார்கள். அங்க ஒன்னும் பணம், காசு இருக்காதுன்னு எல்லாருக்கும் தெரியும். அங்க போய் பைல்களை தேடுனாங்க. தேடியது யாரு? எம்எல்ஏக்களை பற்றி, கட்சியில உள்ள மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள் பற்றி ஜெயலலிதா கேட்டிருக்க ரிப்போர்ட் எல்லாம் போயஸ் கார்டனில் இருக்கும். நான் நிறைய கிழிச்சு போட்டுருக்கேன். நானும் டாக்டர் வெங்கடேஷும் ஜெயலலிதா ரூம்ல இருந்ததெல்லாம் கிழிச்சு போட்டோம்.
நாங்க பிளாக் மெயலர் கிடையாது. எங்க சித்தி (சசிகலா) சொன்னதன் பேர்ல அதெல்லாம் உட்கார்ந்து படிச்சு பார்த்து சிரிச்சிட்டு நானும் டாக்டர் வெங்கடேஷும் எல்லாத்தையும் கொளுத்தி போட்டோம். ஜெயலலிதா வச்சிருந்த பைல் எல்லாம் அக்கா ரூம்ல இருக்குப்பா அதெல்லாம் பாருங்க தேவையில்லாத எல்லாம் நீக்கிடுங்கனு சொன்னாங்க. அதுல நிறைய பேர் அமைச்சர்களாக எல்லாம் இருந்தவங்க. அவங்களுடைய வண்டவாளங்களெல்லாம் அதில் இருந்துச்சு. அதெல்லாம் கிழிச்சு போட்டுருக்கோம். அதுபோல கொடநாட்டிலயும் இருக்குன்னு யாரோ பொய் சொல்லி எடப்பாடியை பயமுறுத்தி இருக்காங்க. அதனால் அங்கு போய் அந்த கூர்காவ கட்டிப்போட்டுட்டு உள்ளே போய் ஜன்னலை உடைச்சிட்டு உள்ளே போயிருக்காங்க. எத்தனை பேர் கொடநாட்டில் இறந்தார்கள். உள்ளே இருந்த ஆபரேட்டர் தற்கொலை செய்துகொண்டார். டிரைவர் கனகராஜ் கொல்லப்பட்டார். கேரளால இருந்து வந்தவர்கள் வண்டியெல்லாம் விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்திற்கு எல்லாம் ஒட்டுமொத்த பெனீபீஷியரி யாரா இருக்க முடியும்? இதெல்லாம் யார் ஆட்சியில் நடக்குது? அந்த சூழ்நிலையை பாருங்க. எங்க சித்தி (சசிகலா) ஜெயில்ல இருக்காங்க. 17ஆம் தேதி என்னையும் கட்சியை விட்டு நீக்கி இருக்காங்க. என்னை கட்சியை விட்டு நீக்கியதுனால அவர்களுக்கு இன்னும் பயம் அதிகமாச்சு. இந்த பைல் எல்லாம் எடுத்து டிடி.வி.தினகரன் வெளியே விட்டரலாம் என்ற பயம் எடப்பாடிக்கு வந்துவிட்டது. ஆனா அந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை எல்லாம் போயஸ் கார்டன்ல தான் இருந்துச்சு. அதெல்லாம் நாங்க அதுக்கு முன்னாடியே கிழிச்சு போட்டோம். எங்களுக்கு அதையெல்லாம் வைத்து யாரையும் பயமுத்தணும்ங்கிற கேவலமான புத்தி எல்லாம் எங்களுக்கு கிடையாது. அதில் நான் படிச்சேன் எல்லோரைப் பற்றியும் இருந்துச்சு. எல்லோருடைய லீலா வினோதங்கள் எல்லாமே இருந்துச்சு. என்னைக்குமே டி.டி.வி.தினகரன் பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம் தான். ஏனென்றால் துரோகத்தை வீழ்த்தாம நான் யார் தடுத்தாலும் ஓய மாட்டேன். பழனிசாமியை நான் வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. அவரே கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிஞ்சிட்டு வராரு. யாரை கண்டாலும் பயம். அதனால எனக்கே வேலை இருக்காது போல இருக்கு. அவரே எல்லா வேலையும் இந்த எலக்சனோட முடிச்சுக்குவாருன்னு நினைக்கிறேன்'' என்றார்.
Follow Us