Skip to main content

ஒரு விரல் ‘மை’க்குள் இத்தனை விஷயம் இருக்கா?

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

இந்தியாவில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இது இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் ஆகும். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஜனாநாயகத்தின் அடையாளம் தேர்தல் என்றால் தேர்தலின் அடையாளம் வாக்கு. அப்படிபட்ட மதிப்புமிக்க வாக்கினை செலுத்தியதற்கான அடையாளம் தான் தேர்தல் மை. தேர்தலில் குடிமகன் ஒருவர் வாக்குச்செலுத்துவதற்கு முன்பு அவருக்கு இடது கை ஆள் காட்டி விரலில் மை ஒன்றை வைப்பார்கள். மீண்டும் அந்த வாக்காளர் கள்ள ஓட்டு செலுத்திவிட கூடாது என்பதற்காகவும் அல்லது அவர் வாக்கு செலுத்திவிட்டார் என்பதை உறுதிப்படுத்தவும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. எளிதில் தேர்தல் மையை அழித்துவிட முடியாது ஆதலால்தான் அந்த மையை தேர்தல் இவ்வாறு பயன்படுத்துகிறார்கள். அது ஏன் அழிக்க முடியாது, எப்போது இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று பார்ப்போம். 
 

ink

 

இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபின் 12 வருடங்கள் கழித்துதான் முதன் முதலில் தேர்தலில் மை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது அனைத்து குடிமகன்களிடமும் அடையாள அட்டை இல்லாததால் வாக்கு செலுத்துவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. இதனை தடுக்கும் எண்ணத்தில்தான் முதன் முதலில் அந்த தேர்தலில் வாக்கு செலுத்தியவர்கள் விரலில் அழிக்கமுடியாத மை பூசியுள்ளனர். இதன் மூலம் எளிதாக வாக்குச் செலுத்தியவர் யார் என்பதை அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.
 

தற்போதுதான் வாக்களார் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. பின்னர் ஏன் இந்த மை வைக்கும் விதிமுறை பின்பற்றப்படுகிறது என கேட்கலாம். அப்படி இருந்தும்தான் கள்ள ஓட்டு மோசடிகள் நடைபெறுகிறதே என்ற காரணம்தான் மை வைக்கும் விதிமுறை பின்பற்ற காரணமாக இருக்கிறது.
 

2006ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, இடது கையின் ஆள்காட்டி விரலில் நகமும் சதையும் சேரும் இடத்தில் மை வைக்கப்பட்டு வந்தது. இதன் பின் 2006-லிருந்து கோடு போல் நகத்திலிருந்து விரல் வரை நீட்டி வைக்கப்பட்டது.
 

voters

 

 

1962ஆம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகம், என்பிஎல், என்ஆர்டிசி உள்ளிட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து மைசூர் பெயிண்ட் அண்ட் வாரினிஷ் லிமிடெட் நிறுவனத்திடம் தேர்தலுக்கான அழிக்கமுடியாத மை உற்பத்தி செய்து தருமாறு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் மாநில, மத்திய உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களுக்கும் மை இந்நிறுவனம்தான் உற்பத்தி செய்து தருகிறது. இது கர்நாடக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். எம்.எல். கோயல் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுதான் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீல நிற மையை கண்டுபிடித்தது.
 

இந்த மையில் சில்வர் நைட்ரேட் என்ற ரசாயணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கையில் வைக்கும்போது புற ஊதா வெளிச்சம் படும்போது அதன் அடர்த்தி 7 முதல் 25 சதவீதம் மாறுகிறது. மை தோலின் செல்களில் கலந்துவிடுகிறது. இதனால்தான் அதை அழிக்க முடியவில்லை.அந்த மையானது குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அடர்த்தியான ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. சுமார் 20 நாட்கள் வரை இந்த மை அழிய எடுத்துக்கொள்கிறது. புதிய செல்கள் மை வைத்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியாக பின்னர் மை முற்றிலுமாக மறைகிறது.
 

ஒரு சின்ன குப்பியில் இருக்கும் 5 மி.லி தேர்தல் மையை 300 வாக்காளர்களிடம் பயன்படுத்த முடியுமாம். 45 வருடங்களாக இந்த நிறுவனத்தால் உருவாக்கப்படும் மையைதான் இந்திய வாக்களர்களின் விரலில் பூசுகிறார்கள். தாய்லாந்து, சிங்கப்பூர், நைஜீரியா, மலேசியா, தென் ஆஃப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த நிறுவனம்தான் தேர்தல் மை ஏற்றுமதி செய்கிறது.
 

இந்த வருடம் இந்திய பொதுத் தேர்தலில் 90 கோடி பேர் வாக்கு செலுத்த இருக்கின்றனர். வாக்கு செலுத்திய பின் இந்த மையைதான் பூசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.