Skip to main content

"ஜெயலலிதா நினைத்திருந்தால் முன்பே விடுதலை செய்திருக்கலாம் ; கலைஞர் 50 வருடத்துக்கு முன்பே பிரிவு 161ஐ பயன்படுத்தி..." - கோவி. லெனின் பேட்டி

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

j

 

கடந்த பல வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்தவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் அவர்களின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றன. காலம் தாழ்த்தி இந்த தீர்ப்பு கிடைத்திருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தாலும் அதிமுக இந்த விவகாரத்தில் திமுகவை விமர்சனம் செய்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவைக் கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

ஏழு பேர் விடுதலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவை விமர்சனம் செய்துள்ளார். ஊர்ல கல்யாணம் என்றால் மார்பில் சந்தனம் தடவிக்கிறதுதான் திமுக வேலை என்று விமர்சனம் செய்துள்ளார். நாங்கள்தான் அவர்கள் விடுதலைக்காக முதலில் முயற்சி எடுத்தோம். ஆனால் திமுக அதற்கு உரிமை கொண்டாடுகிறது என்று கூறியுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

முதல்வர் எந்த இடத்திலேயும் அவர்கள் விடுதலைக்கு நாங்கள் மட்டுமே காரணம் என்று கூறவில்லை. காமாலை கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல் அவரின் பேச்சு இருக்கிறது. அதற்கு ஜெயக்குமாருக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைச் சொல்கிறேன். இவர்கள் சொல்வதைப் போல் ஜெயலலிதா எப்போது இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் போட்டார்கள். கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, இவர்களின் விடுதலையை அப்ராபிரியட்(appropriate) அரசு மேற்கொள்ளலாம் என்று தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறினார். 

 

இந்தத் தீர்ப்பு வந்த உடனேயே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தைப் போட்டார்கள். அதாவது 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அதன் பிறகு 2016ம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்தார். இத்தனை ஆண்டு இடைவெளியில் என்ன காரணத்திற்காக அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் தற்போது அனுப்பப்பட்டதை போல 161வது சட்டப்பிரிவைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. நாங்கள் அவர்களை விடுதலை செய்கிறோம், மூன்று நாட்களுக்குள் உங்கள் முடிவைக் கூறுங்கள் என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்புகிறார். 

 

இதற்குப் பதிலளித்த மத்திய அரசு உங்களுக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை. இந்த வழக்கு சிபிஐ விசாரித்த வழக்கு, எனவே எங்களுக்குத்தான் இந்த வழக்கில் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் இந்த வழக்கிலேயே வரக்கூடாது என்பது மாதிரி தன்னுடைய பதிலைத் தெரிவித்தது. ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் அப்போதே செய்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. கலைஞர் கூட அப்போதே அதைக் கூறினார். ஏனென்றால் 1970களில் தோழர் தியாகு போன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 161வது பரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்திருந்தார் கலைஞர். அதனால்தான், ஏன் 161ஐ பயன்படுத்தாமல் கடிதம் அனுப்புகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். இன்றைக்கு மீண்டும் திமுக ஆட்சியில் அதைச் செய்து முடித்திருக்கிறார்கள்.

 


 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.