Skip to main content

ரெய்டில் சிக்கும் தமிழக அமைச்சர்கள்! 2 பேரை காப்பாற்றும் டெல்லி! பதட்டத்தில் 12 பேர்!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
ddd

 

"பிரதமர் நரேந்திர மோடி யார் மீது தனது இடது கையை வைக்கிறாரோ அவர்களுக்கு கஷ்டகாலம்தான் என்பது அதிமுகவினரின் நம்பிக்கை. ஜெயலலிதா மரணத்தின்போது தனது இடது கையை சசிகலா மீது வைத்தார். அவர் சிறைக்குப் போனார். அதே இடது கையை ஒரு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நரேந்திர மோடி வைத்தார். அதில் ஒரு சுவையான பின்னணி இருக்கிறது'' என்கிறார்கள் அதிமுகவினர்.

 

குட்கா ஊழலின் சிபிஐ விசாரணையில் சிக்கியிருக்கும் விஜயபாஸ்கர், அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க அடிக்கடி டெல்லி சென்று வந்தார். சுகாதாரத்துறையில் மேலும் பல ஊழல் புகார்கள் கிளம்பின. தனது பிரச்சனையை தீர்க்க டெல்லி சென்று வந்த விஜயபாஸ்கர் பிரதமரின் பார்வையில் பட்டுவிட, முழு டீடெய்லையும் விசாரித்து வாங்கி விட்டார் பிரதமர். அதன் எதிரொலியாகத்தான் விஜயபாஸ்கரை ஒரு விழாவில் சந்தித்தபோது இடது கையால் ஆசிர்வாதம் செய்தார்.

 

அதுபோல மோடியின் ஹிட் லிஸ்டில் ஏகப்பட்ட மந்திரிகள் சிக்கியிருக்கிறார்கள். போக்குவரத்துத்துறையில் 750 பஸ்களின் சேஸ்களை வாங்காமலேயே வாங்கியதாக போக்குவரத்துத் துறை அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கர் போலி கணக்கு காட்டி மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருக்கிறார். மதுரை அன்பு என்கிற சினிமா பைனான்ஸியர் மூலம் கோடம்பாக்கம் சினிமாத் துறையையே ஆட்டிப் படைத்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருக்கிறார். விஞ்ஞானி செல்லூர் ராஜுவும்கூட இந்த லிஸ்டில் தப்பவில்லை.

 

இவர்களையெல்லாம்விட மத்திய அரசின் பார்வையில் சிக்கியிருப்பவர் ஒரு முக்கிய அதிமுக விஐபி. இவரது மகன் தொடர்பான பாலியல் வழக்கு சிபிஐயின் விசாரணையில் இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்தும் அளவுக்கான விவகாரம் இது என்கிறது டெல்லித் தரப்பு. இதுபற்றி எடப்பாடியிடம் பேசி அவரை டம்மியாக்குங்கள், எந்த நேரத்திலும் அவரது மகன்மீது சிபிஐ பாயக்கூடும் என மத்திய உள்துறை எச்சரித்தது. அதற்கு பதிலளித்த மாநில அரசு, இந்த விவகாரத்தில் அவரது மகன் சம்மந்தப்பட்டிருக்கிறார் என எங்களுக்கு தெரியும். அதனால்தான் நாங்கள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டோம். தமிழக போலீஸ் இந்த வழக்கை விசாரணை செய்தால் அந்த விஐபி எங்களுக்கு மகனை இந்த விவகாரத்தில் இருந்து விடுவிக்கு மாறு தொல்லைகொடுப்பார். அதனால்தான் சிபிஐக்கு காமக் கொடூர வழக்கை நாங்கள் மாற்றினோம் என பதில் சொன்னார்கள்.

 

மத்திய அரசு இவ்வாறு கேள்வி கேட்பதும், அந்த வி.ஐ.பி.யை பொள்ளாச்சியில் இருந்து மாற்றி திருப்பூர், காங்கேயம் பகுதிகளை கவனித்துக்கொள் ளும் கட்சிப் பொறுப்பு தரப்பட்டது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

ஒரிசாவைச் சேர்ந்த பரணி எர்த் மூவர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தும் பிரபாகரன். இவர் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆர்.எஸ்.எஸ்- அமைப்புக்கு நிறைய நிதி கொடுத்து அந்த அமைப்புடன் பல்லாண்டு காலமாக தொடர்பை வளர்த்து வருபவர் பிரபாகரன்.

 

இந்த பிரபாகரனைப் பிடித்துதான் அமைச்சர் தங்கமணியும், அமைச்சர் வேலுமணியும் எடப்பாடிக்கும்- பாஜகவிற்கும் நட்பு பாலம் அமைத்தார்கள். இந்த பிரபாகரன் ஜக்கி வாசுதேவுக்கும் நெருக்கமான நண்பர். இவர் மூலமாக பியூஷ் கோயல், அமித்ஷா ஆகியோரை தங்கமணியும், வேலுமணியும் எளிதாக சந்தித்து வருவார்கள். எடப்பாடி தனது டெல்லித் தொடர்புகளை இந்த இருவர் மூலம்தான் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

 

சமீபத்தில் எடப்பாடி டெல்லியுடன், பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா மூலம் தொடர்புகளை ஏற்டுத்திக்கொண்டார். அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சில வாரங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதேபோல் வேலூர் அமைச்சர் வீரமணியையும் விசாரணைக்கு உட்படுத்தியது. இவையெல்லாம் எடப்பாடி தங்கமணி, வேலுமணியை மீறி தனது டெல்லி தொடர்புகளை வலுவாக்கிக்கொண்டதன் அடையாளம் என்கிறார்கள் அதிமுகவைச் சார்ந்தவர்கள்.

 

டெல்லியைப் பொறுத்தவரை எடப்பாடி, ஓ,பன்னீர்செல்வம் ஆகிய இருவரை மட்டுமே காப்பாற்றுவார்கள். மற்றபடி தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி, போக்குவரத்து விஜய பாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் என 12 பேர் மீது பாய்வதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.

 

ஊழல் கட்சி திமுக, ஊழல் கட்சி காங்கிரஸ் என தமிழக தேர்தல் களத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நரேந்திரமோடி, தனது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.கவில் ஊழலை ஒழிப்பதன் அச்சாரமாக இந்த 12 அமைச்சர்கள் மீது வருமான வரித்துறையையும் பொள்ளாச்சி வி.ஐ.பி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏவுவதற்கு முயற்சிக்கிறது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா மீது பாய்ந்தது போல், வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் அதிமுக அமைச்சர்கள் மீது டெல்லி பாய இருக்கிறது என்கிற பதட்டம் அதிமுக வட்டாரங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.