Skip to main content

மகனுக்கு மந்திரி பதவி வாங்கினால்,அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இருக்க மாட்டார்!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், அ.தி.மு.க. கூட்டணியில் பயங்கரமான விரிசலை உருவாக்கியுள்ளது. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க.வே அடுத்து என்ன ஆகும் என கதிகலங்கிப்போய் நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது' என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

 

ops



ஒரு காரின் கண்ணாடி உடைந்ததுபோல் இருக்கிறது அ.தி.மு.க. கார் கண்ணாடி என்பது முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல் உடனே உடைந்துவிடாது. கார் கண்ணாடி உடைந்தாலும் அது உடனடியாகத் தெரியாது. காரில் ஏற்படும் சிறு அசைவுகள் உடைந்த பலமணி நேரம் கழித்து கார் கண்ணாடியை உப்புக் கற்களைப் போல கொட்ட வைத்துவிடும். அ.தி.மு.க. என்கிற கார் கண்ணாடியை உடைத்திருப்பது மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுவது தொடர்பாக நடந்த போராட்டங்கள்தான் என்கிறார்கள்.

 

ops



நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமை நடந்துகொண்ட விதம், அமித்ஷாவுக்கும் மோடிக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசியது என்கிற கருத்தை ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் மறுத்திருக்கிறார் அமித்ஷா. "அ.தி.மு.க. எதிர்ப்பலையால் பா.ஜ.க. இங்கே ஜெயிக்க முடியவில்லை' என்கிறார் குரு மூர்த்தி. ஏற்கனவே மாநில ஆட்சியாளர்களை இம்போடென்ட்  என்ற குருமூர்த்தியின் கருத்துக்குப் பதில் பேசாதது போலவே அ.தி.மு.க.வினர் மவுனம் சாதித்தாலும் குருமூர்த்தியின் இந்தக் கருத்து பா.ஜ.க.வின் தலைமையில் எதிரொலித்திருக்கிறது.

 

eps



தமிழ்நாட்டிற்கு மோடி வந்தபோது கூடிய பெருங்கூட்டம் ஏன் வாக்குகளாக மாறவில்லை என மோடி கேட்கும் கேள்விக்கு அமித்ஷாவால் கூட பதில் சொல்ல முடியவில்லை. "தமிழகத்தில் எனக்கெதிரான அலை வீசியது என்பது உண்மையென்றால், நான் இந்தியாவில் மற்ற இடங்களில் பேசிய கூட்டங்களை விட அதிகமான மக்கள் திரள் தமிழகத்தில் பேசிய கூட்டத்திற்கு எப்படி வந்தது' என மோடி கேட்ட கேள்விக்கு தமிழக பா.ஜ.க.வினர் பதிலளித்துள்ளனர். அந்தப் பதில், புதிய அமைச்சரவை குறித்து கூட்டிய கூட்டத்தில் எதிரொலித்தது.

 

admk



எடப்பாடி பழனிச்சாமி, பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தலுக்கு சற்று முன்புவரை தம்பிதுரை அன்வர்ராஜா ஆகியோரை பா.ஜ.க.விற்கு எதிராகப் பேசவைத்தார். அத்துடன் எடப்பாடி, "பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது' என கோரிக்கை வைத்தார். அவரது விருப்பத்திற்கு மாறாக சட்டமன்ற இடைத்தேர்தலை இரண்டுகட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அந்த இடைத்தேர்தலுக் கேற்றவாறு பா.ஜ.க.வை கேட்காமலே பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தார். அத்துடன் எடப்பாடியின் முழுக் கவனமும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதிலேயே இருந்தது. பா.ஜ.க. எட்டு எம்.பி. தொகுதிகளைக் கேட்டது. அதை தர மறுத்தார். பா.ஜ.க. போட்டி போட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் வேலை செய்யவில்லை. அ.தி.மு.க.வின் வாக்குகளும் பா.ஜ.க.விற்கு விழவில்லை. இவ்வளவு குழிபறிப்பு வேலைகளையும் செய்த எடப்பாடி, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மந்திரிசபையில் இடம் கேட்கிறார். அ.தி.மு.க.வை சேர்க்கவே கூடாது என கடும் கண்டனத்தை தமிழக பா.ஜ.க. அகில இந்திய தலைமையிடம் பதிவு செய்தது.


தமிழக பா.ஜ.க.வின் எதிர்ப்பு அதுவரை மத்திய மந்திரிசபையில் வைத்திலிங்கத்திற்கும், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கும் இடம் என பேசிவந்த பா.ஜ.க. மேலிடத்தின் குரலை மாற்றி விட்டது. "ஒரு இடம்தான், அதுவும் தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ். மகனுக்குத்தான் தரவேண்டும்' என ஆடிட்டர் குருமூர்த்தியின் குரலை பா.ஜ.க. எதிரொலித்தது. உடனே கேரள கவர்னர் சதாசிவம், ஜக்கி வாசுதேவ் ஆகியோர் அமித்ஷாவிடமும் மோடியிடமும் பேசினார்கள். "ஓ.பி.எஸ்.ஸின் மகன் மட்டும் மந்திரியாகக்கூடாது' என்ற சதாசிவம், ஜக்கி ஆகியோரின் குரல் முதலில் எடுபடவில்லை. ஓ.பி.எஸ். மகனுக்கு பா.ஜ.க. மந்திரியாக அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் அ.தி.மு.க.வில் மோதல் பெரிதானது.


அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் துணையுடன் ஓ.பி.எஸ்.ஸுடன் நேரடியாக மோதினார் எடப்பாடி. இந்த மோதல் மிகக்கடுமையாக நடந்தது. ஒரு கட்டத்தில் தேனியில் வெற்றிபெற்ற ஒரேயொரு எம்.பி.யான ரவீந்திரநாத்குமார் பா.ஜ.க.வில் சேருகிறார். அவருக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்கிற அளவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். "பா.ஜ.க.வில் சேர்ந்து ஓ.பி.எஸ். மகன் மந்திரி பதவி வாங்கினால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பி.எஸ். இருக்க மாட்டார். அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடுவோம்' என எடப்பாடி தரப்பிலிருந்து எதிர் சவால் விடப்பட்டது. தேர்தல் முடிவு வந்தவுடன் தமிழகத்தில் கூட்டணி பிளவு வரவேண்டாம் என நினைத்த பா.ஜ.க., அமைச்சரவையில் அ.தி.மு.க. வைச் சேர்க்கும் எண்ணத்தையே கைவிட்டது'' என அமைச்சரவை உருவாக்கத்தின்போது அ.தி. மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நடந்த மோதலைச் சொல்கிறது டெல்லி வட்டாரம்.

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.