Skip to main content

எனக்கு முதல்வர் ஒரு பொருட்டே இல்லை.... தலைவர் என்றால் பிரதமர் மோடி மட்டும்தான் - அண்ணாமலை!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

h

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, " இன்றைக்கு காமராஜருக்குத் தமிழக பாஜக சார்பில் நாம் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளோம். ஆனால், அவருக்கு இந்தியாவிலேயே மரியாதை செய்யாத ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது, காங்கிரஸ் கட்சிதான். சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவரான பிறகு ஒருமுறை கூட தமிழகம் வந்து அவரின் மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தவில்லை. ராகுல் காந்தி எத்தனையோ முறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் அவருக்கும் இங்கே வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால் பாஜக அவரை மதிக்கிறது, அவரின் ஆட்சியை நேசிக்கிறது. இப்படிப்பட்ட முதல்வரை நாம் பெற்றிருந்தோம் என்று நாம் பெருமைப்பட வேண்டிய விஷயங்களை அனைவருக்குத் தெரியுமாறு எடுத்துரைக்க வேண்டும். அதை நாங்கள் எப்போதும் செய்வோம்.

 

இன்றைக்கு முதல்வர் கூட விமானத்தில் மதுரை செல்வதாகத் தகவல் வந்துள்ளது. அவர் கூட இங்கே வந்துவிட்டுச் சென்றிருக்கலாம். இன்றைக்கு யார் யாருக்கோ செலவழித்துச் சிலை வைக்கிறார்கள். 39 கோடியில் மணி மண்டபம் அமைக்க இருப்பதாகக் கூறுகிறார்கள். அமைக்கட்டும், நாமும் அதை வரவேற்போம். ஆனால் கர்ம வீரரின் மணி மண்டபம் இங்கே சிதிலமடைந்து கிடக்கிறது.  அதைச் சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லையே என்ற குற்றச்சாட்டைத்தான் நாம் முன்வைக்கிறோம். தமிழக அரசு அதை எடுத்துச் செய்தால் சந்தோஷம். இல்லை என்றால் தமிழக பாரதிய ஜனதா கட்சி எடுத்துச் செய்யும் தயாராக இருக்கிறோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம்.

 

மேலும் செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அவர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா முதல்வர் தொடர்பாகப் பேசிய கருத்துக்குப் பதிலளித்தார். அதில், " ராஜா அண்ணா முதல்வர் தொடர்பாகக் கூறிய கருத்து ஏதோ ரகசியமாகப் பேசிய கருத்து ஒன்றும் அல்ல. முதல்வர் சுயமாகச் சிந்திக்கவில்லை. அவரை யாரோ இயக்குகிறார்கள், அது மிகவும் ஆபத்து என்பதையே அவர் தெரிவித்துள்ளார். எனவே, ராஜா அண்ணா இதை மனதில் வைத்துக் கூறியதற்கு நீங்கள் வேறுபொருள் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. முதலமைச்சர் ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் முன்னரே கேமரா செட் செய்யப்படுகிறது, அலங்கரிக்கப்படுகிறது.  இதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எனவே இப்படி இவர்கள் செய்வதனால் முதல்வர் பலம் வாய்ந்தவர் என்று நாங்கள் நம்பவில்லை. அவரை பார்த்தெல்லாம் பயப்பட ஒன்றுமில்லை. இந்த மாதிரியான விஷயங்கள் பொதுமக்களுக்கு தொந்தரவாகத்தான் மாறும். பாரதப் பிரதமர் மோடி தொடர்பாக ஃபேக் போட்டோக்களை சிலர் பதிவேற்றி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மோடிஜி ஒரு உதாரணம்" என்றார்.

 

 

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Next Story

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tamil Nadu BJP executives meeting with Prime Minister Modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.