Skip to main content

”நாங்க என்ன பேனர் வைத்து துதிபாடுகிறோமா, பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோமா?”  - ’நாம் தமிழர் கட்சி’ இடும்பாவனம் கார்த்திக்

Published on 12/09/2020 | Edited on 12/09/2020
kj

 

 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்று நாம் தமிழர் கட்சியில் நடக்கும் உட்கட்சி மோதல்கள். அந்த கட்சியின் முக்கிய பிரபலமான பேராசிரியர் கல்யாண சுந்தரம், சீமானிசம் என்பது கட்சியின் கொள்கை அல்ல, பிரபாகரனிசமே கட்சியின் கொள்கை, ஒரு சினிமா ரசிகனின் மனோபாவம் கட்சிக்குள் அதிகரித்துள்ளது, தனிநபர் துதி பாடுதல் என்பது கட்சிக்கு நல்லதல்ல என்பது போன்ற அதிரடி கருத்துகளை தெரிவித்திருந்தார்.

 

மேலும் தான் 5 மாதங்களாக சீமானை சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இவர் கட்சி தொடர்பாகவும், சீமான் தொடர்பாகவும் தெரிவித்திருந்த சர்ச்சையான கருத்துகள் ஒருபுறம் சென்று கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சியின் மேலும் ஒரு பிரபலமான ராஜீவ் காந்தியும் கட்சியை விட்டு விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில், உள்கட்சி மோதல் பகிரங்கமாக வெளியே தெரிய என்ன காரணம் போன்ற முக்கியமான நம்முடைய கேள்விகளுக்கு அதிரடியான பதிலளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக். அவரின் அதிரடியான பதில்கள்... 

 

நாம் தமிழர் கட்சியை பொறுத்தமட்டில் வளர்ந்துவரும் ஒரு கட்சி. தற்போதைய இளைஞர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற கட்சி. ஆனால் உட்கட்சியில் இருக்கும் பிரச்சனைகள் வெளியே அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இது எல்லா கட்சிகளிடமும் இருந்தாலும், நாம் தமிழர் கட்சியில் தலைவரிடம் பேச முடியவில்லை, கருத்துகளை முன்வைக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக எழுகின்றது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் ஆகியோரின் வெளியேற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அண்ணன் சீமான் அவர்கள் இந்த கரோனா காலம் முழுவதும் கோவையில்தான் இருந்தார். அங்கிருந்து எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். கட்சியை வழிநடத்திக்கொண்டு இருந்தார். இவர் 5 மாதங்களாக அண்ணனை சந்திக்க முயன்றேன் என்கிறார், அதில் உண்மையில்லை. மேலும் நான் அண்ணன் வீட்டிற்கு சென்றும் அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறுகிறார். அவர் வீட்டிற்கு சென்ற யாரையும் அவர் சந்திக்காமல் இருந்தது இல்லை. உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். அவர்தான் ஒரு யூ-ட்யூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கட்சியில் சினிமா மனப்பான்மை இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்படுபவர்களிடம் எல்லாம் நல்ல தொடர்பில் இருந்தார். வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கிருப்பவரிடம் கட்சியில் ஊழல் நடைபெறுகிறது போன்ற அவதூறுகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.

 

அவர் கூறியதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் ஒரு கடிதம் வெளியாகி இருந்ததே, அதுகுறித்து இதுவரை கண்டனம் தெரிவித்தாரா? அதில் என்ன தெரிவித்திருக்கிறார்கள், சீமான் அண்ணன் பிறந்த நாள் கொண்டாடுகிறார், கட்சியில் சீமானை தவிர வேறு யாரும் தெரியக்கூடாது என கட்சி தலைமை நினைக்கிறது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் இவர் கூறியது போல தெரிவித்துள்ளார்கள். நான் அதைக்கூறவில்லை என்றாலும் அந்த கருத்தில் எனக்கு பாதி உடன்பாடு இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மீதி பாதி கருத்துக்காவது அவர் கண்டனம் தெரிவித்துள்ளாரா, ஏன் அதுபற்றி பேச மறுக்கிறார்? அவர் அந்த நாளிதழில் கூறிய எதுவுமே உண்மையல்ல. ஒரு போதும் தனிமனித புகழ்ச்சி என்பது நாம் தமிழர் கட்சியில் அறவே கிடையாது. தனிமனித புகழ்ச்சி தேவையில்லை, தத்துவத்தை பற்றி பேசு என்றுதான் அண்ணன் எங்களிடம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

 

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நீ என்னை தலைமையேற்காதே, தத்துவத்தை தலைமையேற்று செயல்படு என்றுதான் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியில் நாங்கள் என்ன பேனர் வைத்து துதிபாடுகிறோமா அல்லது பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோமா, இது எதுவுமே நாங்கள் எப்போதும் செய்ததில்லை. இது எங்கள் கட்சியின் கொள்கை கிடையாது. புதிதாக வருபவர்கள் அவ்வாறு செய்தால் கூட அண்ணன் சீமான் அவர்களை கூப்பிட்டு கண்டிப்பார். அப்படி இருக்கையில் எங்கள் கட்சியில் என்ன சினிமா மனப்பான்மை இருப்பதை இவர் கண்டுப்பிடித்து விட்டார் என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் எதையாவது கூற வேண்டும் என்று சொல்வதாகத்தான் இதனை பார்க்க வேண்டும். எனவே கட்சியில் சீமானிசம் என்று இவர்கள் கூறுவது எல்லாம் வடிகட்டிய பொய். முகநூலில் சீமானிசம் என்ற பக்கத்தில் அண்ணன் பேசிய காணொளிகளை தொடர்ந்து வெளியிடுவோம். அதுவும் அவர் மண் சார்ந்து, மக்கள் சார்ந்து பேசிய காணொளிகளாக அது இருக்கும். அதைத்தாண்டி இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் இவர்கள் வெளியேறுவதற்காக கூறும் குற்றச்சாட்டாகவே பார்க்க வேண்டும்.

 

 

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்