Skip to main content

"அமித்ஷா நாளைக்கு டெல்லிக்கு அழைத்தால் எடப்பாடி போகமாட்டாரா? ; அவரு என்ன ஜெயலலிதாவா பாஜகவை எதிர்க்க.." - கே.சி. பழனிசாமி பேச்சு

Published on 23/11/2022 | Edited on 24/11/2022

 

ரகத


சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள்., தேவைப்பட்டால் சந்திப்போம்; வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "எடப்பாடி பழனிசாமி பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எடப்பாடி என்னவோ பாஜகவை எதிர்த்துவிட்டது போல அதைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் அவர் வீட்டில் ரெய்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்னும் இரண்டு வார்த்தை அதிகம் பேசியிருந்தால் அடுத்த நாள் காலை அவர் வீட்டில் ரெய்டு வந்திருக்கும்.

 

அவர் சும்மா பம்மாத்து காட்டுகிறார். அவர் யாரையும் எதிர்க்கத் தயாரில்லை. பத்திரிகையாளர் கேட்டதற்கு ஏதோ வாயில் வந்ததைச் சொல்கிறார். அதை எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டு மோடியை எதிர்க்கத் துணிந்துவிட்டார். அமித்ஷாவை எதிர்க்கத் துணிந்துவிட்டார் என்று எடப்பாடியை காலி செய்யும் வேலையைச் சிலர் பார்க்கிறார்கள். அவரின் பேச்சு இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளப்படும் என்று எடப்பாடிக்குத் தெரிந்திருந்தால் அதைப் பற்றி அவர் வாய் திறந்திருக்கவே மாட்டார். அவர் போதாத நேரம் மாட்டிக்கொண்டுள்ளார். நீங்கள் அதைப் பற்றியே பேசிக்கொண்டுள்ளீர்கள்.

 

நாளைக்கே அமித்ஷா டெல்லிக்குக் கூப்பிட்டால் எடப்பாடி போகமாட்டாரா? இல்லை நான் வர மாட்டேன் என்று சொல்லப் போகிறாரா., கூப்பிட்ட அடுத்த சிலமணி நேரத்திலேயே அவர் டெல்லிக்குச் சென்றுகொண்டிருப்பார். அம்மா சொன்னார்களே என் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன், ஏற்கனவே ஒருமுறை தவறு செய்துவிட்டேன், இனிமேல் செய்யமாட்டேன் என்றாரே; அதைப்போல் இவர் ஏதாவது சொன்னாரா? பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி வாய் திறந்து சொல்லவேண்டியது தானே? அவரால் ஒருமுறையாவது இந்த வார்த்தையை உச்சரிக்க முடியுமா? அவர் நினைத்தாலும் முடியாது.

 

கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துள்ளார்கள். நிலைமை அப்படி இருக்கையில் இவர்கள் ஏதோ அவசரத்தில் பேசியதை எல்லாம்  பாஜகவை எதிர்க்கிறார் என்று அவரை பெரிய அரசியல் தலைமை போல் பேசவேண்டிய தேவை இல்லை. அவர் அவ்வாறு எதிர்க்கக் கூடிய தலைவரும் இல்லை, அதற்கான வலிமையும் இல்லை. கட்சி செல்வாக்கு மக்கள் செல்வாக்கு என்ற எதுவுமே அவருக்கு இன்று வரை கிடைக்கவில்லை. ஆகையால் இதை வாய் தவறி என்ற பதத்திலேயே கொண்டு செல்வது எடப்பாடிக்கு நல்லது. எதிர்காலத்தில் பாஜக எல்லா பிரச்சனைகளையும் அதிமுகவில் சரி செய்திருந்தால் அப்போது இவரின் அமித்ஷா பற்றிய இன்றைய கேள்வியைக் கேட்டால் நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்று கூட கேட்பார். ஆகையால் இதைப் பெரிதாகப் பேசத் தேவையில்லை. 

 

கூட்டணிக்கு ஆள் வந்தால் போதும் என்ற மனநிலையில்தான் எடப்பாடி இருக்கிறார். தினகரனை மட்டும்தான் அவர் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நீங்கள் கேட்பதுபோல நான் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்கிறேன் என்றால் கூட அவர் கட்சியில் சேர்ப்பார். இதுதான் அவர் அன்றைக்குக் கூறியது. அவர் பெரிய கொள்கை வாதி கிடையாது. யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்வார். அவருக்கு ஜால்ரா போட வேண்டும்; அப்படிச் செய்தால் பதவி கொடுத்துக் கூடவே வைத்துக்கொள்வார். ஆனால் இது எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பதுதான் அவருக்குள்ள வருத்தம். நீண்ட நாட்கள் இது போவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அந்த வருத்தம் அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால் இந்த மாதிரி எதையாவது கூறிக்கொண்டே நாட்களை ஓட்டுவார்" என்றார்.

 

 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.