Skip to main content

என்னை பா.ஜ.க.காரன் என்று சொன்னால்தான் கேவலமாக நினைப்பேன்! -இயக்குநர் கரு.பழனியப்பன் அதிரடி பேட்டி!

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

தன் சரவெடிப் பேச்சுகளால் திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஈர்க்கப்பட்டவர் இயக்குநர் கரு.பழனியப்பன். சமீபகாலமாக பா.ஜ.க., மோடி எதிர்ப்பை பல்வேறு மேடைகளில் அதிரடியாக பதிவுசெய்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பிஸியாகி இருக்கும் வேளையில், தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கிறார். பரப்புரை களில் பரபரப்பாக இருந்தவரை நக்கீரனுக்காக சில கேள்விகளுடன் சந்தித்தோம்.

 

karu. palaniappan



பா.ஜ.க. எதிர்ப்பு பேசிவந்த நீங்கள் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடை எடுத்திருப்பதற்கான அவசியம் என்ன?
கரு.பழனியப்பன்: பா.ஜ.க. எதிர்ப்பின் மூலமாக அவர்களின் திட்டங்கள், மோசமான செயல்பாடுகளைப் பேசிவந்தோம். அதனால், தேர்தல்காலம் வரும்பொழுது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டாமென்று நினைக்கிறோம். அப்படியானால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவேண்டும் இல்லையா? களத்தில் பலர் இருந்தாலும், இந்தப் பாம்பை அடிப்பதற்கு இந்தக் கம்பு சரியென்று நான் நினைக்கிறேன். 

பா.ஜ.க. எதிர்ப்பை நேரடியாக அரசியல் களத்திற்கு வந்து பேச துணிவு வேண்டும் அல்லவா?
கரு.பழனியப்பன்: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் வாக்காளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அம்மா, கார்ப்பரேட் அரசியல், மோடியின் திட்டங்களால் ஏற்பட்ட நஷ்டங்களைப் பற்றியெல்லாம் பேசுகிறார். ஆக, இது பரப்புரை மட்டுமல்ல. வாக்காளரின் முடிவோடு ஒத்துப்போகக்கூடிய பரஸ்பர உரையாடல்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஜெயிப்பதன் மூலம் தேசம் புனிதமாக மாறிவிடுமா? 
கரு.பழனியப்பன்: எல்லாமே சரியாகி விடாது. ஆனால், ஒருமுகப்பட்டால் குறைந்த பட்சம் பா.ஜ.க.வை முழுமையாக விரட்டிவிட முடியுமல்லவா? நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தருவோம் என்று ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதைக் கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் எனக்கூறி பலரும் சிரித்தார்கள். ஆனால், தி.மு.க.வின் அறிவிப்பு காங்கிரஸ் அறிக்கையில் எதிரொலிக்கிறதே. இங்கு சொன்னால் அங்கு கேட்கும் நிலை இருக்கிறதே. எல்லோரையும் குறைசொல்லிக் கொண்டேதான் இருப்போம் என்றால், தேர்தலை நிறுத்திவிட்டு எல்லோரும் செத்துப்போய் விடலாமா?

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதே?
கரு.பழனியப்பன்: இந்த தேசத்தில் அடுத்த தலைமுறை என்னவாகும் என்பதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். சும்மா திரும்பத்திரும்ப 1957-ல் இருந்து ஆரம்பிக்கக்கூடாது. சாதியையே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் வேளையில், மதத்தைக் கொண்டு பரப்புவது கேடில்லையா? இருபது வருடங்களுக்கு முன்பு எல்லா மதத்தவரும் இணக்கமாக வாழும் சூழல் இருந்தது. எல்லாப் படங்களிலும் இஸ்லாமியன் ஒருவன் நல்ல நண்பனாக இருக்கும் படங்கள் வருமளவுக்கு, அந்த இணக்கம் வாழ்க்கையாக இருந்தது. அப்படியொன்று இல்லாமல் போனதற்கு காரணமே பா.ஜ.க.வினர்தான். நாளை, உங்கள் மொழியிலும், கலாச்சாரத்திலும் கை வைப்பார்கள் என்பது விளங்கவில்லை உங்களுக்கு. 

நடுநிலையான இயக்குநர், பேச்சாளர் என்ற அடையாளத்தை இனி இழந்துவிடுவீர்களே?
கரு.பழனியப்பன்: நான் நடுநிலையானவனாக ஒருபோதும் இருந்ததில்லை. நடுநிலை என்பது தீமையின் பக்கம் நிற்பது என்பதை நம்புகிறவன் நான். எல்லோரும் நல்லவரே என்று நான் பேசியதே இல்லை.  

இனி உங்களைத் தி.மு.க.காரன் என்ற பிம்பத்துக்குள் அடைப்பார்களே?
கரு.பழனியப்பன்: அதனாலென்ன? என்னை பா.ஜ.க.காரன் என்று சொன்னால்தான் கேவலமாக நினைப்பேன். 

தற்சமயம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பேசுகிறீர்கள். ஒரு மாற்று அரசியலை முன்வைக்கும் காலம் வருமா? 
கரு.பழனியப்பன்: அது வரவேண்டுமென விரும்புகிறேன். இந்தியத் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சிறு கட்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதுதான் சரியும்கூட. ஆனால், தற்சமயம் நமக்குக் கிடைத்திருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பின் மூலம், எதிரியை விரட்டியடிப்பதற்கான வழியைத் தேடவேண்டும். தேர்தல் அறிவித்தபிறகு புரட்சி பேசக்கூடாது. மாற்று அரசியல் பேசுகிறவர்கள் தேர்தல் அறிவித்தபின்பே வாய் திறப்போம் என்றால், நோக்கம் வெற்றிபெறாது.  

இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்றனவே?
கரு.பழனியப்பன்: அதற்கான விடை மே 23-ல் தெரிந்துவிடும். ஒருவேளை நான் நினைத்தது நடக்காமல் போனால், இன்னும் தீவிரமாக இதைப்பற்றிப் பேசுவேன். இங்கு அ.தி.மு.க.வின் அருவருக்கத்தக்க ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின் திட்டத்தினால் இறந்துபோன குடிமகளுக்கு இரங்கல்கூட சொல்லாமல் ஒரு முதல்வர் எப்படி இருக்கமுடியும்? அனைவரையும் உறையச் செய்திருக்கும் பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை நக்கீரன்கோபால் தனது பத்திரிகையின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அதில் நடவடிக்கை எடுக்கவேண்டியது முதல்வரின் கடமை. அதைச் செய்யாமல் நக்கீரன்கோபாலை விசாரணை செய்கிறார்கள். இது அவரைப்போல உண்மையை வெளிக்கொண்டுவரத் துடிக்கும் பலருக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிரட்டல். அதனால்தான், செல்லும் இடங்களிலெல்லாம்  நக்கீரனைக் குறிப்பிட்டு பேசுகிறேன். கேட்பவர்கள் புரிந்திருக்கிறார்கள். 

-சந்திப்பு: ஃபெலிக்ஸ்

தொகுப்பு: -ச.ப.மதிவாணன்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.