Skip to main content

 நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதா ?

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கையின்மையும் வெறுப்பும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் அதிகரிக்கும்போது அவர்களுக்கு "நோட்டா' மீதான மோகம் அதிகரிக்கிறது. ஆனால், "நோட்டாவுக்கு அளிக்கும் ஓட்டு பயனற்றதா?' என்கிற கேள்வி வாக்காளர்களிடமும், நேர்மையான தேர்தலுக்காகப் போராடும் சமூக அமைப்புகளிடமும் எதிரொலிக்கின்றன.

தேர்தல் நன்னடத்தை விதிகள் (1961) செக்ஷன் 49(ஓ)-வின்படி, எந்த ஒரு வேட்பாளருக்கும் "வாக்களிக்க விருப்பமில்லை' என தெரிவிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, படிவம் 17-ஏ மூலம் கையெழுத்திட்டு வாக்காளர்கள் தனது வாக்கைப் பதிவு செய்யலாம். ஆனால், இப்படியொரு நடைமுறை இருப்பது வெகுஜன மக்களுக்கு  நீண்டகாலம் தெரியாமல் இருக்கிறது. 

 

nota



இந்த நிலையில், 49(ஓ) பிரிவு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், ""யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நினைக்கும் வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா (சஞபஆ - சர்ய்  ஞச்  பட்ங் ஆக்ஷர்ஸ்ங் ) பதிவுக்கான பட்டனை இணைக்க வேண்டும்'' என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 2013-ல் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனையடுத்து 2013-க்கு பிறகு நடந்த அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும், 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நோட்டாவை அறிமுகப்படுத்தியதுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதற்கான இடத்தையும் அளித்தது தேர்தல் ஆணையம். 

 

election commision



2013-க்கு பிறகு நாடுமுழுவதும் நடந்த தேர்தல்களை கணக்கிடும்போது சராசரியாக 1 சதவீத வாக்கு  நோட்டாவுக்கு விழுந்துள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டுமே பதிவான ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெரியளவிளான விவாதத்தை உருவாக்கியது. நோட்டா வாக்குகள் ஏற்படுத்திய அந்த தாக்கம், தற்கால அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மீதான மக்களின் வெறுப்புணர்வை  பிரதிபலிப்பதாகவே இருந்தன.

 

nota

 

இந்தச் சூழலில், நோட்டா குறித்த பொதுநல வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் 2017-ல் நடந்தபோது, "35 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள்  நோட்டாவுக்கு பதிவானால், போட்டியிடும் வேட்பாளர்கள் எவர்மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக கருதவேண்டும். அதனால் அந்த தொகுதியின் முடிவுகளை செல்லாது என அறிவிப்பதுடன் மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்'' என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில், நோட்டாவுக்கு விழும் வாக்குகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுக்கள் குவிந்தபடி இருக்கின்றன. இதற்கு காரணம், வெகுஜன மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் தேர்தல் ஆணையம், அதன் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால்தான். 

இதனால், "நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதா?' என்கிற கேள்வி தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் பரவலாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. நோட்டா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும்’இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.செல்வராஜிடம் இது குறித்து விவாதித்தபோது, ""மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள ஒவ்வொரு சின்னத்துக்கும் பின்னால் அரசியல் கட்சியைச் சார்ந்த ஒரு நபரோ அல்லது தனி நபரோ இருப்பர். நோட்டாவுக்குப் பின்னால் எந்தவொரு தனி நபரும் இல்லை என்பதால் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயம் என சொல்கிறார்கள். இது ஏற்புடையதல்ல.  தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சின்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அப்படியானால் மற்ற சின்னங்கள் பெற்ற குறைந்த வாக்குகள் விரயமானவை என்றா சொல்லப்படுகிறது... இல்லையே! "வெற்றிபெற்ற சின்னத்தைத் தவிர மற்ற சின்னங்களுக்கு விழுந்த வாக்குகள் விரயம் என சொன்னால், நோட்டா வாக்குகளையும் விரயம் என சொல்லலாம். 

நோட்டாவுக்குப் பின்னால் தனி நபர் யாரும் இல்லை என்பதற்காக நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை மதிப்பிழக்க செய்யக் கூடாது. ஏனெனில், வாக்களிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் நடைமுறை விதிகளின் பிரிவு 49(ஓ)-ன் படியும்  வாக்கு எந்திரத்தில் நோட்டாவை ஒரு சின்னமாக உருவாக்கியது தேர்தல் ஆணையம். நோட்டா சின்னம் அதிக வாக்குகளைப் பெற்றால் அதனை வெற்றிபெற்றதாக அறிவிப்பதுதான் சட்டபூர்வமானது. 

இதிலுள்ள ஒரே சிக்கல், நோட்டாவுக்கு பின்னால் உரிமைக் கோரும் தனிநபர் யாரும் இல்லை என்பதுதான். தீர்வை வழங்கவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.  ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவர் மீதும் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை இழக்கும்போது அம்மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆளே இல்லாத நோட்டாவுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டால்தான், நேர்மையான வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் முன்வரும். அதனால், நோட்டா உருவாவதற்கு காரணமாக இருந்த உச்சநீதிமன்றம், நோட்டாவுக்கு விழும் வாக்குகளுக்கு சட்ட அங்கீகாரத்தைத் தர முயற்சிக்க வேண்டும். அதற்கான தீர்வினைக் கண்டறிவதும் உச்சநீதிமன்றத்தின் கடமை.. ஆக, நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதல்ல; மாற்றத்திற்கான ஒரு புரட்சி'' ’ என்கிறார் மிக அழுத்தமாக.
 

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.

Next Story

வேட்புமனு தாக்கல் செய்த தயாநிதி மாறன் (படங்கள்)

Published on 27/03/2024 | Edited on 27/03/2024

 

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஸ்டார் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று மனுத்தாக்கல் செய்தார். செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகம் 8ல் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிற்றரசு வெற்றியழகன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.