Skip to main content

ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் அதிரடிக்கு அணை போடும் டி.ஜி.பி.!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
pon manickavel


 


"சிலைக் கடத்தலில் ஈடுபட்ட ஒருத்தரும் தப்ப முடியாது. எல்லோரையும் கைது செய்வேன்..” கடந்த 30-ம் தேதி மீசையை முறுக்கிவிட்டபடி இப்படிச் சொன்னார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல். அன்றைய தினம் அவர் பணி ஓய்வு பெற்றாலும், அவரது சேவை நாட்டுக்குத் தேவை என,   ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. 


தீர்ப்பை ஏற்றுக் கொண்ட பொன்.மாணிக்கவேல், தனக்கு அரசுத் தரப்பு எந்த நெருக்கடியும் அளிக்கவில்லை. ஆனால், அதிகாரிகள்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.  இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது 18 நாட்களிலேயே தெரிந்துவிட்டது. அதாவது, பொன்.மாணிக்கவேல் ரிட்டயர்டு ஆன பிறகு, எந்தப் பிரச்சனையும் இருக்காது என பலர் நம்பி இருந்தனர். ஆனால், அவர்களது நம்பிக்கை பொய்த்துப் போனதால், பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.


இந்நிலையில், விசாரணையைத் தீவிரப்படுத்திய பொன்.மாணிக்கவேல், இரண்டு நாட்களுக்கு முன் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளைக் கைது செய்தார். இது பலரது வயிற்றில் புளியை கரைத்தது.  அவருக்கு கீழே பணியாற்றும் காவலர்களை, பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக புகார் கொடுக்க வைத்து, இப்போது  நெருக்கடி கொடுக்கிறது ஆளுந்தரப்பு. மேலும் சில முக்கிய புள்ளிகள் இந்தச் சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  பொன்மாணிக்கவேலுக்கு எதிராக சிலைகடத்தல் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ உள்ளிட்ட 13 காவல் அதிகாரிகள் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


 




புகாரில், தங்களை வேலை பார்க்கச் சொல்லி நெருக்கடி கொடுப்பதாகக் கூறியிருக்கின்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஐ.ஜி மீது புகார் தெரிவித்தது குறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. 6 மாத பணிக்கு அழைத்துவிட்டு, 15 மாதங்களாக சிலைத் திருட்டு  தடுப்பு பிரிவில் வைத்திருப்பதாகவும், சொந்த ஊருக்கு இடமாறுதல் கோரி இருப்பதாகவும் தெரிவித்தனர். 


இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த ஏற்பாடு என்பது. இடமாறுதல் வேண்டும் என்றால், அதற்கான காரணங்களைத் தெரிவித்து மேலதிகாரியிடம் மனு அளித்து, நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இதுதான் நடைமுறை. ஆனால், இடமாறுதல் கேட்டோம் என பிரஸ் மீட் வைத்துச் சொல்வது எல்லாம் தமிழக காவல் துறைக்கு புதிது. இதற்காகவே, பிரஸ் மீட் வைத்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், சிறிது நேரம் கழித்து வெளியான டிஜிபி அலுவலக செய்திக் குறிப்பில், பொன்மாணிக்கவேல்.  தங்களை சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வற்புறுத்துவதால் தங்களுக்கு பணி இடமாறுதல் வேண்டும் என்று 13 காவல் அதிகாரிகள் புகார் மனு அளித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே,  ஆக்டிவாக செயல்படும் ஐ.ஜிக்கு அணை போடும் பகீரத முயற்சியில் டிஜிபி ரூட்டில் இறங்கியிருக்கிறது தமிழக அரசு.!


பொன். மாணிக்கவேல் மீது ஏன் பாய்ச்சல்? 

கடந்த 28 ஆண்டுகளில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் 135 உலோகச் சிலைகள் உட்பட 313 சிலைகளை மட்டுமே மீட்டனர். ஆனால், பொன்.மாணிக்கவேல்,  தனது 7 ஆண்டு கால பணிக்காலத்தில், வரலாற்று சிறப்பு மிக்க ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகள் உள்ளிட்ட 201 உலோகச் சிலைகள், விருத்தகிரீஸ்வரர் உள்ளிட்ட 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் என மொத்தம் 1,146 வரலாற்று சிறப்பு மிக்க பொக்கிஷங்களை மீட்டுள்ளார். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர், தீனதயாளன் இந்து சமய அற நிலையத்துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால், இணை ஆணையர் கவிதா என 48 பேரை கைது செய்திருக்கிறார்.  


ஓ..! பணியில் வேகம் காட்டுகிறாரா பொன்.மாணிக்கவேல்! ஆளும்தரப்புக்கு கோபம் வரத்தானே செய்யும்!

 


 

Next Story

“தன்னை தரதரவென இழுத்துச் சென்றதாக செந்தில் பாலாஜி சொன்னார்” - மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் நேரடியாக விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மனித ஆணையம் தாமாக வந்தும் விசாரணை செய்யலாம். புகார்கள் வந்தாலும் விசாரணை செய்யலாம். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் இன்று விசாரணை நடத்தினேன். அவர் அசதியுடன் காணப்பட்டதால் சிறிது நேரம் காத்திருந்து பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினேன். நெஞ்சு வலி இருப்பதால் அதிகம் பேச இயலவில்லை என செந்தில் பாலாஜி என்னிடம் கூறினார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார்.

 

அமலாக்கத்துறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், தன்னை தரதரவென இழுத்து சென்றதால் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் படுத்திருந்ததால் அவருடைய காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை நான் பார்க்க முடியவில்லை'' என்றார். அப்பொழுது செய்தியாளர்கள் 'அமைச்சர் என்பதால் மட்டும் மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரிக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''அப்படி எல்லாம் இல்ல எங்கு மனித உரிமை விதிமுறை மீறல் நடந்தாலும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இன்று அமைச்சரை விசாரித்ததால் ஊடகங்களில் பெரிதாக பேசுகிறீர்கள். மற்றபடி எல்லா மனித உரிமை மீறல் விவகாரங்களிலும் விசாரணை நடத்துவோம்'' என்றார்.

 

 

Next Story

கலாஷேத்ரா இயக்குநரிடம் விசாரித்த மனித உரிமைகள் ஆணையம்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Human Rights Commission questioned Kalashetra director

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

 

பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுத்த மாணவர்களை கலாஷேத்ரா நிர்வாகம் மிரட்டுவதைக் கண்டித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி  கண்ணன் தலைமையிலான குழுவினரின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமீனில் வராமல் தடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று (10.04.2023) கலாஷேத்ரா கல்லூரி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

Human Rights Commission questioned Kalashetra director
எஸ்.பி. மகேஸ்வரன்

 

இந்நிலையில் மாநில மகளிர் ஆணையத்தை தொடர்ந்து இன்று மனித உரிமைகள் ஆணையமும் கலாஷேத்ரா கல்லூரியில் விசாரணையில் ஈடுபட்டது. 6 வார காலத்திற்குள் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காலாஷேத்ராவில் விசாரணையை துவங்கினர். இந்த விசாரணை குழு சுமார் 1 மணி அளவில் தனது விசாரணையை நிறைவு செய்தது. இந்த ஒன்றரை மணி நேரத்தில், கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ், இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

 

Human Rights Commission questioned Kalashetra director
இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன்

 

தொடர்ந்து அடுத்த வாரம் தேர்வுகள் முடிந்த பிறகு கலாஷேத்ரா மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் இருந்து தகவல் சொல்லப்படுகிறது.