Skip to main content

"அமித்ஷா கணக்கு தமிழ்நாட்டில் எடுபடாது; பாஜக பெரிய கட்சி என்றால் தனியா நிக்கட்டும் மோதி பாப்போம்..." - துரை வைகோ

Published on 14/11/2022 | Edited on 15/11/2022

 

lkj


தமிழகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. அதனை பாஜக பயன்படுத்தி வரும் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்" என்ற தொனியில் பேசியதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம், நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " பாஜக கூறுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வரும் சூழ்நிலையில் அதற்கான தேவை ஏற்படவில்லை. 

 

குறிப்பாக அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களை அமித்ஷா விமர்சித்துப் பேசியுள்ளார். அவர்கள் இல்லை என்றால் இந்த சட்டமன்ற தேர்தலில் இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட அவர்களால் பெற முடியாது. அப்படி இருக்கையில் அதிமுகவை அவர்கள் விமர்சிப்பதை எப்படி அந்தக் கட்சியினர் ஏற்றுக்கொள்வார்கள். அதிமுக கூட்டணியால் நாங்கள் வெற்றி பெறவில்லை; எங்கள் சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றோம் என்றெல்லாம் தற்போது புது கோஷ்டி ஒன்று கிளம்பியுள்ளது. அவர்கள் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நிற்க வேண்டியதுதானே? இவர்களின் உண்மையான பலத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு ஒரு போதும் பாஜகவினர் தயார் இல்லை.

 

இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் தற்போது அதிமுக பாஜகவின் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரை சமூகநீதியில் அவர்கள் யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் தற்போது அவர்கள் பாஜகவின் நிலைப்பாட்டுக்குச் சென்றுள்ளது அவர்களுக்குக் கட்சி ரீதியாகவே பாதிப்பை ஏற்படுத்தும். மிகப்பெரிய தவற்றை தற்போது அதிமுக செய்துள்ளது. தவறான முன்னுதாரணத்தை அவர்கள் ஏற்படுத்தி விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் அதிமுகவுக்கு மாற்றாக பாஜகவைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை அவர்களே ஏற்படுத்தி விடுவார்கள்.

 

தமிழகத்தில் வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் நாம் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளதைப் பற்றி அனைவரும் கேட்கிறார்கள். நான் முன்பே சொன்னதுபோல அதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட அவர்கள் அதிமுகவின் துணையோடு பெற்றதுதான். தனியாக நின்றால் அவர்கள் மட்டும் தனியாகத் தெருவில் நிற்க வேண்டியதுதான் வரும். அதிமுக சிதைந்திருப்பதாக இவர் சொல்கிறார். ஆனால் அந்த இயக்கத்தைச் சிதைத்ததே இவர்கள்தான். அப்படி அதிமுக சிதறுவதால் கிடைக்கும் பலனை தாங்கள் அறுவடை செய்யலாம் என்று பார்க்கிறார்கள்" என்றார்.
 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.