Skip to main content

ரெய்டு விட்டு அ.தி.மு.க. வை அலறவிட்ட பா.ஜ.க. இப்போது தி.மு.க.வை நோக்கி ...

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

மார்ச்.29-ஆம் தேதி இரவு 10.30 மணி. வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டிற்கு முரளிதரன், மனோஜ், சதீஷ் என  மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் டீம் வந்திறங்குகிறது. தாங்கள் வருமானவரித்துறையில் இருந்து வருவதாகவும் வீட்டை சோதனை போட வேண்டும் எனவும் கூறியதை அடுத்து, துரைமுருகனுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள், அவரது வேலையாட்கள். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த துரைமுருகன், அவர்களைப் பற்றி விசாரிக்க, அரக்கோணம் தேர்தல் பார்வையாளர்கள் என்ற அடையாள அட்டையைக் காட்டியுள்ளனர்.

 

durai murugan



"இதை யார் வேண்டுமானாலும் காட்டலாம், முறையான ஆவணத்தையோ, செர்ச் வாரண்டையோ காட்டுங்க' என்றதும், வெளியில் சென்றவர்கள் மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து, விஜய்தீபன் என்ற வருமான வரித்துறை அதிகாரியுடன் வீட்டிற்குள் வந்தனர். இந்தத் தகவல் வெளியில் பரவி, ஏராளமான தி.மு.க.வினர் துரைமுருகன் வீட்டின் முன்பு குவிந்துவிட்டனர். 

 

duraimurugan



இதை பார்த்து டென்ஷனான ஐ.டி.டீம் "கூட்டத்தை ஏன் கூட்றீங்க' என துரைமுருகனிடம் கடுப்பு காட்ட, "என்னோட கட்சிக்காரங்க வர்றத நீங்க கேள்வி கேட்கக் கூடாது' என பதிலுக்கு துரைமுருகன் சூடானதும், காட்பாடி டி.எஸ்.பி.சங்கர் தலைமையிலான போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. 

ஒரு வழியாக ரெய்டு செய்வதற்கான பேப்பரை தயார் செய்து கொண்டு, பின்னிரவு 3 மணிக்கு வந்து, 30-ஆம் தேதி காலை 8.30 மணி வரை சோதனை நடத்தினர். இதே சமயம் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி. தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் மாணவ-மாணவியர் விடுதிகளிலும் மாஜி தி.மு.க. மா.செ. ஆலங்காயம் தேவராஜ், மாஜி பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி ஆகியோரது வீடுகளிலும் மாலை வரை சோதனை நடத்தினார்கள்.  மற்றபடி அவர்கள் நினைத்தபடி பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.
 

duraimurugan



"ரெய்டெல்லாம் முடிச்சுட்டோம் ஓவர்…..ஓவர்….. பெருசா எதுவும் சிக்கல ஓவர்…ஓவர்'' என இங்கிருந்து தகவல் பாஸானதும், ""அப்படியெல்லாம் விட்ரக்கூடாது ஓவர்... ஓவர்... தி.மு.க. இமேஜை டேமேஜ் பண்ணுங்க ஓவர்...……ஓவர்''……என சிக்னல் கிடைத்ததும், ஏப்.01-ஆம் தேதி மீண்டும் ரெய்டை ஆரம்பித்தனர். 

மீண்டும் கிங்ஸ்டன் இன்ஜினி யரிங் காலேஜ், துரைமுருகன் குடும்பத்திற்கு நெருக்கமான பூஞ்சோலை சீனுவாசனின் வீடு, சிமெண்ட் குடோன், சீனுவாசனின் அக்கா வீடு, துரைமுருகனின் பி.ஏ.அக்ஸர் அலியின் வீடு உட்பட எட்டு இடங்களில் ரெய்டு அடித்தனர். மொத்தத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தை வீடியோவாக எடுத்து சென்னைக்கு அனுப்பி, அங்கிருந்தே மீடியாக்களுக்கு அந்த பணக்கட்டு வீடியோவை ரிலீஸ் செய்து சுறுசுறுப்பு காட்டினார்கள் ஐ.டி.அதிகாரிகள். 200 ரூபாய் நோட்டுக் கட்டுகள், வார்டு வாரியான விவரங்கள் எல்லாம் டி.வி சேனல்களில் ஃப்ளாஷ் ஆக, தி.மு.க. தரப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த ரெய்டு செய்திகள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில்தான், அதே வேலூர் மாவட்டத்தின் சோளிங்கர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார் மு.க.ஸ்டாலின். "இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை' என விமர்சித்தார். 

தேர்தல் பணிகளை முடக்குவதாகக் கூறி, ரெய்டுக்கு எதிராக தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதையெல்லாம் பற்றி கவலைப்பட வேண்டாம் என மேலிடத்தி லிருந்து வந்த உத்தரவையடுத்து, ஓட்டுக்காக கதிர் ஆனந்த் தந்த பணம்தான் இது என சீனுவாசனை மிரட்டி வாக்குமூலம் வாங்கும் வேலைகளில் தீவிரம் காட்டுகிறது வருமான வரித்துறை. 

இந்த ரெய்டின் பின்னணி குறித்தும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் நமக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி யிடம் கேட்டோம். “""மத்திய உளவுத்துறையான ஐ.பி.யும் இங்கிருக்கும் உளவுத்துறையும் நாலு நாளைக்கு முன்னால எடுத்த சர்வேயில் ஆளும் கட்சி கூட்ட ணிக்கு சாதகமான சூழல் இல்லை. முதல்வர் எடப்பாடி யின் பிரச்சாரமும் சுத்தமா எடுபடல. இதனால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு உளவியல் ரீதியா அட்டாக் கொடுத்தா தான் சரிப்படும் என்பதால், தி.மு.க.வின் வெயிட்டான கேண்டிடேட்டாக இருக்கும் கதிர் ஆனந்தை இப்போதைக்கு குறி வைத்திருக்கிறார்கள். அடுத்த அசைன்மெண்ட் எப்போது, எப்படி என்பது தெரியல'' என்கிறார்.

வேலூர் மாநகர உ.பி.க்களோ, ""எங்களை எதிர்த்து நிற்கும் ஏ.சி.சண்முகத்தின் பிரஷ்ஷரும் இதில் இருக்கு. தினமும் அவரு 30 லட்ச ரூபாயை அள்ளி இறைக்கிறாரு. ஐ.டி.காரர் களுக்கு அதெல்லாம் தெரியாதா? அதைவிட முக்கியமானது, எங்க கட்சிக்குள்ளேயே இருக்கும் சிலர், பணம் இருக்கும் இடத்தை கரெக்டா போட்டுக் கொடுத்துவிட்டார்கள்'' என பகீர் கிளப்பினார்கள்.

ரெய்டு அடித்து ரெய்டு அடித்தே அ.தி.மு.க.வை அலறவிட்டு, கூட்டணிக்குப் பணிய வைத்த பா.ஜ.க., இப்போது தி.மு.க.வை நோக்கி அதே ஆயுதத்தை வீசியுள்ளது.  

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.