Skip to main content

ஸ்டாலின் குரலை இந்தியா வழிமொழியும்! -எஸ்.எஸ்.சிவசங்கர் 

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
kalaignar indira gandhi




''பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிகிறேன்'' என்று கலைஞர் சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவித்தார். ஸ்டாலினின் பேச்சு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 



இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏமான எஸ்.எஸ்.சிவசங்கர்:-




தலைவர் கலைஞர் திருவுருவ சிலை திறப்பு விழா. தலைவர் கலைஞர் இருந்து ஒரு கழக விழா நடந்திருந்தால் என்ன நடைபெற்றிருக்குமோ, அது சிறப்பாகவே நடந்துள்ளது. தலைவர் கலைஞர் இடத்தில் இருந்து, தலைவர் ஸ்டாலின் நடத்தி இருக்கிறார்.

 

1980 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல். இந்திராவை அழைத்து, சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை தலைவர் கலைஞர் நடத்தினார். அது அகில இந்திய அரசியலில் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

 

காரணம், இந்திராவும் கலைஞரும் எதிரெதிர் அணியில் இருந்திருந்தனர். அவர்கள் கூட்டணி அமைத்தது தான் அதிர்ச்சிக்கு காரணம்.

 

1976 ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். எதிர்கட்சிகளை இரும்புக் கரம் கொண்டு நசுக்கினார். கலைஞர் தலைமையிலான தி.மு.க, நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தது. தி.மு.க ஆட்சியை கலைத்தார் இந்திரா. 

 

சர்வாதிகார ஆட்சியின் ஆட்டம் எல்லையை கடந்தது. இந்தியாவே இந்திரா மீது கோபம் கொண்டது. 1977 தேர்தலில் அது பிரதிபலித்தது. இந்திரா காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.  ஜனதாவில் இருந்த தலைவர்கள் இடையிலான மோதலில் ஜனதாவும், ஆட்சியும் சிதைந்தது. மக்களின் நம்பிக்கையை இழந்தது ஜனதா. ஜனதா தலைவர்கள் ஜோக்கர்களாக கருதும் சூழல் ஏற்பட்டது.

 

அந்த நிலையில் நாட்டின் நிலையே சிக்கலானது.  ஒரு நிலையான ஆட்சி அமைந்தால் தான் இந்தியா காப்பாற்றப்படும் என்ற சூழல். அந்தக் கட்டத்தில் தான், கலைஞர் இந்திராவுடன் கூட்டணி அமைத்தார். "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக!" என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை முழங்கினார். இந்தியாவிலேயே முதல் குரல் கலைஞருடையது தான். அதுவே இந்தியாவின் குரலாகவும் ஆனது. இந்திரா 374 தொகுதிகளில் வென்று, பிரதமரானார். 

 

1989 ஆம் ஆண்டு. காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்காந்தி போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நேரம். வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியை வடிவமைத்தவர்களில் கலைஞர் முக்கியமானவர். வி.பி.சிங் பிரதமரானார்.

 

kalaignar vajbai



1996 ஆம் ஆண்டு தேர்தல். காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர். காங்கிரஸ் தோல்வியை தழுவியது. ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தி.மு.க இணைந்தது. தெற்கில் இருந்து தேவகௌடா பிரதமராக, கலைஞரே முக்கியக் காரணம். தனக்கு வந்த பிரதமர் வாய்ப்பை, "என் உயரம் எனக்கு தெரியும்" என்று உதறினார் கலைஞர்.

 

1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு  ஜெயலலிதா ஆதரவில் அமைந்திருந்தது. தி.மு.க அரசை கலைக்க வாஜ்பாய்க்கு ஜெயலலிதா நெருக்கடி கொடுத்தார். வாஜ்பாய் ஒப்புக் கொள்ளவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி. வாஜ்பாய் ஆட்சிக்கான ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்று, ஆட்சியை கவிழ்த்தார்.

 

ஜெயலலிதாவின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த, அந்த நேரத்தில் வாஜ்பாய்க்கு தி.மு.க ஆதரவளித்தது. வாஜ்பாய் பிரதமர் ஆனார். குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் வாஜ்பாய் தலைமையிலான அரசில் தி.மு.க இடம் பெற்றது. பின்னர் பா.ஜ.கவின் மதம் சார்ந்த நடவடிக்கைகள், குஜராத் கலவரம் போன்றவை தி.மு.கவின் ஆதரவை விலக்கிக் கொள்ள செய்தது.

 

sonia


 

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல். பா.ஜ.க ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தது. காங்கிரஸ் தலைவராக சோனியா வந்திருந்தார். சோனியாவை பிரதமராக முன்மொழிந்தார் கலைஞர். காங்கிரசிலேயே முன்மொழியாத போது, சோனியா மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார் கலைஞர்.

 

 ஆனால் வெளிநாட்டவர் என தன்னை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்ததை மனதில் கொண்டு பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார் சோனியா.  அப்போதிருந்து கலைஞர் மீது சோனியாவிற்கு தனி மரியாதை ஏற்பட்டது.
 

வரலாறு திரும்பி இருக்கிறது, இப்போது. 

 

மோடியின் ஆட்சியில் இந்தியா கிழித்துப் போடப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சிக்கான எச்சரிக்கை மணியை,  ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள் அடித்துள்ளன.
 

ஆனால் இந்த தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கடந்த 2017 ஆம் ஆண்டு கலைஞர் பிறந்தநாள் விழாவிலும், முரசொலி பவள விழாவிலும் இந்திய அளவில் ஓர் எதிர்கட்சி ஒற்றுமைக்கான வழியை ஸ்டாலின் காட்டினார்.

 

stalin 21



இப்போது தலைவர் கலைஞர் சிலை திறப்புவிழாவில், அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்தியாவிற்கு தலைப்பு செய்தியை கொடுத்துள்ளார்.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கிறார். காங்கிரஸில் இருந்து குரல் வரும் முன்பே, தலைவர் கலைஞர் இடத்தில் இருந்து ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.

 

இந்திய அளவில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய கட்சி தி.மு.க. கணிசமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. பி.ஜே.பிக்கு வாய்ப்பு இல்லாத மாநிலமும் இது தான். தி.மு.க உறுதியாக அடுத்து வரும் தேர்தலில் வெல்லும் என்ற சூழலில் ஸ்டாலின் இந்த அறிவிப்பைக் கொடுத்திருப்பது ஓர் முக்கிய நகர்வு.

 

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இதரக் கட்சிகளோ அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகள் இனி பேரம் பேச வாய்ப்பு இல்லாத நிலையை உருவாக்கி விட்டார் ஸ்டாலின்.


 

ss sivasankar


 

சேடிஸ்ட் பிரதமர் மோடி ஆட்சி நீடிக்கக் கூடாது என்பதையும் அறிவித்து விட்டார் ஸ்டாலின்.

 

தமிழகத்தின் குரலாக, தலைவர் கலைஞரின் குரலாக தலைவர் ஸ்டாலின் ஒலித்திருக்கிறார், அதுவும் தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில்.

 

தேசிய அரசியலில் தன் முத்திரையை பதித்து விட்டார் ஸ்டாலின். இதுவரை கலைஞர் முன்மொழிந்து பல பிரதமர்கள் உருவானார்கள். இப்போது ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார்.

 

ஸ்டாலின் குரலை இந்தியா வழிமொழியும்!

 

 


 

 

 

 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Deva Gowda crictizes Rahul gandhi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.