Skip to main content

பாஜகவிற்கு வாங்க அமைச்சர் பதவி... எனக்கு அதிகாரம் வேணும்... மோடி, வாசன் சந்திப்பில் வெளிவராத தகவல்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

இரண்டு சந்திப்புகள் தமிழக அரசியலில் விவாதிக்கப்படுகின்றன. ஒன்று, பிரதமர் மோடி -த.மா.கா. தலைவர் வாசன் சந்திப்பு. அடுத்தது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு. கவர்னரை சந்திக்க எடப்பாடி கிளம்புகிறார் என தகவல் பரவியதும் அமைச்சர்கள் பலருக்கும் கிலியை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சரவை மாற்றம் இல்லை என தெரிந்ததும்தான் அமைச்சர்கள் பலரும் பெருமூச்சு விட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மோடியை சந்திக்க வாசன் டெல்லி பறந்துள்ளார் என்கிற செய்தி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பா.ஜ.க.வுடன் த.மா.கா.வை இணைக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே மோடியை வாசன் சந்திக்கிறார் என்கிற அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 6-ந் தேதி பிரதமர் இல்லத்தில் மோடியை சந்தித்தார் வாசன். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.


முதன்முறையாக மோடி பிரதமரானதும் (2014) பா.ஜ.க. எடுத்த முதல் அஸ்திரம் காங்கிரஸ் கட்சியை பலகீனப்படுத்துவதுதான். அதற்கேற்ப காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக காங்கிரஸை உடைப்பது என்பது முதல் அஜெண்டா. அந்த வகையில், மோடியின் வலையில் முதலில் சிக்கியவர் ஜி.கே.வாசன். குஜராத் தொழிலதிபர் அதானி மூலம் தமிழக காங்கிரஸிலிருந்து வாசனை வெளியேற வைத்து காங்கிரஸை உடைத்தது பா.ஜ.க., காங்கிரசுக்கு எதிராக மீண்டும் த.மா.கா.வை கட்டி எழுப்பினார் வாசன்.

 

 

bjp



ஆனால், "தி.மு.க. -காங்கிரஸ் கூட் டணி வலுவாக இருந்ததால் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. தலைமையும் வாசனும் போட்ட திட்டம் சோபிக்கவில்லை. குறிப்பாக, த.மா.கா. மீண்டும் உருவானதற்குப் பிறகு வந்த எந்த தேர்தலிலும் வாசன் அதிரடி அரசியல் செய்யுமளவுக்கு தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. இதனால், காங்கிரசை உடைத்து வாசனுடன் த.மா.கா.வுக்கு வந்த அரசியல் வி.ஐ.பி.க்கள் பலர் தாய்க் கட்சியான காங்கிரசுக்கும் மாற்று கட்சிகளுக்கும் தாவினார்கள். இதனால், வாசனின் அரசியல் செல்வாக்கில் மந்தநிலை ஏற்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் வாசன். அப்போது, மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிடலாமா என்கிற யோசனை அங்கு ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் இது குறித்துப் பேசினார் முகர்ஜி. வாசனை சேர்த்துக்கொள்ள சோனியா விரும்பினாலும், ராகுல்காந்தி ஏற்கவில்லை. "பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் சேர்த்துக் கொள்கிறோம்... வாசனை மட்டும் ஏற்க முடியாது' என கறாராக சொல்லிவிட்டார் ராகுல்காந்தி. இதனால் மீண்டும் காங்கிரஸ் த.மா.கா. இணைப்பு நடக்கவில்லை. இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து மீண்டும் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் வாசன். அப்போது, பா.ஜ.க.வில் இணைந்துவிட யோசனை சொன்னார் முகர்ஜி. அதனை அப்போது வாசன் ஏற்கவில்லை.

 

 

bjp



அதேசமயம், ரஜினியை அரசியலுக்குள் கொண்டுவந்து அவரை பா.ஜ.க.வில் இணைக்க வைக்கும் முயற்சியை பா.ஜ.க. தேசிய தலைமை எடுத்துக்கொண்டிருந்ததால் வாசன் குறித்து பா.ஜ. க.வும் யோசிக்கவில்லை. பா.ஜ.க.வின் திட்டத்துக்கு ரஜினி ஒத்துழைக்காத நிலையில்தான், நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா.வையும் தங்கள் கூட் டணிக்குள் கொண்டு வந்தது பா.ஜ.க.. அதிலிருந்தே மோடி மீது நம்பிக்கை வைத்தார் வாசன். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு நடந்துள்ளது. மோடியும் வாசனும் தங்களுக்குரிய விருப்பத்தை விவாதித்திருக்கிறார்கள். விரைவில், பா.ஜ.க.வில் வாசன் இணைவார்'' என்கின்றனர் ராகுல்காந்தியின் அறிவுஜீவி குழுவில் உள்ள தமிழக காங்கிரஸ் பிரபலங்கள்.

பா.ஜ.க.வின் தேசிய தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் கொள்கை வகுப்பாளர்களிடம் விசாரித்தபோது, "இரண்டாவது முறையாக மோடி பிரதமரானதைத் தொடர்ந்து அவரை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்தார் வாசன். அந்த அப்பாயின்ட்மெண்ட் நிலுவையிலேயே இருந்தது. சமீபத்தில் வாசனின் அப்பாயின்ட் மெண்ட் குறித்து மோடியிடம் பிரணாப் முகர்ஜி நினைவுப்படுத்தியிருக்கிறார். அந்த சமயத்தில்தான் சீன அதிபரை சந்திக்க சென்னை வந்த மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்த வாசனிடம், "டெல்லிக்கு வாங்க; சந்திக்கலாம் ; அப்பாயின்ட்மெண்ட் என்னைக்குன்னு உங்களுக்கு தகவல் வரும்' என சொல்லிவிட்டுப் போனார் மோடி. இதற்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது.

அதாவது, தமிழக பா.ஜ.க.வுக்கு தற்போது தலைவர் இல்லை. டிசம்பருக்குள் தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அமித்ஷா. ஆனால், தமிழக மக்களிடமிருந்து அந்நியப் பட்டு நிற்கும் பா.ஜ.க.வுக்கு தற்போதைய தமிழக பா.ஜ.க. பிரபலங்கள் யாரையும் தலைவராக்க அமித்ஷா விரும்பவில்லை. அதற்கேற்ப தமிழகத்திலிருந்து டெல்லிக்கு தகவல் அனுப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வியூகம் வகுப்பாளர்கள், "தமிழக பா.ஜ.க.வுக்கு இந்துத்துவா பின்னணியில்லாத ஒருவரை தலைவராக்குங்கள். அவர், தமிழக மக்களுக்கு தெரிந்தவராகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் ஜி.கே.வாசனை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வரலாம்' என தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இந்த பின்னணியில்தான், மோடியை சந்திக்க வாசனுக்கு அப்பாயின்ட்மெண்ட் தரப்பட்டது'' என்கின்றனர்.

 

Seshan



மேலும் நம்மிடம் பேசிய கொள்கை வகுப்பாளர்கள், "மோடி வாசன் சந்திப்பில் தமிழக அரசியல் விவகாரங்களை கடந்து, த.மா.கா. -பா.ஜ.க. இணைப்பு பற்றிதான் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இணைப்பு பற்றி பேசிய மோடி, "உங்கள் கட்சியை பா.ஜ.க.வுக்குள் இணைத்து விடுங்கள். பா.ஜ.க.வின் தமிழக தலைவர் பதவியும் ராஜ்யசபா எம்.பி.யும் உங்களுக்கு கிடைக்கும்' என தனது விருப்பத்தை மோடி சொல்ல... கட்சியை பா.ஜ.க.வுடன் இணைப்பதை ஏற்க மறுத்துள்ளார் வாசன். அதேசமயம், "தோழமை கட்சியாகவே இருந்து உங்களுக்கு நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறேன். தோழமை கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரும் வகையில் என்னை அமைச்சராக்குங்கள். உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன்' என சொல்லியிருக்கிறார் வாசன். அப்போது, ""பா.ஜ.க.வில் நீங்கள் இணைவதன் மூலம்தான் உங்களை அமைச்சராக்க முடியும்' என மோடி சொல்ல, "அப்படியானால், சுதந்திரமாக நான் இயங்கும் வகையில் அனைத்து அதிகாரங்களும் எனக்கு கிடைக்குமா?' என வாசன் கேட்க, "என்ன சொல்ல வருகிறார்...' என்கிற தொனியில் வாசனை நிமிர்ந்து பார்த்தார் மோடி.

அதாவது, "தமிழக பா.ஜ.க.வின் சீனியர் லீடர் களையெல்லாம் பா.ஜ.க.வில் ஆளுமை செலுத்தாத வகையில் அவர்களை தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிடுங்கள். தமிழிசை சௌந்திரராஜனை தெலுங்கானா கவர்னராக நியமித்தது போல மற்றவர்களுக்கும் பதவிகள் கொடுத்துவிட்டால் அவர்களின் ஆளுமை தமிழக பா.ஜ.க.வில் இருக்காது. அப்போது சுதந்திரமாக என்னால் செயல்படமுடியும்' என சாதுர்யமாக காய்களை நகர்த்தியிருக்கிறார் வாசன். ஆனால் அவரது விருப்பத்தை ஏற்க மறுத்த மோடி, "அடுத்த வாரம் அமித்ஷாவை சந்தியுங்கள். அவர் உங்களிடம் விவாதிப்பார்' எனச் சொல்லி சந்திப்பை முடித்துக்கொண்டார்'' ‘-என சந்திப்பில் நடந்தவற்றை விவரித்தனர்.

மோடியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வாசன், "த.மா.கா.வை பா.ஜ.க.வில் இணைப்பதெல்லாம் ஹேஸ்யம், ஜோஸ்யம் தான். இது மரியாதை நிமித்தமான சந்திப்பைத் தவிர வேறில்லை'' என சொல்லிவிட்டுப் பறந்தார்.

 

tmc



"வாசனை சுற்றி என்ன நடக்கிறது?' என த.மா.கா. தரப்பில் விசாரித்தபோது, "த.மா.கா. மாநில கட்சி என்றாலும் முதல்வர் வேட்பாளர் கனவு வாசனுக்கு கிடையாது. அவரை பொறுத்தவரை, டெல்லி அரசியலில் கோலோச்ச வேண்டுமென்பதுதான் விருப்பம். அதற்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும். அந்த பதவியும் அதிகாரமும் இருந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் தமாகாவை காப்பாற்ற முடியும். ஆனால், இனி 5 ஆண்டுகள் வரை லோக்சபா தேர்தலுக்கு வாய்ப்பில்லை. அதுவரை இப்போதைய நிலையே த.மா.கா.வுக்கு இருக்கும்பட்சத்தில் அதன் அரசியல் எதிர்காலம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.

உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பிரதான கட்சியின் கூட்டணியில் போட்டியிட்டாலும் த.மா.கா. ஜெயிக்கும்ங்கிறதுக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால், வாசனுக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது. தேர்தல் மூலம் அது சாத்தியப் படாதென்பதால், ராஜ்யசபா எம்.பி.யானால் மட்டுமே தனது விருப்பம் நிறைவேறும் என்கிற மனநிலையில் இருக்கிறார் வாசன். ராஜ்யசபா சீட் வேண்டுமெனில் அது பா.ஜ.க.வால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் பா.ஜ.க.வை நோக்கி சில காய்களை அண்மைக்காலமாக நகர்த்தியிருந்தார். ஆனால், பா.ஜ.க.வில் இணைந்தால் மட்டுமே வாசனின் விருப்பத்தை மோடியும் அமித்ஷாவும் ஏற்பார்கள். அதனால் இணைப்பு விசயத்தில் வாசன் இன்னும் முடிவெடுக்கவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் த.மா.கா. மூத்த தலைவர்கள் சிலர்.

 

Ayodhya



 

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார்.