Skip to main content

தமிழ்நாட்டுக்கு இனி தேர்தலே கிடையாதா?

Published on 07/01/2019 | Edited on 07/01/2019
election commission


என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை என்று திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையாவின் மாடுலேஷனில் கேட்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம்.
 

சட்டமன்ற ஜனநாயகத்தையும், தேர்தல் நடைமுறைகளையும் கேலிக்கூத்தாக்கும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குறிப்பாக தேர்தல் நடைபெற வேண்டிய 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி முடித்திருக்க வேண்டிய உள்ளாட்சித்  தேர்தலையும் நடத்தாமல் இழுத்தடிப்பதில் மத்திய பாஜக அரசும் தேர்தல் ஆணையமும் அதிமுக அரசை காப்பாற்றும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறது.
 

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய எழுச்சி ஜெயலலிதாவையே ரொம்பவே கலங்கடித்திருந்தது. அந்தத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் தில்லுமுல்லு செய்து பெற்ற வெற்றிக்குப் பிறகு கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, கட்சியின் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக இதைக்காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நிலை இருக்கும். அப்படி ஒரு நிலை வந்தால் ஆட்சி நடத்துவது ரொம்பவும் கடினம் என்று நேரடியாகவே கூறியிருக்கிறார்.
 

இதையடுத்தே, பேரூராட்சி, ஒன்றியத்தலைவர், நகராட்சித் தலைவர், மேயர் என எல்லா பொறுப்புகளுக்கும் கவுன்சிலர்களை வைத்தே தேர்வு செய்வது என்ற முடிவை எடுத்தார். தவிர, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை பெற வசதியாக பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு என்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்தும் திருத்தங்களை வெளியிட்டார். இதையடுத்து மாற்றப்பட்ட விதிகளை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது.
 

புதிய விதிகளை திருத்தி தேர்தலை நடத்தும்படி உயர்நீதிமன்றம் சொன்னதை நிறைவேற்றாமல் அதிமுக அரசு இன்றுவரை தாமதம் செய்தது. இந்நிலையில்தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கே மாதங்களில் 2016 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தார். அந்த மரணத்தில் இருக்கும் மர்மம் இதுவரை அவிழ்க்கப்படாமல் தினம் ஒரு சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 

ஜெயலலிதா மருத்துவமனையில் யாரும் பார்க்கமுடியாத நிலையில் இருக்கும்போது, 2016 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட தஞ்சை, அரவாக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் பதவியேற்பதற்கு முன்னரே உறுப்பினர் மரணம் அடைந்ததால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
 

ஜெயலலிதா கையெழுத்து போட முடியவில்லை என்றும் ரேகை வைத்தார் என்றும் திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். வாக்குப்பதிவு அன்று ஜெயலலிதா உற்சாகமாக இருப்பதாகவும், இட்லி சாப்பிட்டார் என்றும் பேட்டி கொடுத்தார்கள். 2017 நவம்பர் 19 தேதி அந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று நவம்பர் 22 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. சின்னம் ஒதுக்கும் பரிந்துரைக் கடிதத்தில் ரேகை வைத்திருந்த ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையில் கையெழுத்துப் போட்டிருந்தார். அந்தக் கையெழுத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

இந்நிலையில்தான் தேர்தல் முடிந்து 13 நாட்களில் ஜெயலலிதாவின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்ததைப் போல ஒரு சீன் கிரியேட் செய்யப்பட்டு டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை மரணம் அடைந்தார் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிலும்கூட பல குளறுபடிகள் இருந்தன.
 

மாலை 6 மணிக்கே ஜெயலலிதா மரணம் என்று அறிவிப்பு வெளியானது. பின்னர் அது மறுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தமிழகத்திலேயே தங்கி, அதிமுகவின் தற்காலிக முதல்வராக ஓபிஎஸ்சை தேர்ந்தெடுத்து பதவியேற்க உதவினார் என்றுகூட செய்திகள் வெளியாகின.
 

ஜெயலலிதாவை அடக்கம் செய்த கையோடு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் அத்தனைக்கும் பாஜகவே காரணமாக இருந்தது. அதிமுகவை உடைத்து, சசிகலா குடும்பத்தை வெளியேற்றி தனக்கான ஒரு ஆளாக ஓபிஎஸ்சை பயன்படுத்த பாஜக விரும்பியது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியே பாஜகவின் மிகச்சிறந்த விசுவாசியாக செயல்பட ஒப்புக்கொண்டதால் இரு அணிகளையும் இணைக்கும் புரோக்கராகவும் பிரதமர் மோடி செயல்பட்டார் என்று விமர்சனங்கள் வெளியாகின.
 

அதன்பிறகு, தமிழகம் இதுவரை திமுக, அதிமுக ஆட்சிகளில் அனுபவித்து வந்த சலுகைகள் ஒவ்வொன்றாக பாஜக பறித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு எந்த நெருக்கடியும் வந்துவிடாமல் பாதுகாக்க கூலியாக தமிழகத்தின் உரிமைகளையும் வளங்களையும் பாஜக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
 

சுருக்கமாக, தமிழக அரசை மோடி ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்குகிறார் என்று பகிரங்கமாகவே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், மற்ற தலைவர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். அதைக்காட்டிலும், ஜெயலலிதாவுக்கு மண்டியிட்ட அமைச்சர்கள் இப்போது மோடியிடம் அடிமையாக செயல்படுவதாகவே மேடைதோறும் கிண்டல் செய்யும் நிலை இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். அப்போதிருந்து அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதுதொடர்பான வழக்கு விசாரணை பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அந்தத் தீர்ப்பின் நகல் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. எனவே, காலியான தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிக்கப்படவில்லை.
 

kalaivanan


அந்தத் தீர்ப்பு வெளியான பிறகுதான் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இறந்தார். கலைஞர் மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியும் காலியானது. எனவே, தமிழகத்தில் 20 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கிற நிலையில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட இருந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்று தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதினார். அதையடுத்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் தலைமைச் செயலாளர் கிரிஜா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதாக தற்போது தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.
 

அதாவது, தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று தலைமை தேர்தல் ஆணையத்தை கிரிஜா கேட்டுக்கொண்டிருக்கிறார்.
 

இப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ள நிலையில், கஜா புயல் புரட்டிப்போட்ட திருவாரூர் தொகுதிக்கு மட்டும் டிசம்பர் 31 ஆம் தேதி தேர்தலை அறிவித்தது ஏன் என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவே இல்லை.
 

ஆனால், ஏப்ரல் மாதம் வரை எந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்பதை மட்டும் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

ஏப்ரல் வரைதான் நடத்தப்படாதா? எப்போதுமே நடத்தப்படாதா என்பது போகப்போகத்தான் தெரியும்…
 

மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும்போது நிச்சயமாக தமிழகத்திலும் இந்த அடிமை ராஜ்ஜியம் ஒழிக்கப்படும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
 

 

 

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே!'-மோடி அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே' என பாஜக அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு நிறுவனம்  தூர்தர்ஷன். சமீபத்தில் அதன் இலச்சினையின் நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் பொதிகை என்பதை சமீபத்தில் 'டிடி தமிழ்' என்று மாற்றிய தூர்தர்ஷன் நிறுவனம், அதனுடைய இலச்சினையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காவி நிறம் என்பது ஒரு கட்சியின் அடையாளமாக இருக்கும்போது, இந்த நிறம் மாற்றம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கட்சிக்காக அரசு தொலைக்காட்சி நிறுவனமே கட்டணம் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

தூர்தர்ஷன் மேலதிகாரிகள் இந்த நிறமாற்றம் காவிநிறமல்ல, ஆரஞ்சு நிறம் என விளக்கம் அளித்துள்ளனர்.ஏன் இந்த நிறமாற்றம் தேர்தல் நடைபெறும் போது செய்தார்கள்? அதற்கான அவசரத் தேவை என்ன வந்தது இப்போது? இது அந்தக் கட்சிக்கான அரசியல் ஆதாயத்திற்கானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமீபத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 8 மணி மணிக்கு 'கேரள ஸ்டோரி' படத்தை அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பியது மிகுந்த சர்ச்சையை உண்டு பண்ணியது. கேரள முதல்வர் வேண்டுகோளையும் மீறி இது ஒளிபரப்பப்பட்டது.

ஒரு மதப் பிரிவினரை, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, எவ்வாறு ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தேர்தல் நேரத்தில் அதை ஒளிபரப்பு செய்யலாம்?

தேர்தல் நேரத்தில் மத மோதலை உண்டு பண்ண ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தூண்டியதாகவே கருத வேண்டியுள்ளது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது? தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் இலச்சினை கலர் மாற்றத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.