Skip to main content

காவிரி டெல்டா பகுதிகளைக் குறிவைக்கும் வேதாந்தா நிறுவனம்!!! அடுத்தக்குறி இதுதான்...

Published on 07/09/2018 | Edited on 07/09/2018

தூத்துக்குடி என்ற ஊரை முத்து நகரம் என்றே பலரும் அறிந்திருந்தனர். உலகளவில் முத்துக்குளிப்பு அதிகமாக நடந்த பகுதி தூத்துக்குடி என்பதால்தான் இந்தப் பெயர் கிடைத்தது. சங்ககாலம் தொட்டே முத்து குளித்துவந்த தூத்துக்குடி பகுதிகளில் தற்போது சங்குக்குளிப்பதுகூட பெரியவிஷயமாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம், தூத்துக்குடி கடலோரத்தை ஆக்கிரமித்திருக்கும் கனிம, ரசாயன  மற்றும் அணுமின் ஆலையங்கள்தான் என்று அறிவியலாளர்கள் சொல்கின்றனர். இதுபோன்ற ஆலைகளால் அங்கிருக்கும் வளங்கள் மட்டும்தான் அழிந்ததா? இல்லை, இல்லை தொன்றுதொட்டு கடலை மட்டுமே நம்பியிருக்கும் கடலோடிகளின் உடல்வளமும் இதனால் அழிந்து வருகிறது.  எங்கு பார்த்தாலும் புற்றுநோய், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு என்று தூத்துக்குடியில் இருக்கின்ற ஆலைகளை சுற்றி வாழும் மக்களின் நிலை இதுதான்.
 

sterlite


தூத்துக்குடியில் இருக்கின்ற ஆலைகளில், தற்போது உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்களுக்கு தெரிந்த ஒன்றாக இருப்பது வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையை தெரியாத தமிழர்கள் இவ்வுலகில் இருக்கவே மாட்டார்கள் என்று கூறுவதற்கு காரணம். இந்த ஆலையை மூடுவதற்காக தூத்துக்குடி மக்கள், இழந்த உயிர்கள் பல. இந்த ஆலையின் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டு பல வருடமாக பலியாகியுள்ளனர். மேலும் இதை மூடுவதற்கு, தமிழக அரசாங்கம் 13 பேர் உயிரை வேட்டையாடியுள்ளது. இதன் பின்னரே இந்த ஆலை சீல் வைக்கப்பட்டதென்றால் வரலாறு கண்டிப்பாக சிரிக்கத்தான் போகிறது. இத்தனை செய்தும் இந்த வேதாந்தா மீண்டும் இந்த ஆலையை திறக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறது.
 

sterlite protest


இந்நிலையில் வேதாந்தா தூத்துக்குடியை அழித்ததை போலவே தமிழக டெல்டா பகுதியையும் நோக்கி வந்துவிட்டது.  தமிழக கடலோர பகுதிகளில் ஏற்கனவே பல வகையான ஆலைகள் காலூன்றி அழித்துவருகின்ற நிலையில், தமிழக டெல்டா பகுதியிலும் காலூன்ற பல ஆலைகள் ஆயுத்தமாகிறது. முதலில் மீத்தேன் திட்டம் என்ற ஒன்று, டெல்டா பகுதிகளில் வருவதாக இருந்தது. மக்களின் விழிப்புணர்வில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இத்திட்டம் கைவிடப்பட்டவுடன் வேறொரு பெயரில் இதேபோன்ற ஒரு திட்டம் டெல்டாவுக்கு வந்தது. அதுதான் ஹைட்ரோகார்பன் திட்டம். பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணெய் வளங்களை உறிஞ்சும் திட்டம். இத்திட்டம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஆற்றுப்படுகைக்கு அருகில் செயல்படுத்தப்போவதாக இருக்கிறது. தமிழகத்தில் புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்த போவதாக இருந்தது. எண்ணெய் எடுத்து அதை சுத்திகரிப்பு செய்யும் தொழிலில் மத்திய அரசின் கீழ் இருக்கும் ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அளவு லாபங்கள் இதுவரை கிடைக்காததால், இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை தனியாருக்கு ஏலத்தின் அடிப்படையில் தருவதாக மத்திய அரசு அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட பகுதியை ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனம், அந்த பகுதியில் கிடைக்கும் எந்த ஒரு எரிபொருளையும் எடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம். லாபத்தில் மத்திய அரசாங்கமும், அந்நிறுவனமும் பங்குபோட்டுக்கொள்ளும் என்று அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ஜென் என்ற நிறுவனம் ஒப்புதல் போட்டது. பின்னர், பல்வேறு போராட்டங்களுக்கு பின் இந்த ஒப்புதல் கைவிடப்பட்டது. கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுப்படுகையைவிட காவேரி ஆற்றுப்படுகையில்தான் பெட்ரோலியம் அதிகமாக இருப்பதால். தமிழக பகுதிக்குத்தான் தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டனர் என்று அப்போது செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.    


ஜென் நிறுவனம் இந்த ஒப்புதலை கைவிட்டுவிட்டது டெல்டா மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால், தற்போது டெல்டா பகுதியில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் போட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த போவதாகவும், அதில் 41 இடங்களில் எரிபொருட்கள் எடுக்க வேதாந்தா நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் மூன்று இடங்களில் இந்த ஹைட்ரோ கார்பன் செயல்பட போவதாகவும் அதில் இரண்டு பகுதிகளில் வேதாந்தாவும், ஒரு இடத்தில் ஒ.என்.ஜி.சி.யும் செயல்படுத்த இருக்கிறது. வேதாந்தா நாகப்பட்டினத்தில் உள்ள இரண்டு எண்ணெய் வளங்கள் உள்ள பகுதியை தேர்ந்தெடுத்துள்ளது என்றும், ஓ.என்.ஜி.சி கடலூர் மாவட்டத்தையும் தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த பகுதிகள் என்று அதிகாரபூர்வ அறிவிப்புகள் இல்லை.  இந்த ஏலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் பிற வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

hydrocarbon


இதுகுறித்து வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால்,"ஓபன் அக்ரியேஜ் லைசன்சிங் பாலிசியில் முதல் கட்டத்திலேயே எங்களுடைய நிறுவனத்திற்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி. எங்கள் மீது அரசாங்கம் நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி. எங்களுக்கு இந்த சிறந்த வாய்ப்பை தந்ததற்காக கடினமாக உழைப்போம். நம்முடைய நாடு எரிசக்தி குறைபாடுடையது மற்றும் ஓபன் அக்ரியேஜ் லைசன்சிங் பாலிசி போன்ற திட்டத்தால் தற்போது இந்தியா இறக்குமதி செய்யும் 80% எரிசக்தி, வருகின்ற 2022 ஆண்டுக்குள் 67% ஆக குறையும் என்பதே நம்முடைய பிரதமரின் பார்வை. மேலும் வளர்ச்சிக்காக இந்தியாவில் முதலீடு செய்வதால், உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 50% பங்களிப்பு செய்ய முடியும். எங்கள் மதிப்புகள் மற்றும் பண்புகளை வைத்து, நாம் தொடர்ந்து நிலைத்திருப்பதில் கவனம் செலுத்துவோம், மக்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்துவோம் மற்றும் சமூகத்தில் இருக்கும் வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.
 

pipes


தமிழ்நாட்டில் இருக்கின்ற கடலோர பரப்புகளை ஏற்கனவே பல ஆலைகள் சூழ்ந்துவிட்டன, இப்போது டெல்டா பகுதிகளுக்கும் வந்துவிட்டது. இந்தியாவுக்கான வளர்ச்சித் திட்டம் இது என்று  சொல்லிதான் ஒவ்வொரு திட்டங்களையும் தொடங்குகிறார்கள், மேலும்  அங்கிருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துவிடும் என்கிறார்கள். ஆனால், இந்த ஆலைகளால், இந்த வளர்ச்சித்தர கூடிய திட்டங்களால் நம்மை சுமக்கும் இந்த நிலத்திற்கும், நமக்கு உயிர்தர கூடிய இயற்கைக்கும், இவ்வளவு ஏன் அந்த வளர்ச்சியை அனுபவிக்கலாம் என்று அசைபோடும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் எவ்வளவு கெடுதல்கள் வரப்போகின்றன என்பதை கடைசிவரை தெரிவிக்க மறுக்கின்றன, இந்த அரசுகளும், ஆலைகளும்.....
 

Next Story

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Date Notification for Cauvery Management Commission Meeting

கடந்த ஜனவரி 18 ஆம் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதத்தில் வினாடிக்கு ஆயிரத்து 182 கன அடி வீதம் 2.76 டிம்சி தண்ணீரும், பிப்ரவரி மாதத்திற்கு 998 கன அடி வீதம் மொத்தமாக 5.26 டிஎம்சி நீர் கார்நாடக அரசின் சார்பில் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

“மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்” - டி.கே.சிவக்குமார்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 D.K.Sivakumar says All arrangements are ready for construction of Mekeadatu Da

தமிழகத்திற்கும், கர்நாடாகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாக பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெற்று வருகிறது. நேற்று (14-12-23) மேல்சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பா.ஜ.க உறுப்பினர் என்.ரவிக்குமார், மேகதாது திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “நமது நீர், நமது உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும். 

நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்த திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது.

அதனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தால் காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனால், நமக்கும் நெருக்கடியான நிலை வராது. கர்நாடகாவில் இந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமலும், பயிர்களை பாதுகாக்கவும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் பின்பற்றினோம். மேகதாது திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கீழ்மட்டத்திலேயே பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, கர்நாடகா அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல கர்நாடகா அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.