Skip to main content

இந்தியாவின் ஒரே ஏழை முதல்வர் ஏன் தோற்றார்?

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

"இந்தத் தேர்தலுக்குப் பிறகு  மாணிக் சர்க்காருக்கு மூன்று வழிகள்தான் உள்ளன. ஒன்று, அவர் மேற்கு வங்கத்துக்குப் போகலாம். கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் மிச்சமிருக்கிறது அங்கே. இரண்டு, அவர் கேரளாவுக்குப் போகலாம். அங்கு அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. இரண்டும் பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வங்கதேசத்துக்குச் சென்று விடலாம்." பாரதிய ஜனதா கட்சிக்காக திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்த அஸ்ஸாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறியது இது.

 

manik sarkar



ஆம், 2410 ரூபாய் வங்கி கையிருப்போடு, சொந்தமாக காரோ பெரிய வீடோ இல்லாமல், இதுவரை வருமான வரி கட்டவேண்டிய அளவுக்கு வருமானமே பார்த்திராமல், இளமையில்  தொடங்கிய கம்யூனிஸ்ட் கட்சிப் பணியை இப்பொழுது வரை முதன்மையாகக்  கருதி செய்து, முதல்வர் பதவிக்கான சம்பளத்தை தன் கட்சி வழக்கப்படி கட்சி நிதிக்குக் கொடுத்துவிட்டு மாத சம்பளமாக 9700 ரூபாய் மட்டும் வாங்கி,  முன்னாள் மத்திய அரசு அலுவலரான மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்ஜீயிடம் கூட 20 கிராம் நகை மட்டுமே வைத்து வாழ்ந்த ஒரு முதல்வர் இந்தியாவுக்கு அந்நியமானவர் தானே? ஒரு முறை கவுன்சிலர் ஆனவரே கோடீஸ்வரனாகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்கு இன்னும் அந்நியம்தான். 

1998ஆம் ஆண்டு முதல் முறை மாணிக் சர்க்கார் பதவியேற்ற போது, திரிபுரா இருந்த நிலை வேறு. பழங்குடி மக்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையே பிரிவினை, வேற்றுமை, பதற்றம் என்று இருந்த மாநிலத்தில் அமைதியைக் கொண்டு வந்ததில் மாணிக் சர்க்காரின் பங்கு முக்கியமானது. வங்காளிகள் ஆதிக்கம் அதிகமான பொழுது, எதிராக உருவெடுத்த செங்ராக் அமைப்பு, திரிபுரா தேசிய முன்னணியாளர் படை, திரிபுரா தேசிய விடுதலைப் படை (என்.எல்.எஃப்.டி), அகில திரிபுரா புலிகள் படை (ஏ.டி.டி.எஃப்) என பல ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டுவந்தன. வங்காளிகளுக்கு ஆதரவாக  வங்காளப் புலிகள் படை (பி.டி.எஃப்.), ஐக்கிய வங்காளிகள் விடுதலைப் படை (யு.பி.எல்.எஃப்.) என இரு புறமும் வன்முறை குழுக்கள் பெருகின.

tripura



கார்கில் போரை ஒட்டி 1999 ஆண்டு சமயத்தில் மாநிலத்தில் பாதுகாப்புக்கு இருந்த ராணுவமும் பெருமளவில் குறைக்கப்பட, மாநில காவல்துறையை வைத்தே சிறப்பாக கட்டுப்படுத்தினார் மாணிக் சர்க்கார். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த என்ற பெயரில் பழங்குடியினருக்கு ஆபத்தாக இருந்த ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை திரும்பப் பெற்றது திரிபுரா. தன் எளிமையாலும் நேர்மையாலும்  தொடர்ந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று 2013ஆம் ஆண்டு நான்காவது முறையாக பதவியேற்றார் மாணிக்.

தேயிலை, ரப்பர், காடுகள், நதிகள் என இயற்கை வளம் நிறைந்தது திரிபுரா. இன்றும் 50% மேல் விவசாயத்தை நம்பியிருக்கும்  மக்கள், கல்வி சதவிகிதத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவிலேயே அதிகமாக 94.65% இருந்தது, இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்காதது என பல விதங்களிலும் எடுத்துக்காட்டாக இருந்த ஆட்சியை மாற்ற மக்கள் விரும்பியது ஏன்? கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு இல்லாதது, இயற்கை வளங்களைக் காத்த அரசு தொழில்துறையில் கவனம் செலுத்தாதது, அரசு பணிகளிலும் பதவிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதிகமாக இருந்த வங்காளிகள் 30% மேலான மக்கள்தொகை உள்ள திரிபுரா பழங்குடிகளை ஆதிக்கம் செய்தது என பல காரணங்கள்.  7 லட்சம் வேலையில்லாத இளைஞர்கள், வேலையில்லா திண்டாட்டத்தில் நாட்டில் நான்காவது இடம், புதிய தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என எதுவும் வராத நிலை...இப்படி மறுபுறம் சரிவுகள் பெருகின.  'இன்வெஸ்ட் திரிபுரா', 'திரிபுரா கான்க்ளேவ்' என்று பல திட்டங்களை முயன்றும் சரியான செயல்படுத்தல் இல்லாததால் நிறுவனங்களை ஈர்க்க முடியவில்லை.     

 

manik with modi



பொதுவாகவே கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில், அதன் தொண்டர்கள் தீவிரமாக இருப்பதைக் காண முடியும். நமக்கு அருகே உள்ள கேரளாவில் இதை பார்க்கிறோம். அந்தத் தீவிரம் எதிர் சித்தாந்தங்களையும் கட்சிகளையும் நசுக்கும் அளவுக்கு திரிபுராவில் இருந்ததால், அங்கு எதிர்க் கட்சி என்று எதுவும் பலமாக இல்லை. அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள வந்தது பாஜக. ஆர்.எஸ்.எஸ். தன் நடவடிக்கைகளை பழங்குடியினரிடமிருந்து தொடங்கியது. 2014ஆம் ஆண்டு திரிபுரா வந்த பாஜகவின் தேர்தல் ஸ்பெஷலிஸ்ட்டுகளில் ஒருவரான சுனில் தியோதர் தீவிரமாக வேலை பார்த்தார். அவருக்கு நெருக்கமாக இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த சன்மோகன் திரிபுரா 2016ஆம் ஆண்டு  கொல்லப்பட்டார். கொலைகளில் அரசியல் செய்வதில் வல்ல பாஜக, அதை சரியாகக் கையில் எடுத்து மாநிலத்தின் அத்தனை தொகுதிகளிலும் போராட்டங்களைச் செய்து 42000 பேர் கைதாகி, திரிபுராவில் தன் இருப்பை வலுப்படுத்தியது. காங்கிரஸ், தன்னிடம் இருந்த 7 எம்.எல்.ஏ க்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பறிகொடுத்தது. பின்னர் அவர்கள், பாஜகவில் இணைந்தனர். 

 

sunil dheodhar



திரிபுராவின் பூகோள அமைப்பும் அதன் வளர்ச்சிக்கு முழுமையாகக் கைகொடுக்கவில்லை. சரியான சாலை அமைப்புகள் இல்லை. ஆனால், எத்தனை காரணங்கள் சொன்னாலும், உலகமும் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அனுபவிக்கும் உலகமயமாக்கலின் சுகங்களை, பன்னாட்டு நிறுவன வேலைகளை, உடைகளை, உணவுகளை, வாழ்வுமுறையை திரிபுரா மக்களால்  எத்தனை நாள் தான் தவிர்த்திருக்க முடியும்? அதுவும் அனைத்தும் அனைவருக்கும் தெரிய வரும் இந்த தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில்!  தன்னை இந்தியாவின் ஏழை முதல்வர் என்று பத்திரிகைகளும் மக்களும் சொல்வதைத் தான் ரசிப்பதாகவும் அதனால் மகிழ்வதாகவும் ஒருமுறை கூறியிருந்தார் மாணிக் சர்க்கார். முதல்வர் அப்படியிருக்கலாம். மக்களிடமும் அதை எதிர்பார்க்க முடியுமா?  

இத்தனையும் சேர்ந்து, மக்கள் மாற்றத்தை நோக்கி சென்றனர். அந்த மாற்றமாக பாஜக தன்னைக் காட்டிக்கொண்டு வென்றுள்ளது. இனி, மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்குமா என்பது வரும் காலத்தில் தான் தெரியும். அவர்கள் எதிர்பார்த்த மாற்றமும் வளர்ச்சியும் அவர்களுக்குக் கிடைக்கலாம், ஆனால் அதன் விலை அவர்களுக்கு உடனடியாகத் தெரியாது. நமக்கு அது நன்றாகவே தெரியும்!          

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.