Skip to main content

சிதம்பரத்திடம் நெருக்கமாக இருந்தேன்...சிக்க வைக்க பாலியல் குற்றச்சாட்டு? அதிர்ச்சியில் காங்கிரஸ்!

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தின் மனநிலையை உடைக்க பாலியல் அஸ்திரத்தை சி.பி.ஐ. பயன்படுத்த இருப்பதையறிந்து ராகுல்காந்தி வரை அதிர்ச்சி பரவியுள்ளது.

 

inx media



சிதம்பரத்தை யார் முதலில் கைது செய்வது என சி.பி.ஐ-அமலாக்கத்துறை ஆகிய இரு விசாரணை அமைப்புகளும் முட்டி மோதியதில் சி.பி.ஐ. முந்திக்கொண்டது. நீட்டிக்கப்பட்ட கஸ்டடியிலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்; இன்னும் பல கேள்விகளுக்கு அவரிடமிருந்து பதில் பெற வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி கஸ்டடியை நீட்டிக்க வேண்டும் என மீண்டும் கோர்ட்டில் முறையிட 29-ந்தேதி ஆலோசித்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.

 

chidambaram



இது குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் சி.பி.ஐ. இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா. அப்போது அஜித்குமார் தோவல், "அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான கோர்ட் உத்தர வுக்குப் பிறகு, ஹோம் மினிஸ்டரின் (அமித் ஷா) ஆலோசனையை கேட்டு, முடிவு செய்து கொள்ளலாம் என ரிஷி குமாரிடம் தெரிவித்திருக்கிறார். அமலாக்கத்துறை வழக்கில் ப.சி.யைக் கைது செய்ய செப்டம் பர் 5-ந் தேதிவரை தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
 

inx media case



இந்நிலையில், சி.பி.ஐ. கஸ்டடி குறித்து டெல்லியில் விசாரித்தபோது,  ஐ.என்.எக்ஸ். மீடியாவின் சட்டவிரோத பண பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தவிர சிதம்பரத்துக்கு நேரடி தொடர்புள்ள எந்த குற்றச்சாட்டையும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ.யால் முன்வைக்க முடியவில்லை. குறிப்பாக, இந்த விவகாரத்தில் சிதம்பரம் லஞ்சம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் சி.பி.ஐ. வசம் இல்லை. அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புள்ள சில பினாமி நிறுவனங்களுக்கான ஆதாரங்களையும், வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரம் வாங்கியிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்களின் கணக்குகளையும் தான் வைத்திருக்கிறது சி.பி.ஐ. இதை வைத்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன.

 

congress



குறிப்பாக, "நிதியமைச்சராக இருக்கும் போது விதிகளை மீறி அந்நிய செலாவணி முதலீடுகளுக்கு எதற்காக அனுமதியளித்தீர்கள்? வெர்ஜின் தீவிலிருந்து கார்த்திக்கு பணம் வந்திருக்கிறது. எதற்காக அந்த பணம் தரப்பட்டது? மலேசியா, ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளில் சொத்துக்களை வாங்க கார்த்திக்கு எங்கிருந்து பணம் வந்தது? செஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜி நிறுவனங்களுக்கும் கார்த்திக்கும் என்ன தொடர்பு? அந்த நிறுவனங்கள் மூலமாகவே லஞ்ச பணத்தை பெற்றிருக்கிறீர்கள். 21 நாடுகளில் உங்களது பினாமி பெயர்களில் சொத்துக்கள் இருப்பதாக உங்கள் மீது குற்றம்சாட்டுகிறோம்' என்கிற ரீதியில் சி.பி.ஐ. கேள்விகளை வைக்க, குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை காட்டுங்கள். பதில் சொல்கிறேன். உங்கள் கற்பனைக்கு தோன்றியதையெல்லாம் கேள்விகளாக கேட்டால் என்னிடத்தில் பதில் இல்லை. என் பெயரில் வெளிநாட்டில் சொத்து இருப்பதை நிரூபித்தால், இப்போதே சிறைக்கு செல்லத் தயார் என தனக்கேயுரிய பாணியில் பதிலடி தந்துள்ளார் சிதம்பரம். அவருடைய துணிச்சலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.


விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்குத்தான் ரிலாக்ஸ் தேவைப்பட்டிருக்கிறது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியே சென்று போன் பேசிவிட்டு வந்து விசாரணையை நடத்தினர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பானவற்றில் முறைகேடான அனுமதி, லஞ்சம், சொத்துக்கள் குவிப்பு என எப்படி சுற்றி சுற்றி கேள்வி கேட்டாலும் சிதம்பரத்தை மடக்கிட முடியாது என்கிற சூழலுக்கு ஒரு கட்டத்தில் தள்ளப்பட்டனர். அதனால், சிதம்பரத்தின் மன உறுதியை உடைக்க பாலியல் அஸ்திரத்தை வீசியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதில்தான் நொறுங்கிப் போனார் சிதம்பரம்''‘என்கிறார்கள் கஸ்டடி விசாரணையை உன்னிப்பாக கவனித்து வரும் காங்கிரஸ் தலைவர்கள்.

மேலும் விசாரித்தபோது, "சிதம்பரத்தின் கைதுக்கு அடிப்படை ஆதாரமாக சி.பி.ஐ.யை காட்டுவது ஐ.என்.எக்ஸ் மீடியாவின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்தான். இதுபற்றி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பிய சி.பி.ஐ., "இந்திராணியை நார்த் ப்ளாக்கில் ஒருமுறையும், ஸ்டார் ஹோட்டல்களில் ஒருமுறையும் நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். எதற்காக அந்த சந்திப்பு?' என கேட்க, "அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை. இந்திராணி யார் என்பதே எனக்கு தெரியாதபோது சந்திப்பு எப்படி நடக்கும்?' என சிதம்பரம் எதிர்கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, "இந்திராணி எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில், எங்களுக்கு தேவையான உதவியை அவர் செய்து கொடுத்ததால் அவருடன் நெருக்கமாக இருந்தேன்' என்றும், சிதம்பரத்தின் மகனோடு பண பேரங்கள் முடிந்த நிலையில், பேர தொகை மட்டுமல்லாது ஹிந்தி நடிகைகள் வேண்டும் என கேட்டதால் 2 நடிகைகளையும் அனுப்பி வைத்தேன் என்றும் வாக்குமூலம் தந்திருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவிழ்த்துவிட, நொறுங்கிப் போயிருக்கிறார் சிதம்பரம்.

மன ரீதியாக அவர் தளர்ந்து போனதை உணர்ந்த அதிகாரிகள், அவரை அந்த சின்ன அறையில் குறைவான வெளிச்சத்தில் தனிமையில் இருக்க வைத்துவிட்டு வெளியேறிவிட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேச்சுத் துணையில்லாமல் இருந்தார் சிதம்பரம். இது போன்று அடிக்கடி தனிமையில் இருக்க வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அடிக்கடி சோர்வாகி விடுகிறார் சிதம்பரம். அவரது மன உறுதியை உடைக்க இப்படி திட்டமிட்டு பாலியல் அட்டாக்குகள் சிதம்பரத்தின் மீது ஏவப்படுகிறது.

சிதம்பரத்திடம் நடக்கும் விசாரணை ரகசியங்களை தன்னுடைய சி.பி.ஐ. நண்பர்கள் மூலம் தினமும் இரவு தெரிந்து கொள்ளும் ராகுல்காந்தி, பாலியல் அட்டாக்கை அறிந்து காட்டமாகியிருக்கிறார். உடனே கட்சியின் மூத்த தலைவர்களான சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில்சிபில், அபிசேக்சிங்வி இருவரிடமும் ராகுல் விவாதிக்க, "சிதம்பரத்தை 30-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது அவரிடமே விசாரிப்போம்' என சொல்லியிருக்கிறார் கபில்சிபில். ஆக, சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆவண ஆதாரங்கள் இல்லாததால் தடுமாறி வருகிறது சி.பி.ஐ. என்கிறார்கள் அழுத்தமாக காங்கிரஸ் தலைவர்கள்.

"ஸ்பெயின், பிரிட்டன், கனடா, சுவிஸ், மொரிசியஸ், மலேசியா நாடுகளில் உள்ள வங்கிகளில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு கணக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டிவரும் சி.பி.ஐ., அந்த வங்கிக் கணக்குகளின் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் சொல்லி வருகிறது. இதற்கிடையே, மும்பை சிறையில் உள்ள இந்திராணியிடம் சிதம்பரத்தை நேரில் நிறுத்தி இந்திராணி மூலமாகவே பாலியல் விசயத்தை ஓப்பன் செய்ய வைத்து சிதம்பரத்தின் தூய்மையை கேள்விக்குள்ளாக்கும் சூழலை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள். அந்த சந்திப்பின் போது பாலிவுட் நடிகைகள் தொடர்பான வில்லங்கத்தையும் சொல்லுமாறு இந்திராணிக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

இந்நிலையில், முதல் கணவர் மூலம் பிறந்த மகளை, தற்போதைய கணவரின் துணையுடன் கொலை செய்த வழக்கில் சிறைப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, ப.சி. கைது செய்யப்பட்டதை வரவேற்று கருத்து தெரிவித்திருப்பதன் பின்னணியையும் காங்கிரஸ் தரப்பு துருவுகிறது. 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.