Skip to main content

சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
IG Eswaramoorthy




தமிழக உளவுத்துறை தலைவராக ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தியை நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் உள்துறை செயலர் பிரபாகர்! 
 


உளவுத்துறை தலைவராக இருக்கும் ஐ.ஜி.சத்தியமூர்த்தி, நாளை 31-ந் தேதியோடு ஓய்வு பெறுகிறார். உளவுத்துறையின் புதிய தலைவராக ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஐ.ஜி.க்கள் சிலரின் பெயர்களை முதல்வர் பரிசீலித்திருக்கிறார் என நக்கீரன் இதழிலும், நக்கீரன் இணையத்தளத்திலும் பதிவு செய்திருக்கிறோம். இந்தநிலையில், உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் ஈஸ்வரமூர்த்தி! தற்போது அவர் பதவி வகிக்கும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பொறுப்பையும் கவனிப்பார்.

 

கடந்த 2000-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக அந்தஸ்து பெற்றார்  ஈஸ்வரமூர்த்தி. சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஈஸ்வரமூர்த்தி, பணியில் மிக நேர்மையானவர். இயல்பாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டதில்லை ஈஸ்வரமூர்த்தி. கசப்பாக இருந்தாலும் உண்மையான தகவல்களை மட்டுமே அரசுக்கு தருவதில் உறுதியாக இருப்பவர்! 
 

கடந்த 22 ஆண்டுகால காவல்துறை பணியில் எந்த சூழலிலும் கான்ட்ராவெர்சியில் சிக்கிக் கொண்டதில்லை இவர். 
 

கடந்த 1998- ல் சிபிஐயில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட இவர், 2000-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அங்கீகாரம் கொடுத்தது மத்திய உள்துறை. 2000 - 2001 ஜூலை வரை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்பி யாகவும், 2001 ஜூலை முதல் 2003 மே வரை மேற்கு மண்டலம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக பணிபுரிந்தார் ஈஸ்வரமூர்த்தி. 

 

IG Eswaramoorthy


 

இதனைத் தொடர்ந்து, 2003 மே  முதல் 2003  அக்டோபர் வரை எஸ்.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக மீண்டும் நியமனம். 2003 அக்டோபர்  முதல் 2004 அக்டோபர் வரை 1 வருடம் தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்.பி.யாகவும்,  2004 அக்டோபர் முதல் 2005 செப்டம்பர் வரை  சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவின்  துணை ஆணையராக பணியாற்றினார். மீண்டும் எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக 2005 செப்டம்பர் முதல் 2007 நவம்பர் வரை நியமிக்கப்பட்டார். 
 

இதனைத்தொடர்ந்து, சி.பி.ஐ.க்கு மீண்டும் இவரை அழைத்துக்கொண்டது மத்திய அரசு. அதன்படி, 2007-நவம்பர் முதல் 2012 ஆகஸ்ட் வரை சி.பி.ஐ. யில் எஸ்.பி. (சென்னை) யாகவும் பணியாற்றிய ஈஸ்வரமூர்த்திக்கு டி.ஐ.ஜி. பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2012 நவம்பர் முதல்  2014 ஜூன் வரை சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி.யாக தனது பணியைத் தொடர்ந்தார். அதன் பிறகு 2014-ல்  ஈஸ்வரமூர்த்தியை தமிழக அரசு அழைத்துக்கொண்டது. மாநில பணிக்குத் திரும்பிய ஈஸ்வரமூர்த்தி, 2014 ஜூன் முதல்  2016 டிசம்பர் வரை மாநில உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். 2016-ல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, 2016 டிச முதல் 2019 ஜூன்  வரை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவை கவனித்தார். 2019 ஜூன்  முதல் 2020 மே வரை சென்னை  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பொறுப்பேற்ற ஈஸ்வர மூர்த்தி, தற்போது தமிழக அரசின் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 
 

உளவுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈஸ்வரமூர்த்திக்கு, ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.