Skip to main content

"அமித்ஷா நாளைக்கு டெல்லிக்கு அழைத்தால் எடப்பாடி போகமாட்டாரா? ; அவரு என்ன ஜெயலலிதாவா பாஜகவை எதிர்க்க.." - கே.சி. பழனிசாமி பேச்சு

Published on 23/11/2022 | Edited on 24/11/2022

 

ரகத


சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள்., தேவைப்பட்டால் சந்திப்போம்; வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "எடப்பாடி பழனிசாமி பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எடப்பாடி என்னவோ பாஜகவை எதிர்த்துவிட்டது போல அதைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் அவர் வீட்டில் ரெய்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்னும் இரண்டு வார்த்தை அதிகம் பேசியிருந்தால் அடுத்த நாள் காலை அவர் வீட்டில் ரெய்டு வந்திருக்கும்.

 

அவர் சும்மா பம்மாத்து காட்டுகிறார். அவர் யாரையும் எதிர்க்கத் தயாரில்லை. பத்திரிகையாளர் கேட்டதற்கு ஏதோ வாயில் வந்ததைச் சொல்கிறார். அதை எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டு மோடியை எதிர்க்கத் துணிந்துவிட்டார். அமித்ஷாவை எதிர்க்கத் துணிந்துவிட்டார் என்று எடப்பாடியை காலி செய்யும் வேலையைச் சிலர் பார்க்கிறார்கள். அவரின் பேச்சு இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளப்படும் என்று எடப்பாடிக்குத் தெரிந்திருந்தால் அதைப் பற்றி அவர் வாய் திறந்திருக்கவே மாட்டார். அவர் போதாத நேரம் மாட்டிக்கொண்டுள்ளார். நீங்கள் அதைப் பற்றியே பேசிக்கொண்டுள்ளீர்கள்.

 

நாளைக்கே அமித்ஷா டெல்லிக்குக் கூப்பிட்டால் எடப்பாடி போகமாட்டாரா? இல்லை நான் வர மாட்டேன் என்று சொல்லப் போகிறாரா., கூப்பிட்ட அடுத்த சிலமணி நேரத்திலேயே அவர் டெல்லிக்குச் சென்றுகொண்டிருப்பார். அம்மா சொன்னார்களே என் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன், ஏற்கனவே ஒருமுறை தவறு செய்துவிட்டேன், இனிமேல் செய்யமாட்டேன் என்றாரே; அதைப்போல் இவர் ஏதாவது சொன்னாரா? பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி வாய் திறந்து சொல்லவேண்டியது தானே? அவரால் ஒருமுறையாவது இந்த வார்த்தையை உச்சரிக்க முடியுமா? அவர் நினைத்தாலும் முடியாது.

 

கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துள்ளார்கள். நிலைமை அப்படி இருக்கையில் இவர்கள் ஏதோ அவசரத்தில் பேசியதை எல்லாம்  பாஜகவை எதிர்க்கிறார் என்று அவரை பெரிய அரசியல் தலைமை போல் பேசவேண்டிய தேவை இல்லை. அவர் அவ்வாறு எதிர்க்கக் கூடிய தலைவரும் இல்லை, அதற்கான வலிமையும் இல்லை. கட்சி செல்வாக்கு மக்கள் செல்வாக்கு என்ற எதுவுமே அவருக்கு இன்று வரை கிடைக்கவில்லை. ஆகையால் இதை வாய் தவறி என்ற பதத்திலேயே கொண்டு செல்வது எடப்பாடிக்கு நல்லது. எதிர்காலத்தில் பாஜக எல்லா பிரச்சனைகளையும் அதிமுகவில் சரி செய்திருந்தால் அப்போது இவரின் அமித்ஷா பற்றிய இன்றைய கேள்வியைக் கேட்டால் நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்று கூட கேட்பார். ஆகையால் இதைப் பெரிதாகப் பேசத் தேவையில்லை. 

 

கூட்டணிக்கு ஆள் வந்தால் போதும் என்ற மனநிலையில்தான் எடப்பாடி இருக்கிறார். தினகரனை மட்டும்தான் அவர் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நீங்கள் கேட்பதுபோல நான் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்கிறேன் என்றால் கூட அவர் கட்சியில் சேர்ப்பார். இதுதான் அவர் அன்றைக்குக் கூறியது. அவர் பெரிய கொள்கை வாதி கிடையாது. யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்வார். அவருக்கு ஜால்ரா போட வேண்டும்; அப்படிச் செய்தால் பதவி கொடுத்துக் கூடவே வைத்துக்கொள்வார். ஆனால் இது எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பதுதான் அவருக்குள்ள வருத்தம். நீண்ட நாட்கள் இது போவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அந்த வருத்தம் அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால் இந்த மாதிரி எதையாவது கூறிக்கொண்டே நாட்களை ஓட்டுவார்" என்றார்.

 

 

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.