Skip to main content

பாஜகவிற்கு வாங்க அமைச்சர் பதவி... எனக்கு அதிகாரம் வேணும்... மோடி, வாசன் சந்திப்பில் வெளிவராத தகவல்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

இரண்டு சந்திப்புகள் தமிழக அரசியலில் விவாதிக்கப்படுகின்றன. ஒன்று, பிரதமர் மோடி -த.மா.கா. தலைவர் வாசன் சந்திப்பு. அடுத்தது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு. கவர்னரை சந்திக்க எடப்பாடி கிளம்புகிறார் என தகவல் பரவியதும் அமைச்சர்கள் பலருக்கும் கிலியை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சரவை மாற்றம் இல்லை என தெரிந்ததும்தான் அமைச்சர்கள் பலரும் பெருமூச்சு விட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மோடியை சந்திக்க வாசன் டெல்லி பறந்துள்ளார் என்கிற செய்தி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பா.ஜ.க.வுடன் த.மா.கா.வை இணைக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே மோடியை வாசன் சந்திக்கிறார் என்கிற அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 6-ந் தேதி பிரதமர் இல்லத்தில் மோடியை சந்தித்தார் வாசன். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.


முதன்முறையாக மோடி பிரதமரானதும் (2014) பா.ஜ.க. எடுத்த முதல் அஸ்திரம் காங்கிரஸ் கட்சியை பலகீனப்படுத்துவதுதான். அதற்கேற்ப காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக காங்கிரஸை உடைப்பது என்பது முதல் அஜெண்டா. அந்த வகையில், மோடியின் வலையில் முதலில் சிக்கியவர் ஜி.கே.வாசன். குஜராத் தொழிலதிபர் அதானி மூலம் தமிழக காங்கிரஸிலிருந்து வாசனை வெளியேற வைத்து காங்கிரஸை உடைத்தது பா.ஜ.க., காங்கிரசுக்கு எதிராக மீண்டும் த.மா.கா.வை கட்டி எழுப்பினார் வாசன்.

 

 

bjp



ஆனால், "தி.மு.க. -காங்கிரஸ் கூட் டணி வலுவாக இருந்ததால் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. தலைமையும் வாசனும் போட்ட திட்டம் சோபிக்கவில்லை. குறிப்பாக, த.மா.கா. மீண்டும் உருவானதற்குப் பிறகு வந்த எந்த தேர்தலிலும் வாசன் அதிரடி அரசியல் செய்யுமளவுக்கு தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. இதனால், காங்கிரசை உடைத்து வாசனுடன் த.மா.கா.வுக்கு வந்த அரசியல் வி.ஐ.பி.க்கள் பலர் தாய்க் கட்சியான காங்கிரசுக்கும் மாற்று கட்சிகளுக்கும் தாவினார்கள். இதனால், வாசனின் அரசியல் செல்வாக்கில் மந்தநிலை ஏற்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் வாசன். அப்போது, மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிடலாமா என்கிற யோசனை அங்கு ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் இது குறித்துப் பேசினார் முகர்ஜி. வாசனை சேர்த்துக்கொள்ள சோனியா விரும்பினாலும், ராகுல்காந்தி ஏற்கவில்லை. "பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் சேர்த்துக் கொள்கிறோம்... வாசனை மட்டும் ஏற்க முடியாது' என கறாராக சொல்லிவிட்டார் ராகுல்காந்தி. இதனால் மீண்டும் காங்கிரஸ் த.மா.கா. இணைப்பு நடக்கவில்லை. இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து மீண்டும் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் வாசன். அப்போது, பா.ஜ.க.வில் இணைந்துவிட யோசனை சொன்னார் முகர்ஜி. அதனை அப்போது வாசன் ஏற்கவில்லை.

 

 

bjp



அதேசமயம், ரஜினியை அரசியலுக்குள் கொண்டுவந்து அவரை பா.ஜ.க.வில் இணைக்க வைக்கும் முயற்சியை பா.ஜ.க. தேசிய தலைமை எடுத்துக்கொண்டிருந்ததால் வாசன் குறித்து பா.ஜ. க.வும் யோசிக்கவில்லை. பா.ஜ.க.வின் திட்டத்துக்கு ரஜினி ஒத்துழைக்காத நிலையில்தான், நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா.வையும் தங்கள் கூட் டணிக்குள் கொண்டு வந்தது பா.ஜ.க.. அதிலிருந்தே மோடி மீது நம்பிக்கை வைத்தார் வாசன். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு நடந்துள்ளது. மோடியும் வாசனும் தங்களுக்குரிய விருப்பத்தை விவாதித்திருக்கிறார்கள். விரைவில், பா.ஜ.க.வில் வாசன் இணைவார்'' என்கின்றனர் ராகுல்காந்தியின் அறிவுஜீவி குழுவில் உள்ள தமிழக காங்கிரஸ் பிரபலங்கள்.

பா.ஜ.க.வின் தேசிய தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் கொள்கை வகுப்பாளர்களிடம் விசாரித்தபோது, "இரண்டாவது முறையாக மோடி பிரதமரானதைத் தொடர்ந்து அவரை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்தார் வாசன். அந்த அப்பாயின்ட்மெண்ட் நிலுவையிலேயே இருந்தது. சமீபத்தில் வாசனின் அப்பாயின்ட் மெண்ட் குறித்து மோடியிடம் பிரணாப் முகர்ஜி நினைவுப்படுத்தியிருக்கிறார். அந்த சமயத்தில்தான் சீன அதிபரை சந்திக்க சென்னை வந்த மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்த வாசனிடம், "டெல்லிக்கு வாங்க; சந்திக்கலாம் ; அப்பாயின்ட்மெண்ட் என்னைக்குன்னு உங்களுக்கு தகவல் வரும்' என சொல்லிவிட்டுப் போனார் மோடி. இதற்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது.

அதாவது, தமிழக பா.ஜ.க.வுக்கு தற்போது தலைவர் இல்லை. டிசம்பருக்குள் தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அமித்ஷா. ஆனால், தமிழக மக்களிடமிருந்து அந்நியப் பட்டு நிற்கும் பா.ஜ.க.வுக்கு தற்போதைய தமிழக பா.ஜ.க. பிரபலங்கள் யாரையும் தலைவராக்க அமித்ஷா விரும்பவில்லை. அதற்கேற்ப தமிழகத்திலிருந்து டெல்லிக்கு தகவல் அனுப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வியூகம் வகுப்பாளர்கள், "தமிழக பா.ஜ.க.வுக்கு இந்துத்துவா பின்னணியில்லாத ஒருவரை தலைவராக்குங்கள். அவர், தமிழக மக்களுக்கு தெரிந்தவராகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் ஜி.கே.வாசனை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வரலாம்' என தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இந்த பின்னணியில்தான், மோடியை சந்திக்க வாசனுக்கு அப்பாயின்ட்மெண்ட் தரப்பட்டது'' என்கின்றனர்.

 

Seshan



மேலும் நம்மிடம் பேசிய கொள்கை வகுப்பாளர்கள், "மோடி வாசன் சந்திப்பில் தமிழக அரசியல் விவகாரங்களை கடந்து, த.மா.கா. -பா.ஜ.க. இணைப்பு பற்றிதான் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இணைப்பு பற்றி பேசிய மோடி, "உங்கள் கட்சியை பா.ஜ.க.வுக்குள் இணைத்து விடுங்கள். பா.ஜ.க.வின் தமிழக தலைவர் பதவியும் ராஜ்யசபா எம்.பி.யும் உங்களுக்கு கிடைக்கும்' என தனது விருப்பத்தை மோடி சொல்ல... கட்சியை பா.ஜ.க.வுடன் இணைப்பதை ஏற்க மறுத்துள்ளார் வாசன். அதேசமயம், "தோழமை கட்சியாகவே இருந்து உங்களுக்கு நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறேன். தோழமை கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரும் வகையில் என்னை அமைச்சராக்குங்கள். உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன்' என சொல்லியிருக்கிறார் வாசன். அப்போது, ""பா.ஜ.க.வில் நீங்கள் இணைவதன் மூலம்தான் உங்களை அமைச்சராக்க முடியும்' என மோடி சொல்ல, "அப்படியானால், சுதந்திரமாக நான் இயங்கும் வகையில் அனைத்து அதிகாரங்களும் எனக்கு கிடைக்குமா?' என வாசன் கேட்க, "என்ன சொல்ல வருகிறார்...' என்கிற தொனியில் வாசனை நிமிர்ந்து பார்த்தார் மோடி.

அதாவது, "தமிழக பா.ஜ.க.வின் சீனியர் லீடர் களையெல்லாம் பா.ஜ.க.வில் ஆளுமை செலுத்தாத வகையில் அவர்களை தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிடுங்கள். தமிழிசை சௌந்திரராஜனை தெலுங்கானா கவர்னராக நியமித்தது போல மற்றவர்களுக்கும் பதவிகள் கொடுத்துவிட்டால் அவர்களின் ஆளுமை தமிழக பா.ஜ.க.வில் இருக்காது. அப்போது சுதந்திரமாக என்னால் செயல்படமுடியும்' என சாதுர்யமாக காய்களை நகர்த்தியிருக்கிறார் வாசன். ஆனால் அவரது விருப்பத்தை ஏற்க மறுத்த மோடி, "அடுத்த வாரம் அமித்ஷாவை சந்தியுங்கள். அவர் உங்களிடம் விவாதிப்பார்' எனச் சொல்லி சந்திப்பை முடித்துக்கொண்டார்'' ‘-என சந்திப்பில் நடந்தவற்றை விவரித்தனர்.

மோடியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வாசன், "த.மா.கா.வை பா.ஜ.க.வில் இணைப்பதெல்லாம் ஹேஸ்யம், ஜோஸ்யம் தான். இது மரியாதை நிமித்தமான சந்திப்பைத் தவிர வேறில்லை'' என சொல்லிவிட்டுப் பறந்தார்.

 

tmc



"வாசனை சுற்றி என்ன நடக்கிறது?' என த.மா.கா. தரப்பில் விசாரித்தபோது, "த.மா.கா. மாநில கட்சி என்றாலும் முதல்வர் வேட்பாளர் கனவு வாசனுக்கு கிடையாது. அவரை பொறுத்தவரை, டெல்லி அரசியலில் கோலோச்ச வேண்டுமென்பதுதான் விருப்பம். அதற்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும். அந்த பதவியும் அதிகாரமும் இருந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் தமாகாவை காப்பாற்ற முடியும். ஆனால், இனி 5 ஆண்டுகள் வரை லோக்சபா தேர்தலுக்கு வாய்ப்பில்லை. அதுவரை இப்போதைய நிலையே த.மா.கா.வுக்கு இருக்கும்பட்சத்தில் அதன் அரசியல் எதிர்காலம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.

உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பிரதான கட்சியின் கூட்டணியில் போட்டியிட்டாலும் த.மா.கா. ஜெயிக்கும்ங்கிறதுக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால், வாசனுக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது. தேர்தல் மூலம் அது சாத்தியப் படாதென்பதால், ராஜ்யசபா எம்.பி.யானால் மட்டுமே தனது விருப்பம் நிறைவேறும் என்கிற மனநிலையில் இருக்கிறார் வாசன். ராஜ்யசபா சீட் வேண்டுமெனில் அது பா.ஜ.க.வால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் பா.ஜ.க.வை நோக்கி சில காய்களை அண்மைக்காலமாக நகர்த்தியிருந்தார். ஆனால், பா.ஜ.க.வில் இணைந்தால் மட்டுமே வாசனின் விருப்பத்தை மோடியும் அமித்ஷாவும் ஏற்பார்கள். அதனால் இணைப்பு விசயத்தில் வாசன் இன்னும் முடிவெடுக்கவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் த.மா.கா. மூத்த தலைவர்கள் சிலர்.

 

Ayodhya



 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.