ADVERTISEMENT

சுபஸ்ரீ வீட்டில் தங்கிய சீடர்கள்! ஜக்கி நடத்திய பஞ்சாயத்து? ஈஷா பெண் கொலை மர்மம்!

11:42 AM Jan 06, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த டிசம்பர் 24-27, 2022 நக்கீரன் இதழில், "ஈஷாவிலிருந்து மாயமான இளம்பெண்? - தவிக்கும் கணவர்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஜக்கி ஆசிரமத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வெளியேறியபோது காணாமல் போனது குறித்து எழுதியிருந்தோம். இந்நிலையில் அந்தப் பெண், கிணறு ஒன்றில் சடலமாக எடுக்கப்பட்டது ஈஷா மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. 18-12-2022 அன்று ஈஷாவை விட்டுத் தலைதெறிக்க ஓடிய இளம்பெண் சுபஸ்ரீ சரியாக இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

11-12-2022 அன்று ஈஷாவில் துவங்கிய ஒரு வார சைலன்ஸ் வகுப்பில் கலந்துகொண்ட சுபஸ்ரீ ஒரு வார காலத்திற்குப் பின் மதிய உணவிற்குப் பின்னரே தன்னுடைய உடைமையை எடுத்துக் கொண்டு வெளிவர வேண்டும். ஆனால் காலில் செருப்பில்லாமல் தியான உடையிலேயே ஈஷாவிலிருந்து வெளியேறி திரும்பிப் பார்த்துக் கொண்டே தலைதெறிக்க ஓடி செம்மேடு பகுதியில் மாயமானார். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தாலும் ஈஷாவை மீறி எதுவும் செய்யவியலாத நிலையில், எங்களுடன் சேர்ந்து சுபஸ்ரீயை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினார்கள். நாட்கள்தான் ஓடியது. பலனில்லை!

இவர்களை நம்பிப் பலனில்லை என நாங்கள் எங்களுடைய நட்பு வட்டங்களைக் கொண்டு தேடியபோது, செம்மேடு பகுதியிலிருந்த பேக்கரியின் சி.சி.டி.வி. கேமராவில் சிக்கினாரே தவிர அதற்கு அடுத்ததாக உள்ள சர்ச் கேமராவில் சிக்கவில்லை. ஆகையால் அங்குள்ள எஸ் வளைவைத் தாண்டி சுபஸ்ரீ வெளியேறவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதுகுறித்து போலீஸிடம் கூறினோம். காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அதுபோல் அந்த ஏரியாவில் அந்த நேரத்தில் கடந்த வாகனங்களைக் கணக்கெடுத்துக் கூறினோம். அதில் ஆறு வாகனங்கள் வெளி மாநில வாகனங்கள். இதனையும் கண்டுகொள்ளவில்லை. ஈஷாவில் பதிவு செய்யப்படும் வாகனங்கள் ரெஜிஸ்டரிலும் அந்த வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை. இந்த வேளையில்தான் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று சுபஸ்ரீ பிணமாக கிணற்றில் கிடப்பதாகத் தகவல் வந்தது'' என்கிறார் சுபஸ்ரீயின் உறவினர் ஒருவர்.

சி.சி.டி.வி. பதிவுகளின்படி சுபஸ்ரீ இறுதியாக மாயமான செம்மேடு பகுதியின் இறுதியில் உள்ள, காந்தி காலனியில் மூன்று நபர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பிலுள்ள கிணற்றில் குப்புறக் கவிழ்ந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதைப் பார்த்த ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, தீயணைப்புத் துறையின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த சடலம் யோகா உடையிலும் கையில் ஈஷாவின் ரிஸ்ட் பேண்ட்டும், விரலில் ஈஷா முத்திரை மோதிரமும் இருந்த நிலையில் மாயமான சுபஸ்ரீயே என அடையாளம் காட்டினார் கணவரான பழனிக்குமார். சடலத்தை மீட்ட காவல்துறை, கோவை அரசு மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாகப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியது.

"இந்த சாலையைக் கடப்பவர்களுக்கு இது மாதிரி கிணறு இருப்பதே தெரியாது. யாராவது நம்மைப் பார்க்கிறார்களா எனத் திரும்பிப் பார்த்துக்கொண்ட சுபஸ்ரீக்கு இந்தக் கிணறு எப்படித் தெரியும்..? ஏறக்குறைய முப்பது அடி விட்டம் கொண்ட கிணற்றில் 50 அடிக்கும் குறைவாகத் தண்ணீர் இருக்கின்றது. அங்கு நெருக்கமாக இருக்கும் புதர்களைத் தாண்டி கிணற்றை நெருங்குவது மிகக் கடினம். பெண்ணால் இது சாத்தியமில்லை. அப்படியே குதித்தாலும் உடலெங்கும் காயம் ஏற்பட்டிருக்கும். ஆகையால் யாராவது அந்தப் பெண்ணை கிணற்றில் தூக்கி வீசியிருக்கலாம்'' எனத் துவக்கத்தில் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு நிலைமையை எடுத்துக் கூறியது மாவட்ட உளவுத்துறை.

பிற்பகலில் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சடலத்தை, நாங்கள் வாங்க மாட்டோம் என சுபஸ்ரீயின் உறவினர்கள் மறுத்தனர். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விபத்துச் சாவுகள் உள்ளிட்டவை ஏதேனும் இருந்தால் திங்கட்கிழமை பிரேதப் பரிசோதனை செய்வோம் என்கின்ற மருத்துவர்கள் யாருக்காக உடனே பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள் என மாதர் சங்கமும் குரலெழுப்ப... தன்னால் இயன்ற சமாதான வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தது காவல்துறை. உடலில் காயங்கள் இல்லை எனக் காவல்துறையில் கூறியதாலும், அதுபோக அழுகிய நிலையில் இருப்பதாலும், சடலத்தை நஞ்சுன்டாபுரம் மின் மயானத்தில் தகனம் செய்தனர் உறவினர்கள்.

சக்திவேல்

இறந்த சுபஸ்ரீயின் மாமனாரான சக்திவேலோ, "எனக்கு ஆரம்பத்திலிருந்து ஈஷா ஜக்கி மீது தான் சந்தேகம். பணம் கட்டி பயிற்சி வகுப்பிற்கு அனுப்பியுள்ளோம். பயிற்சி முடிந்து திரும்பும் வரை ஈஷா ஜக்கிதானே பொறுப்பு. ஏன் அவரைக் குற்றவாளியாகச் சேர்க்கவில்லை? மகள் மாயமான மறுநாள் இரவு எங்களது வீட்டிற்கு வந்த ஜக்கியின் சீடர்கள், நாங்கள் என்னென்ன செய்துகொண்டிருக்கிறோம் என நோட்டம்விட்டனர்.

முதல்நாள் அமைதியாக இருந்த நாங்கள் மறுநாள் அதிகாலையிலேயே சத்தம் போட்டு அனுப்பி வைத்தோம். அப்பொழுது மீண்டும் ஜக்கி மீது சந்தேகம் வந்தது. தொடர்ந்து எங்களுடைய தேடலில் அவர்கள் இணைந்து கொண்டு தேடுவதாக நடித்து நோட்டம்விட்டனர். சுபஸ்ரீ தேடுதலில் சுணக்கம் காட்டாததால் சில நாட்கள் கழித்து 24-12-2022 அன்று மாலை தரிசன வேளையில் எனது மகன் பழனிக்குமாரையும், எனது பேத்தியையும் சந்தித்து சமாதானம் செய்திருக்கின்றார். அப்பொழுது அம்மா கிடைப்பார்களா.? என கேள்வியெழுப்பிய எனது பேத்திக்கு, பதில் கூறாத ஜக்கி, பழனிக்குமாருக்கு ருத்ராட்ச மாலையைப் போட்டு அனுப்பி இருக்கின்றார். அதன் பின்பே இந்த சடலம்! என்னுடைய சந்தேகம், ஓடி வந்த சுபஸ்ரீயை மீட்டு மீண்டும் தங்களுடைய பாதுகாப்பில் வைத்திருந்த பின்னரே இது நடந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது கொலைதான்'' என்கிறார் அவர்.

காமராஜ்

"தன்னுடைய யோகா மையத்தில் சம்பளம் இல்லாத வேலை ஆட்கள் ஜக்கிக்கு தேவைப்படுகின்றது. சைலன்ஸ் ஹவர் நிகழ்ச்சியில் அதுதான் போதிக்கப்படுகின்றது. அப்படி மீறுபவர்களுக்கு மரண தண்டனைதான். மன அழுத்தத்தைப் போக்க இது மாதிரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் சுபஸ்ரீ மட்டுமல்ல, இதுவரை 18க்கும் அதிகமானோர் மாயமாகியிருக்கின்றனர். பின்னாளில் பலர் தற்கொலை செய்துள்ளதாகக் கணக்கு காண்பிக்கப்படுகின்றது. சத்தியமங்கலத்தில் நிர்வாண சடலமாக மீட்கப்பட்ட இரு பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களே. ஈஷா வாசலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர், விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்ட ஆடிட்டர், ஜக்கியின் மனைவி உட்பட ஏராளமான மர்ம மரணங்களுக்கு இன்றுவரை விடையில்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் இதுவரை அங்கு சிக்கியுள்ள எனது மகள்களை இதுவரை பார்க்க அனுமதிக்கவில்லை ஜக்கி. அரசு அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்தால் அங்கு புதைந்துள்ள சடலங்களையும், புதையவுள்ள சடலங்களையும் மீட்க முடியும்'' என்கிறார் ஜக்கியால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் காமராஜ்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT